20 February 2011

சமூக சீர்திருத்தமும் அரசியலும் காங்கிரஸ் என்றால் என்ன?

தோழர்களே!

சமூக சீர்திருத்தமும் அரசியலும் இரண்டும் ஒன்றேயாகும். நமது நாட்டில் சமூக உயர்வால் ஒரு கூட்டம் மக்கள் பாடுபடாமல் வயிறு வளர்க்கத் தக்கபடி சமூகம் அமைக்கப்பட்டதாலும் அரசியலை அந்த சமூக உயர்வுக்காரர்களே கைவசப்படுத்திக்கொண்டதாலும் சமூக சீர்திருத்தத்தை அடியோடு விட்டுவிட்டு சமூக சீர்திருத்தத்துக்கு சம்பந்தப்படாத அரசியலைப் பற்றி பேசிக் காலம் கழித்து வருகிறார்கள். சமூக சீர்திருத்தமில்லாத அரசியல் சிலரின் சுயநலத்துக்குத்தான் பயன்படுமே தவிர வேறு ஒன்றுக்கும் பயன்படாது. இந்த நாடு சுமார் ஆயிரம் வருஷத்துக்கு முந்தியே சமூக சீர்திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டியதாகும். அந்தப்படி செய்யப் பட்டிருக்குமானால் இன்று இந்தியா, உலகில் ஒரு நாகரீகமுள்ள மக்கள் அடங்கிய நாடாக ஆகி இருக்கும். இந்தியாவில் இன்று உள்ள கீழ் ஜாதி மேல் ஜாதி கொடுமை இருந்திருக்காது. அந்நிய ஆட்சியும் இந்தியாவுக்கு அரை நிமிஷம்கூட வேண்டி இருக்காது.

ஆனால் இன்று இந்தியா ஒரு காட்டுமிராண்டி நிலையில் இருக்கிறது. இங்கு கூடியுள்ள மக்கள் ஆளுக்கு ஒரு வேஷம் கொண்டு இருக்கிறார்கள்; ஆளுக்கு ஒரு ஜாதிப்பேரும் கொண்டு இருக்கிறார்கள். உடையில் பேதம், அணியில் பேதம், குறியில் பேதம், மதத்தில் பேதம், உண்பன தின்பன கிடையாது; கொடுப்பன கொள்வன கிடையாது. ஒவ்வொருவனும் அவனவன் பழமையைப் பேசி பெருமையடைகிறான். வீணாக சமயத்துக்கும் ஜாதிக்கும் சண்டை போடுகிறான். தன்னை அந்நியன் கீழ் ஜாதி என்று கூப்பிடுவதை சகித்துக்கொண்டு மற்றவனை கீழ் ஜாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும் பெருமையும் அடைகிறான். இதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளமாகும்.

தன்னை வேறு ஜாதியான் என்று பிரித்து காட்டுவதில் ஒவ்வொரு வனுக்கும் ஆசை இருக்கிறது. தேச ஒற்றுமையும். சமத்துவமும் விடுதலையும் பேசுகிறவன் கூட குடுமி ஒரு மாதிரி வைத்துக்கொள்ளுகிறான்; வேஷ்டி சேலை ஒரு மாதிரி கட்டிக்கொள்ளுகிறான்; பூணூல் ஒரு மாதிரி போட்டுக் கொள்ளுகிறான்; பொட்டு ஒருமாதிரி வைத்துக் கொள்ளுகிறான். இவர்களை எல்லாம் எந்தக்கணக்கில் சேர்த்துகிறீர்கள்?

இந்தக்கூட்டத்தார் இந்தியர்களுக்கு விடுதலையும் சுதந்திரமும் தேடிக் கொடுப்பார்கள் என்று அநேக முட்டாள்கள் நம்புகிறார்கள். அனேக மடையர்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள்.

ஜாதி என்பதற்கு ஆணும் பெண்ணும் தகுதி அற்ற ஜோடியாய் வாழ்கின்றனர். வாழ்க்கை லட்சியம் ஜாதி மதத்தைக் காப்பாற்றுவது என்றே கருதுகிறார்கள். இதுவரை இந்தியாவில் தோன்றிய பெரியார்கள் என்பவர்களில் அனேகர் ஜாதி மதத்தைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டார்களே ஒழிய மக்களை ஒன்றுபடுத்த முயற்சிக்கவில்லை. காந்தியாரை மகாத்மா என்கிறார்கள்; அவர் ஜாதியை ஒன்றாக்கச் சம்மதிக்கிறாரா? மதத்தை ஒன்றாக்க சம்மதிக்கிறாரா? அவருடைய எந்த திட்டத்திலாவது ஒன்றாக்கும் வாசனை இருக்கிறதா? இந்திய மக்களுக்கு தங்களையே பிரதிநிதிகள் தர்மகர்த்தாக்கள் என்று சொல்லிக் கொள்ளும் மக்களாவது ஜாதி மதப் பிரிவுக்கு ஏதாவது வகை செய்கிறார்களா?

