31 August 2007

அடிமைத்தனத்தை உருவாக்கும் கல்வி முறை - பெரியார்

தற்கால ஆசிரியர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக் கருதி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து நடப்பதற்கில்லாத நிலையில் இருந்து கொண்டு, அத்தொழிலைத் தங்கள் வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாய் இருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மகாநாடுகள் கூடிப் போசுவதும், தீர்மானிப்பதும், தங்களுக்குச் சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும், தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, தேச முன்னேற்றத்திற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியை அடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை.

முதலாவது, நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர் ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல், மக்கள் அறிவுத் தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால், தற்காலம் அடிமைத் தன்மையையும், சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவிசெய்து, வயிறு வளர்க்கும் தேசத் துரோகிகளை உற்பத்தி செய்யும் எந்திரங்களாகத்தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?

நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள், அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். அக்குழந்தைகளுக்கு 6, 7 வயது வரையிலும் தாய்மார்களேதான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது. ஆனால், அப்போர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளை பெறும் எந்திரங்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா, பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்?

நீங்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா? என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல, உங்களைவிடப் பெரிய சகலகலா வல்லபர்களிடத்தில் படித்து, எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையன்களும், தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான்; தன் தேசத்தையும், மக்களையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டிப் போடுகிறான்.

வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி முதலியோர் எப்படித் தங்கள் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்களோ, அப்படியே தற்காலம் பி.ஏ., எம்.ஏ., என்ற படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படி சரித்திர பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படிப் பூகோளப் பாடம் தெரியாதோ, அப்படியே எம்.ஏ. படித்தவனுக்குப் பிறருக்குச் சவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேத வியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது.

ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களைவிட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; அறிவாளிகளுமல்லர்; உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர, அறிவாகாது. இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்காரர்களாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படிக்காதவர்கள் பரோபகாரிகளாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதையுள்ளவர்களாகவும் இருக்கலாம். நமது நாட்டின் கேட்டிற்கும் நிலைமைக்கும் முதல் காரணம், தற்காலக் கல்வி முறை என்பதே எனது அபிப்ராயம்.

எனவே, இவை ஒவ்வொன்றையும் இன்னமும் கிளற, கிளற மிகவும் மோசமாகவேதான் வந்து கொண்டிருக்கும். இம் மகாநாட்டைப் பொறுத்த வரையிலும், இதிலேற்பட்டிருக்கிற சில தீர்மானங்களைப் பொறுத்த வரையிலும் உங்களுக்கிருக்கும் கஷ்டங்களையும், குறைகளையும் அறிந்து நான் மிகவும் அனுதாபப் படுகிறேன். உங்களுக்கு இன்னும் சம்பளம், மரியாதை முதலியன உயர வேண்டுமென்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதற்காக நீங்கள் செய்யும் கிளர்ச்சிகளில் கலந்து கொள்ள எனக்கும் ஆசையிருக்கிறது. ஆனால், அந்நோக்கங்களையும் கிளர்ச்சிகளையும் உங்கள் சுய நன்மைக்கு மாத்திரமென்றில்லாமல், நமது மக்களின் உண்மையான ஆரம்ப ஆசிரியராய் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

24.4.1927இல் போளூரில் நடைபெற்ற ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில் ஆற்றிய உரை.

30 August 2007

பெரியாரின் பேச்சு - ஒலிவடிவில்

தமிழ் மண்ணின் வீதிகளில் மேடையமைத்து சாதாரண மக்களுக்கு பகுத்தறிவு கருத்துக்களை பரப்பிய தந்தைப் பெரியாரின் குரலை கேட்கும் ஆர்வத்தில் தேடியபோது கிடைத்தது ஒரு ஒலித்துண்டு. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சுயமரியாதையையும், தன்மானத்தையும் மீட்க மேடைகள் தோறும் பார்ப்பனீயவாதிகளின் புரட்டுக்களை, கட்டுக்கதைகளை, சுயமரியாதைக்கு எதிரான கொடுமைகளை தனக்கே உரிய கேலியும், கிண்டலும், கோபமும் பொங்க மக்களிடம் விளக்கிய பெரியாரின் குரல்.