நேற்று திருவாங்கூர் ராஜா கோவிலை திறந்து விட்டுவிட்டதற்கு ஆக காந்தியார் முதல் "உயர்ந்த" பார்ப்பனர் வரை பாராட்டினார்கள். அப்படி பாராட்டினவர்கள் பிரிட்டிஷ் ராஜ்யத்தில் என்ன செய்ய முயற்சித்தார்கள்?

அரசியலை உடைக்கிறோம், சீர்திருத்தத்தை உடைக்கிறோம், பிரிட்டிஷ் சர்க்காரை விரட்டுகிறோம் என்று சொல்லுகிறவர்கள் ஜாதியை உடைக்கட்டுமே, மதத்தை அழிக்கட்டுமே, கோவில் கதவுகளை உடைக்கட்டுமே பார்க்கலாம். வாயாலாவது பேசட்டுமே பார்க்கலாம். இதற்கு வெள்ளைக் காரனுடைய தயவோ அரசியல் உதவியோ வேண்டியதில்லையே. அப்படி இருக்க அதை மூடி வைத்து விட்டு காந்தி முதல் ஒவ்வொருவரும் ஜாதி மத வேஷம் போட்டு மக்களைப் பிரித்து மேல் கீழ் ஆக்கி வைத்து விட்டு சுயராஜ்யம் பெறுகிறேன் என்பது புரட்டா நாணையமா என்று பாருங்கள். நமக்கு சர்க்காரால் என்ன தொல்லை இருக்கிறது? வரி வாங்குகிறான்; சம்பளம் கொடுக்கிறான்; தன்னுடைய வியாபாரத்தை நடத்திக் கொள்கிறான்; அதை தடுக்க நம்மால் ஆகவே ஆகாது. நாம் ஜாதிச் சண்டை போட்டுக்கொண்டு ஜாதிப் பிரிவை வைத்துக்கொண்டு என்ன காரியம் செய்யமுடியும்? வெள்ளைக்காரனிடம் துப்பாக்கி பிரங்கி இருக்கின்றன. நம்மிடம் ஜாதிச் சண்டை இருக்கிறது. வியாபாரமோ ராட்டின யந்திரம் வைத்து வெள்ளைக்காரன் வியாபாரத்தை நிறுத்தப் பார்க்கிறோம். இதெல்லாம் வீண் மைனாப் பிடிக்கும் வித்தையே ஒழிய யோக்கியமான பயனுள்ள காரியம் ஆகாது. ஜாதி ஒழிக்கப்பட்டு பறையன் பார்ப்பான் என்கின்ற பிரிவு அழிக்கப்பட்டால் ஒழிய இந்தியர்கள் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ள உரிமையற்றவர்களே என்பது என் கருத்து. பணக்காரர்களை ஒழித்து, ஏழை பணக்காரர்களை ஒன்று படுத்துகிறேன் என்று சில வீணர்கள் கூப்பாடு போடுகிறார்கள். மூடமக்கள் அதை நம்பி கூடவே கோவிந்தா போடுகிறார்கள். ஒரு காசு பெறாத பார்ப்பான், பறையன் என்பதையும், நாயுடு, முதலி, தேவர், மறவர், நாடார் என்பதையும் ஒன்றுபடுத்த முடியாத தைரியமில்லாத, இஷ்டமில்லாத ஆட்கள் பணத்தை சொத்தை எப்படி ஒன்று படுத்தி சமத்துவப்படுத்த முடியும் என்பதை யோசித்துபாருங்கள்.

மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப்பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை; ஜாதியை விட்டு தள்ளுவதில்லை. ஆனால் ஜாதிவிட்டு ஜாதி சாப்பிட்டால், கல்யாணம் செய்தால் ஜாதியை விட்டு தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களில் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.

ஆதலால் சமூக சீர்திருத்தத்தின் முக்கியம் நாம் உணருகிறவரை நமது மக்கள் சுதந்திரத்தின் முக்கியமோ சுயமரியாதையின் முக்கியமோ தெரியாதவர்கள் கவலையற்றவர்கள் என்று தான் அருத்தம்.

அரசியல்

நிற்க, அரசியலைப் பற்றி சிறிது பேசும்படி கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறேன். இந்த ஊர்க்காரர்கள் பெரிதும் காங்கிரசுக்காரர்கள் என்று தெரிகிறது. அநேகம் பேர் கதர்கட்டி இருக்கிறார்கள். அதுவே ஒரு வைராக்கியத்தைக் காட்டக்கூடிய அறிகுறியாகிவிட்டது. அப்படிப்பட்டவர்கள் முன் அரசியலைப்பற்றி பேசுவது என்றால் எனக்கு பயம்தான். ஆனால் ஒன்று சொல்லுகிறேன். நான் சொல்வதைக் கேட்டு ஆத்திரப்படக் கூடாது. முதல் முதல் இங்கு வந்திருக்கிறேன், பொறுமையாய்க் கேளுங்கள்; உங்கள் கேள்விகளை எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள். பதில் சொல்லி விட்டே இங்கிருந்து அசைகிறேன். முரட்டுத்தனம் செய்தால் நான் நிறுத்திக் கொள்ளுகிறேன். உங்கள் தேசாபிமானமும் காங்கிரசும் எப்படிப்பட்டது என்று அளந்து கொள்ளுகிறேன். உங்கள் அபிப்பிராயத்துக்கு மாறுபட்டவன் பேசக்கூடக்கூடாது என்றால் உங்கள் சுதந்திரத்தின் யோக்கியதையும் தெரிந்து கொள்ளுகிறேன். வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் வெள்ளைக்காரனை கண்டிக்க இடம் கொடுத்து இருக்கிறார்கள்.

இந்தியர்கள் பெறப்போகும் ஆட்சியில் அதன் யோக்கியதையைப் பற்றிக் கூட பேசக்கூடாது என்றால் இந்தியர்கள் சுயராஜ்யத்தை விட ஆயிரம் பங்கு வெள்ளைக்காரரின் ஆட்சியே மேல் என்பது எனது அபிப்பிராயம். நான் செல்லுமிடங்களில் சுயராஜ்யக்காரர்கள் காங்கிரசுக்காரர்கள் காந்தியாட்கள் இவர்களின் யோக்கியதையை உணர்ந்துதான் வருகிறேன்.

இந்தக் கூட்டத்தார் ஒழிவதே இந்தியாவுக்கு பூரண விடுதலை என்பது எனது அபிப்பிராயம். இந்த அபிப்பிராயம் எனக்கு பலப்பட்டு வரும்படியாகத்தான் காங்கிரசுக்காரர்களும் காந்தி சிஷ்யர்களும் கதர்க்காரர்களும் நடந்து வருகிறார்கள். பள்ளத்தூரில் நன்றாகப் பார்த்தேன்; விருதுநகரில் பார்த்தேன். நான் வெறும் காலிகள் நடத்தையைப் பார்த்து சொல்லவில்லை.

ஜவஹர்லால், சத்தியமூர்த்தி முதலியவர்கள் நடத்தையையும் பேச்சையும் கொண்டே சொல்லுகிறேன்.

ஆகையால் நீங்கள் விஷயம் உணர வேண்டுமானால் பொறுமையாய் கேளுங்கள்; மனதில் ஞாபகமாய் இருத்துங்கள். உங்கள் தலைவர்கள் வீரர்கள் வரும்போது அவைகளுக்கு சமாதானம் கேளுங்கள். மறுபடியும் நீங்கள் கூப்பிடுகிறபோது நான் வருகிறேன், நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன்; அதற்கு சமாதானம் சொல்லுகிறேன். இல்லாவிட்டால் உங்களுடன் சேர்ந்து கொள்ளுகிறேன். காலித்தனத்தை மாத்திரம் அனுமதிக்கமாட்டேன்.

ஆகவே, தோழர்களே! காங்கிரஸ் என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன? சுயராஜ்யம் என்றால் என்ன? பொருள் தெரியாமல் வைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். காங்கிரஸ் என்றால் கூட்டம் என்று பெயர். இது உத்தியோகம் பெறுவதற்கு ஆக சுமார் 50 வருஷத்துக்கு முன்பு படித்தவர்கள் ஏற்படுத்தினது. படித்தவர்கள் சர்க்காரிடத்தில் உத்தியோகம் பெறவும் அதற்குப் பதிலாக பாமர மக்களுக்கு இவர்கள் ராஜ பக்தி கற்றுக்கொடுத்து ராஜ விஸ்வாசம் உண்டாக்கவும் ஏற்படுத்தப்பட்டதாகும். அதுவும் வெள்ளைக்காரன் சொல்லிக்கொடுத்த உபாயமாகும்.