Get this widget | Share | Track details


சொந்த சொத்துக்களை சுயமரியாதை பகுத்தறிவு பிரச்சாரத்திற்காக செலவிட்ட பெரியார் பொதுவாழ்க்கையில் ஒரு உதாரணம். தமிழகத்தின் ஆளுமைமிக்க தலைவர் பெரியார்.

01 August 2007

பெரியார் ஏன் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்?

1925 நவம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் தமிழ் மாகாண மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு தலைவராக தமிழறிஞர் திரு.வி.க அவர்கள் இருந்தார்கள். அந்த மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை பெரியார் கொண்டுவந்தார். அந்த தீர்மானம் அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் 'காங்கிரசால் பார்பனரல்லாதார் நன்மை பெறமுடியாது; காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை' என்று மாநாட்டிலேயே எழுந்து கூறிவிட்டு வெளியேறினார். உடனே அவருடன் ஒரு பெருங்கூட்டம் மாநாட்டை விட்டு வெளியேறியது.


காஞ்சி மாநாட்டின் போது, அங்கேயே பெரியாரின் முயற்சியால் பார்ப்பனரல்லாதார் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அந்த மாநாட்டின் தலைவராக கோவை திரு. T.A.இராமலிங்க செட்டியாரை அழைத்து பேசிய பெரியார் "தேசத்தில் பிராமணர், பிராமணரல்லாதார் என்ற தனிப்பட்ட கட்சிகள் தோன்றி பிணக்குறுவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமேயாகும், இவ்வாறு பிரிவினையில்லையென்று எவ்வளவுதான் மூடிவைத்த போதிலும் காங்கிரசிலுங்கூட இத்தகைய பேதம் உண்டென்பதை யாரும் மறுக்கமுடியாது. பிராமணர், பிராமணரல்லாதார் பிரிவினையில்லையென்பது உடலிலுள்ள புண்ணை மூடிவைத்து அழுகவிடுவதற்கு ஒப்பானதாகும். அதற்கேற்ற பரிகாரம் செய்து, உடலநலத்தை கெடுக்கும் புண்ணை ஆற்ற முயல்வதே பொதுநோக்குடைய அறிஞர் கடமையாகும்" என்று கூறினார்.


பெரியார் காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியேறியதும், அதற்கான காரணமாக அமைந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானமும் குறுகிய காலத்திற்குள் நடந்து முடிந்ததல்ல. சிலர் பரப்பும் பொய்யுரை போல தனிப்பட்ட சிலரால் பாதிக்கப்பட்டு வெளியேறிய சாதாரண நிகழ்வுமல்ல. பிராமணர் அல்லாதவர்களின் வகுப்புரிமைக்கும், சமூக உரிமைக்கும் காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளேயே போராடியவர் தான் பெரியார். இதை அறிய பெரியார் வெளியேறியதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்னரே சமூகத்திலும், காங்கிரஸ் இயக்கத்திலும் இருந்து வந்த பார்ப்பனீய ஆதிக்க செயல்களை தெரிந்துகொள்வோம்.
  • சர்.சி.பி. தியாகராயர், டாக்டர் நாயர், சி.நடேச முதலியார், பனகல் அரசர் ஆகியோர் இணைந்து "திராவிடர் சங்கம்" ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் இரண்டு நூல்களை "திராவிடரின் தகுதிகள்", "பார்ப்பனரல்லாதார் கடிதங்கள்" என்ற பெயரில் 1915ல் வெளியிட்டனர். அவர்கள் இணைந்து "தென்னிந்திய மக்கள் உரிமசங்கம்" என்ற பெயரில் அமைப்பு ஒன்றை 1916ல் உருவாக்கினர். காலப்போக்கில் அந்த அமைப்பின் பத்திரிக்கையான 'ஜஸ்டிஸ்' என்ற பெயரில் 'ஜஸ்டிஸ் கட்சி/நீதிக்கட்சி' என அழைக்கப்பட்டது. 1917ல் பிராமணரல்லாதார் மாநாடு சர்.சி.பி. தியாகராயர் தலைமையில் நடந்தது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அரசாங்கத்திலும், சட்டசமையிலும் நிறைவேற்ற இம்மாநாடு கோரியது. இந்த மாநாட்டு தீர்மானங்கள் சாதி ஆதிக்கத்தை எதிர்த்த முற்போக்கானவை என கருதப்படுகிறது. நீதிக்கட்சி தோன்றிய காலத்தில் பெரியார் போன்றவர்கள் நீதிக்கட்சியில் சேராமல் தடுக்க "சென்னை மாகாண சங்கம்", "தேசீய சங்கம்" என இரண்டு அமைப்புகளை பார்ப்பனீயவாதிகள் உருவாக்கினர். இச்சங்கம் பிராமணரல்லாதவர்கள் பெயரால் நடத்தப்பட்டாலும் இச்சங்கங்கள் பார்ப்பனீயவாதிகளின் கட்டுப்பாட்டில் தான் இயங்கியது. வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை தீர்மானத்தை இந்த இரு சங்கங்களிலும் பெரியார் நிறைவேற்றியதும் இரு சங்கங்களும் கொல்லப்பட்டன.