ஏனெனில் வெள்ளைக்காரன் 50, 60 வருஷங்களுக்கு முன் உத்தியோகங்களை படிப்பு காரணமில்லாமல் பெரிய குடும்பம் பெரிய வம்சம் என்று பொறுக்கி எடுத்து கொடுத்து வந்தான். சம்பளமும் அதிகாரமும் இருந்ததால் சில மேல் ஜாதிக்காரர்கள் படித்தவர்கள் ஆசைப்பட்டு போட்டி போட்டார்கள். அதற்கு ஆக ஒரு வெள்ளைக்கார ஐ.சி.எஸ். உத்தியோகஸ்தர் இந்த தோது சொல்லிக்கொடுத்தார்.

அதாவது "இந்தியர்கள் அரசியலில் முன்னேற்றம் அடைய வேண்டியது, இந்தியாவும் பிரிட்டிஷûம் என்றென்றும் இணைபிரியாமல் இரண்டறக் கலந்துகொள்ள வேண்டியது". இதுதான் காங்கிரசின் கொள்கை. இதற்கு இணங்க காங்கிரஸ் ராஜ விஸ்வாச தீர்மானத்தை செய்து அதை பள்ளிக்கூடம், கோவில், சடங்கு ஆகியவைகளில் கலக்கி மக்களுக்கு கற்பித்து வந்தது. அவற்றில் ஒன்றுதான் அரசன் விஷ்ணு அம்சம் என்று வேதத்தில் இருப்பதாக பார்ப்பனர்கள் போதித்து வந்ததாகும். அதன்படியே ராஜ விஸ்வாசம் பெருகினதோடு உத்தியோகமும் சம்பளமும் பெருகி அதற்கு ஏற்றபடி வரியும் பெருகி வந்தது. இதைக்கண்டு முஸ்லீம்கள் ஆசைப்பட்டு முஸ்லீம் சங்கமேற்படுத்தி தங்கள் ஜனத்தொகைக்கு தக்க விகிதாச்சாரம் பெற்று விட்டார்கள்; கிறிஸ்துவர்களும் அதுபோலவே பெற்று விட்டார்கள். இந்துக்கள் பங்கை பார்ப்பனர்களே அடைந்து வந்தார்கள். காங்கிரசில் பாடுபட்ட நாயர், தியாகராயர் முதலியவர்கள் பலதடவை பார்ப்பனர்களால் தோல்வியுற்ற பிறகு முஸ்லீம்களைப்போல் பார்ப்பனரல்லாதார் சங்கம் ஏற்படுத்தி தங்கள் விகிதாச்சாரம் பங்குகேட்க ஆரம்பித்தார்கள். அதனால் பார்ப்பனர்களின் ஏகபோக உரிமை குறைவாயிற்று. அதைக் காப்பாற்றவே பார்ப்பனரல்லாதாரில் காந்தியை பிடித்து மகாத்மாவாக்கி அவர் பெயரைப் பிரபலப்படுத்தி நம்மை ஏமாற்றுகிறார்கள். நமக்கு கஷ்டம் வரும்படியான கொள்கைகளை வாயளவில் ஏட்டளவில் காங்கிரசில் போட்டுக்கொண்டு நமது வாலிபர்களையும் சில கூலிகளையும் பிடித்து நம்மைத் தொல்லைப் படுத்துகிறார்கள். இதுதான் அரசியல். உங்களுக்கு அரசியல் எ.பி.சி.டி. தான் சொன்னேன். இது சரியா தப்பா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். பிறகு இன்னமும் பாக்கி சொல்லுகிறேன்.

சுயராஜ்யம் என்பதில் ஒன்றும் இல்லை. வெறும் வார்த்தைதான். சுயராஜ்யம் இதுவரை ஒரு தேசத்திலும் பட்டினியையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஒழிக்கவில்லை. நான் பந்தயம் கூறுகிறேன். ஜவஹர்லால் பார்ப்பனர் என்பதை மறந்து விடாதீர்கள். எந்த ஊரிலாவது சுயராஜ்யம் பட்டினியை நீக்கி இருந்தால் நான் எல்லோருக்கும் முன்பாக சுயராஜ்யத்தில் கையெழுத்து போடுகிறேன்.

அது வெற்று வேட்டு. ஏமாந்து விடாதீர்கள். வெள்ளைக்காரனை விரட்டி விடுவது சுயராஜ்யமானால் கதரால் காந்தியால் வந்தே மாதர கூப்பாட்டால் முடியுமா? பட்டாளத்துக்கும் குண்டுக்கும் பதில் சொல்ல முடியுமா? நாம் ஒருவரை ஒருவர் நம்புகிறோமா? காங்கிரசில் உள்ள ஜாதிச் சண்டை உங்களுக்குத் தெரியாதா? நம்மை சரிசமமாய் கருதாதவனுடன் நான் கலந்து வேலை செய்ய முடியுமா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

ஸ்தல ஸ்தாபனம்

ஸ்தல ஸ்தாபனத்தைப்பற்றி கேட்கிறீர்கள். இது மற்றொரு பித்தலாட்டம். நமக்கு அதில் உள்ள சுதந்திரம்,

1. மக்கள் 1000, 10000 செலவு செய்து பதவிபெற வேண்டியது, பிறகு அந்தப்பணத்தை வட்டியுடன் சம்பாதித்துக் கொள்ளவேண்டியது.

2. பெருமை அடைய வேண்டியது.

3. கண்டவர்கள் பொறுக்கித் தின்ன விட்டு வேடிக்கை பார்க்க வேண்டியது. இதுதான் என் அனுபவம்.

இன்றைய ஸ்தல ஸ்தாபனங்கள் சர்க்காரால் நிர்வகிக்கப்பட்டால் அரை வரிசை செலவு மீதியாகும். அதற்கு நான் ஜவாப்தாரி, நான் அங்கம் வகிக்கும் ஈரோடு முனிசிபாலிட்டியில் கவுன்சிலர்கள் கண்ணியமுள்ளவர்கள். அதிலேயே 100 க்கு 50 ரூ. பாழாகின்றது. கவலை இல்லை; பொறுப்பு இல்லை. சிங்கங்களும், புலிகளும், நரிகளும், நாய்களும் தின்கின்றன. மற்றதை சொல்லுவானேன்?

இதை தோழர் ராஜகோபாலாச்சாரியாரும், சத்தியமூர்த்தியாரும் ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

உடனே கலைக்க வேண்டியது ஜில்லா போர்டுகள் என்று பம்பாயில் சத்தியமூர்த்தியார் பேசினார். நான் 20 வருஷமாக பேசிவருகிறேன்.

ஸ்தல ஸ்தாபனம் மக்களுக்குள் கட்சி, பேராசை, ஒழுக்க ஈனம் முதலிய கெட்ட குணங்களை கற்பிக்கிறது. ஆனால் இன்று ஜனங்களுக்கு அதில் மோகம் இருக்கிறது. பணம் சம்பாதிக்கலாம், பதவி பெறலாம், அதிகாரம் செய்யலாம், கவுரவம் அடையலாம். இன்னும் பலவும் உண்டு. இதை யார்தான் வேண்டாம் என்பார்கள்?

ஆகவே தோழர்களே மறுமுறை வரும்போது இன்னும் விளக்கமாகப் பேசுகிறேன்.

குறிப்பு: 14.12.1936 ஆம் நாள் கழுகுமலை குருவிகுளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரை.