  • 1920ல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. நீதிக்கட்சி ஆட்சியில் கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் நிறுவப்பட்டன. ஆதிதிராவிட குழந்தைகளை அனுமதிக்காத அரசு உதவி பெற்ற பள்ளிகள் மீது நடவடிக்கை. ஆதிதிராவிடர் முதல் பிராமணர்கள் வரையில் அனைவருக்கும் வகுப்புவாரி உரிமை அடிப்படையில் அரசு பள்ளிகளில் இடம் பங்கிடப்பட்டது. இந்து அறநிலைய பாதுகாப்புச்சட்டம் இயற்றப்பட்டு இந்து கோவில்களின் நிலம், உடமைகள் என அனைத்தும் கண்காணிக்கப்பட்டது. இன இழிவை அகற்றும் விதமாக தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டங்கள் அனைத்தும் பிராமணர் அல்லாத பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியும், மானமும் பெற்றுத்தர துவங்கியது மட்டுமல்ல கோவில் சொத்துக்கள் சிலரால் மட்டும் களவாடப்படுவதையும் தடுத்து பொதுவானதாக மாற்ற முனைந்தது.

சென்னை மாகாண ஆட்சி பிராமணர் அல்லாதவர்களிடம் இருந்ததால் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் பார்ப்பனீயவாதிகளின் ஆதிக்கத்தை தகர்த்துவிடும் என்பதால் பார்ப்பனீயவாதிகள் எதிர்க்க துவங்கினார்கள். 'இந்துமதத்தில் சர்க்கார் தலையிடுகிறது' என கோவில் தர்மகர்த்தாக்களும், மடாதிபதிகளும், எதிர்த்தனர். திரு. S.சீனிவாசய்யங்கார், விஜயராகவாச்சாரியார் போன்ற வழக்கறிஞர்கள் 'மதத்திற்கு ஆபத்து', 'இந்த சட்டம் இயற்ற சென்னை சட்டச்சபைக்கு அதிககரமில்லை' என கூச்சலிட்டனர். காங்கிரஸில் இருந்த பார்ப்பனீயவாதிகளும் இந்த செயல்களை ஆதரித்தனர். இந்த நேரத்தில் பெரியார் வெளியிட்ட அறிக்கையில் "கட்சி வேற்றுமை பாராட்டாமல் அறநிலைய பாதுகாப்புச்சட்டத்தை ஆதரிக்க வேண்டும். இதனால் அறநிலையங்களுக்கு ஆபத்தில்லை. அவைகளின் செல்வங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்க வேண்டும். மதத்தின் பெயரால் கொள்ளையடித்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான் இதனால் ஆபத்து." என்றார்.