திருவாங்கூர் ஆலயப் பிரவேச உரிமை

தலைவரவர்களே! தோழர்களே!
திருவாங்கூர் மகாராஜா அவர்கள் தனது சகல இந்து பிரஜைகளுக்கும் ஜாதி வித்தியாசமில்லாமல் இந்து பொதுக்கோவில்கள் எல்லாவற்றிலும் பிரவேசிக்க அனுமதி அளித்ததைப் பாராட்ட இக்கூட்டம் கூட்டப்பட்டது என்றாலும் எனக்கு முன் பேசியவர்கள் பலர் இந்த மாதிரி உத்திரவு இப்போது திருவாங்கூரில் வெளியாவதற்கு 12வருஷங்களுக்கு முன் நானும் எனது மனைவியாரும் இருந்து வைக்கத்தில் நடத்தி வெற்றிபெற்ற சத்தியாக்கிரகமே முக்கிய காரணமென்று சொன்னார்கள். பல பத்திரிகைகளும் அந்தப்படி எழுதி இருக்கின்றன.
ஆனால் நான் அதை ஒப்புக்கொள்ள முடியாது. நானும் ஒரு அளவுக்கு காரணஸ்தனாய் இருக்கலாம் என்றாலும் வைக்கம் சத்தியாக்கிரகம் மூலம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. சத்தியாக்கிரகம் காரணம் அல்ல வென்றால் மற்ற எந்த விதத்தில் நானும் காரணமாய் இருக்கலாம் என்று கூறுகிறேன் என்பதாக நீங்கள் கேட்கலாம்.
சத்தியாக்கிரகத்துக்கு உலகில் மதிப்பில்லை, அதை சண்டித்தனம் என்றுதான் நானே கருதிவிட்டேன். சத்தியாக்கிரகம் நடத்தப்பட்ட விஷயங்களில் 100க்கு 5 கூட வெற்றி பெறவில்லை. ஏதாவது பெற்று இருந்தால் நம் எதிரிகள் சண்டித்தனமும் தொல்லையும் பொறுக்கமாட்டாமல் இசைந்து வந்ததாயிருக்கலாம்.
ஆதலால் திருவாங்கூர் மகாராஜா இந்த உத்திரவு போட கருணை கூர்ந்ததற்கு காரணம் தற்சமயம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையேயாகும்.
என்னைப்பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். மற்ற வெளியூர்க் காரர்களை விட உள்ளுர்க்காரர்களாகிய உங்களுக்கு என்னை நன்றாகத் தெரிய வசதி உண்டு என்று கருதியே அப்படிச் சொல்லுகிறேன்.
எனக்கு கோவில், குளம், மதம், சாமி, பூதம் போன்றவைகள் ஒன்றும் பிடிக்காது என்பதும் அவற்றைப் பற்றி நான் கவலைப்படுவது மில்லை என்பதும் நீங்கள் அறிந்ததே. அதனாலேயே இந்த ஊர் பொது ஜனங்களிடம் எனக்கு அவ்வளவு செல்வாக்கும் கிடையாது. சுமார் 1520 வருஷங்களுக்கு முன் இந்த ஊரில் அனேக வீடுகளுக்கு நான் வராவிட்டால் கல்யாணங்கள் முகூர்த்த நேரம் தவறிக்கூட காத்திருக்கும். அது போலவே பிணங்கள் கூட வெளியேறாமல் காத்திருக்கும். அவ்வளவு பொது ஜன செல்வாக்குப் பெற்றிருந்தவனாகிய நான் இன்று ஒரு கிராமப் பஞ்சாயத்து தேர்தலுக்கு நின்றால் கூட கட்டின பணம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். (அப்படி அல்ல என்ற சப்தம்) அது எப்படியோ போகட்டும். இன்று எனக்கு மக்களிடத்தில் ஏதோ ஒரு இயக்க சம்மந்தமான நட்பு தவிர மற்றபடி உலக வழக்கமான பொதுஜன நட்பு எனக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் அநேக துறைகளில் பொது ஜன அபிப்பிராயத்துக்கு மாறான அபிப்பிராயம் சொல்லி எதிர் நீச்சல் நீந்திக்கொண்டு இருக்கிறேன். அப்படி இருந்தால் எப்படிப்பட்டவர்களுக்கும் இந்தக் கதிதான். ஆனால் இப்படி இருந்தும் சிறிதாவது சமாளித்துக்கொண்டு இருக்கிறேன். மற்றவர்களில் அனேகருக்கு இதுகூட சாத்தியப்படாமல் அடிக்கடி கரணம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவேன்.
ஜாதி, மதம், கோவில், குளம், சாமி, பூதம் கூடாது என்று நான் சொல்லுவதால் அவற்றினிடம் எனக்கு ஏதாவது தனிப்பட்ட துவேஷமா? நான் ஏதாவது எதிர் மதக்காரனா? அல்லது தீண்டாத ஜாதியா? என்றால் அப்படி ஒன்றும் இல்லை. நான் 22 வருஷம் தேவஸ்தான கமிட்டியில் முக்கியஸ்தனாகவும் தலைவனாகவும் இருந்திருக்கிறேன். என் அபிப்பிராயம் எப்படி இருந்தாலும் அனேக கோவிலுக்கு திருப்பணி செய்திருக்கிறேன். எனது பெற்றோர்களும் செய்திருக்கிறார்கள். இதே எதிரில் தெரியும் இந்த அம்மன் கோவில் நான் முன்னின்று கட்டி வைத்ததல்லவா? மற்றும் இவ்வூர் பிரபல கோவில்களில் எங்கள் தாயார் தகப்பனார் பெயர் போட்டிருக்கிறதல்லவா? அப்படி இருக்க நான் ஏன் இப்படிச் சொல்லுகின்றேன்? அவற்றால் ஏற்படும் கெடுதிகளை அறிந்தேதான்.
கோவில் பிரவேசத்திற்கு இந்த ஊர் தேவஸ்தான கமிட்டியில் நான்தான் என் தலைமையில் தான் முதல் முதல் ஒரு தீர்மானம் நிறைவேற்றினேன். அதை அமுலுக்கு கொண்டு வந்ததில் கோயில் பிரவேசம் செய்த சில தாழ்த்தப்பட்டவர்களையும் தோழர் ஈஸ்வரன் அவர்களையும் சர்க்காரில் தண்டித்தார்கள். அப்பீலில் விடுதலை ஆயிற்று என்றாலும் அந்த தீர்மானம் கேன்சில் செய்ய வேண்டியதாகவும் ஏற்பட்டுவிட்டது. அதனாலேயே நான் தேவஸ்தான கமிட்டியில் ராஜினாமா செய்தேன். அதற்கப்புறமே சாமியையும் கோவிலையும் மதத்தையும் அடியோடு அழிக்க துணிந்தேன். காரியம் வெற்றி பெற்றதோ இல்லையோ அது வேறு விஷயம். அதன் பயனாய் பல கோவில்களுக்கு வரும்படி குறைந்தது. சில சாமிகளுக்கு மதிப்பும் குறைந்தது. திருப்பதி ராமேஸ்வரம் டிரஸ்டிகள் வரும்படி குறைந்து விட்டதாக ரிபோர்டு செய்தார்கள். கொச்சி திருவாங்கூரில் 10 லக்ஷக்கணக்கான மக்கள் தாங்கள் நாஸ்திகர்கள் என்றும் சகல மதத்தையும் சிறப்பாக இந்து மதத்தை விட்டுவிட வேண்டுமென்றும் தீர்மானம் செய்தார்கள். பதினாயிரக்கணக்கான பேர் கிறிஸ்து முஸ்லீம் சீக்கிய ஆரிய சமாஜம் முதலிய மதங்களுக்கு பாய்ந்தார்கள். திருவாங்கூர் பிரஜைகளில் ஏறக்குறைய பகுதிக்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே கிறிஸ்துவர்களாகவும் முஸ்லீம்களாகவும் இருக்கிறார்கள் என்பதோடு இப்போதும் கும்பல் கும்பலாய் மதம் மாற ஆரம்பித்தார்கள். எனது பிரசாரத்தின் பலனாய் நான் ஜாதிமத ஜனங்களிடை செல்வாக்கு இழந்து மதிப்பு இழந்து வர நேருகிறது என்றாலும் மேல் கண்ட பலன்கள் இந்நாட்டில் இதற்கு முன் என்றும் இருந்ததை விட அதிகமாக ஏற்பட ஆரம்பித்து விட்டதால் பொது ஜனங்களிடை என் மீது எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் நாஸ்திகத்தையும் கோவில் குள வெறுப்பையும் மாற்றி இந்துக்கள் மதம் மாறுவதையும் நிறுத்தித் தீரவேண்டிய அவசியம் மகாராஜாக்கள் முதல் சாதாரண பார்ப்பனர்கள் வரை ஏற்பட்டு விட்டது. நானோ அல்லது என்னைப் போன்ற யாராவது ஒருவரோ தனது சுயநலத்தையும் தனது செல்வாக்கையும் இழந்து பொதுஜன வெறுப்பையும் ஏற்க தயாராய் இருந்திருக்காத வரையில் இந்த மாறுதல் அதுவும் புரட்சி போன்றது ஒன்று ஏற்பட்டிருக்க முடியவே முடியாது என்பதை வேண்டுமானால் நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அதுவும் இப்படிப்பட்ட புரட்சி ஏற்பட்டும் சாஸ்திரிகளும் ஆச்சாரிகளும் வர்ணாச்சிரமக்காரர்களும் இந்த புரட்சியை வாய் வார்த்தையிலாவது கூட்டோடு ஆதரிக்க வெளிவரவும் முடியாது.
ஆதலால் இந்த உத்திரவுக்கு காரணம் வைக்கம் சத்தியாக்கிரகம் அல்லவென்றும் கடவுளையும் கோவிலையும் மதத்தையும் ஒழிக்கப் புறப்பட்ட சிலருடைய முயற்சியும் திருவாங்கூர் மகாராஜாவினுடைய ஒப்பற்ற விவேகமும் சாமர்த்தியமும் என்றுதான் சொல்லுவேன். இந்த உத்திரவினால் சாமி தரிசனம் செய்ய கீழ் ஜாதியார் என்பவர்களுக்கு இடம் கிடைத்து விட்டது என்பதல்ல எனது திருப்திக்கு காரணம். மேல் ஜாதி கீழ் ஜாதிக்கும் தீண்டாமைக்கும் ஒரு அளவுக்கு ஆதரவாக சாமியும் கோவிலும் ஒரு தூணாய் இருந்தது திருவாங்கூரைப் பொறுத்த வரையிலாவது இடிந்து விட்டதல்லவா என்கின்ற திருப்தி தான்.
மதம் என்கின்ற தூணும் இடிந்து விழுந்தாலொழிய தீண்டாமையும் மேல் ஜாதி கீழ் ஜாதியும் நம் நாட்டில் ஒழியவே ஒழியாது என்பது தான் எனது அபிப்பிராயம். அதற்கு ஆகவே கீழ்ஜாதிக்காரர்கள் என்பவர்களை முஸ்லீம் மதத்தில் சேருங்கள் என்று சொல்லிவருகிறேன். அதனால் இந்து மதத்துக்கு கேடு என்று கருதினால் இந்துமத தர்மகர்த்தாக்கள் ஜாதியை ஒழிக்கட்டுமே. மகாராஜா உத்திரவுபோல் ஒரு உத்திரவு போடட்டுமே. ஒரு சட்டம் கொண்டு வரட்டுமே. யார் வேண்டாம் என்கிறார்கள்?
ஜாதி காப்பாற்றப்பட வேண்டும். பொது ஓட்டலில் ரயிலில் இருக்கிற வித்தியாசம்கூட ஒழியப்படாது என்று சொல்லிக்கொண்டும் ஒழிக்க சட்டம் கொண்டு வராமலும் இருந்து கொண்டும் மதம் கெட்டுப்போகிறது என்றால் இதில் நாணயமேது? ஜாதி ஒழிவதற்கு ஆக தீண்டாமை ஒழிவதற்கு ஆக ஒருவன் வேறு மதத்துக்கு போனால் மதம் வேண்டாம் என்பவர்களுக்குத் தான் ஏன் ஆத்திரம் வரவேண்டும்? இவர்கள் ஆத்திரத்தால் என்ன காரியம் நடக்கும்? ஒன்றுமே நடவாது. இந்தியா கூடிய சீக்கிரத்தில் முஸ்லீம் ஆதிக்கத்துக்கு வரப்போகிறது. பார்ப்பன ஆதிக்கத்துக்கு அதாவது இந்து ஆதிக்கத்துக்கு குழி தோண்டி ஆய்விட்டது. முஸ்லீம் ராஜ்யம் இந்தியாவில் விரிவு அடையப் போகிறது.
அரசியலிலும் முஸ்லீம்கள் ஆதிக்கம் விரிவடைந்து வருகிறது. பொருளாதாரத்திலும் அவர்களே மேன்மை அடைந்து வருகிறார்கள். இந்த ஊரை எடுத்துக் கொள்ளுங்கள் 10, 20 வருஷத்துக்குள் முஸ்லீம்கள் எவ்வளவு முன்னுக்கு வந்து விட்டார்கள். எங்கும் அவர்கள் எண்ணிக்கைக்கு மேல் பதவி வகிக்கிறார்கள். இதெல்லாம் எதனால்? அச்சமூக ஒற்றுமையினால். அவர்கள் தங்கள் சமூகத்துக்குள் ஒருவரை ஒருவர் அழுத்த நினைப்பதில்லை. ஒருவருக்கு வரும் கஷ்டத்தை இழிவை தங்கள் சமூகத்துக்கே வந்ததாய் கருதுகிறார்கள். இதை அவர்கள் மதம் போதிக்கிறது. மற்றபடி சாமியைப்பற்றி மோக்ஷத்தைப்பற்றி நாம் கவலைப்படாதவர்களானாலும் இந்த அருமையான ஒற்றுமை குணத்திற்கு அவர்கள் பாராட்டப்பட வேண்டாமா? அதன் பயனை அவர்கள் அடைய வேண்டாமா?
ஆதலால் இந்தியா ஒற்றுமையடைய இந்தியா சுயமரியாதை அடைய ஜாதி பிரிவு பார்ப்பனீயம் ஒழிய வேண்டும்; அல்லது முஸ்லீம் ஆதிக்கம் ஏற்பட வேண்டும். இரண்டும் இல்லாவிட்டால் நம் கதி அதோ கதிதான். ஆதலால் இந்த பிரகடனத்துக்கு மகாராஜாவையும் ஜாதிமத ஒழிப்புக்கு முயற்சித்தவர்களையும் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும்.
குறிப்பு: 15.11.1936 ஆம் நாள் ஈரோடு காரை வாய்க்கால் மைதானத்தில் ஈரோடு பார்ப்பனரல்லாத வாலிப சங்கத்தாரால் நடத்தப் பெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு சொற்பொழிவு 06.12.1936 (குடி அரசு - 1936 டிசம்பர்)