  • திருநெல்வேலி, சேரன்மாதேவியில் 'குருகுலம்' என்ற பெயரில் வ.வெ.சுப்பிரமணிய அய்யர் பொதுமக்களிடமிருந்தும், காங்கிரஸிலிருந்தும் பணம் பெற்று நடத்திய பள்ளியில் பிராமணர்களுக்கு தனி உணவு, பிரார்த்தனை வேறு இடம் பிராமணர் அல்லாதவர்களுக்கு வேறு இடம், உணவு, பிரார்த்தனை என நடத்தினார், இதை எதிர்த்தார் பெரியார். திரு.வி.க, டாக்டர்.வரதராஜலு நாயுடு போன்றவர்களும் இணைந்து குருகுலத்தை எதிர்த்தனர். நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. காந்தியார் தலையிட்ட பிறகும் வ.வெ.சு அய்யர் உடன்படவில்லை. பெரியார், திரு.வி.க, டாக்டர் போன்றவர்களது பிரச்சாரத்தால் குருகுலத்திற்கு கொடுக்கப்பட்டுவந்த நன்கொடைகள் நின்றன. வர்ணாஸ்ரம குருகுலம் ஒளிந்தது.
  • இந்த காலத்தில் திருச்சியில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் 'பார்ப்பனர்களுக்கு எதிராக பேசிவருகிறார்' என டாக்டர்.நாயுடு மீது கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பெரியார் அதை எதிர்த்து பேசி தோற்கடித்தார். அந்த கூட்டத்திலேயா சி.இராஜகோபாலாச்சாரியார், டி.எஸ்.எஸ்.ராஜன், என்.எஸ்.வரதாச்சாரியார், கே.சந்தானம், டாக்டர்.சாமிநாத சாஸ்திரி ஆகியவர்கள் ராஜினாமா செய்து வெளியேறினார்கள்.
  • 1920ல் திருநெல்வேலியில்ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை தீர்மானத்தை விஷயாலோசனை கமிட்டியில் 6 வாக்குகள் அதிகம் பெற்று நிறைவேற்றினார் பெரியார். மாநாட்டின் தலைவராக இருந்த எஸ்.சீனிவாசய்யங்கார் 'இது பொதுநலாத்திற்கு கேடு' என அனுமதி மறுத்தார். 1921ல் தஞ்சாவூரில் நடந்த மாகாண காங்கிரஸ் மாநாட்டில் மீண்டும் அந்த தீர்மானத்தை கொண்டுவந்தார் பெரியார். அதற்கு 'சீமான்' இராசகோபாலாச்சாரியார் 'கொள்கையாக வைத்துக்கொள்வோம்; தீர்மான ரூபமாக வேண்டாம்' என எதிர்த்தார். திருப்பூரில் நடந்த மாகாண மாநாட்டில் மீண்டும் அதே தீர்மானத்தை கொண்டுவந்தார். மீண்டும் பார்ப்பனவாதிகள் எதிர்க்கவே 'இராமாயணத்தையும், மகாபாரத்தையும் நெருப்பில் கொளுத்தவேண்டும்' என்றார் பெரியார். கலவரம் ஏற்படவே திரு. விஜயராகவாச்சாரியார் அடங்கினார். 1923ல் சேலம் மாகாண மாநாட்டில் மீண்டும் தீர்மானத்தை கொண்டுவந்தார். கலகம் ஏற்படும் சூழ்நிலை வரவே டாக்டர்.வரதராஜலு நாயுடுவும், ஜார்ஜ் ஜோசப்பும் நிறுத்தினார்கள். 1924ல் பெரியார் தலைமையில் திருவண்ணாமலையில் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானத்தை கொண்டுவந்தார். வகுப்புவாரி தீர்மானத்தை தோற்கடிக்க சென்னையிலிருந்து அதிகமான ஆட்களை எஸ்.சீனிவாசய்யங்கார் கூட்டி வந்து தீர்மானத்தை தடுத்தார். தீர்மானம் நின்றுபோனது. 1925ல் காஞ்சி மாநாட்டில் தீர்மானம் தலைவரால் அனுமதிக்கப்படவில்லை. அப்போது தான் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து தான் பெற்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் முரண்பாடு கொண்ட அமைப்பை விட்டு, ஆதிக்கவாதிகளால் நிறைந்த காங்கிரஸ் இயக்கத்தை விட்டு ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் உரிமைக்காகவும் வெளியேறினார். அவர் தான் பெரியார்!

*******

இப்பதிவை எழுத உதவிய நூல்கள்:

  1. தமிழர் தலைவர், சாமிசிதம்பரனார்.
  2. மனிதம் - பெரியார் பற்றிய டாக்டர் பட்டத்துக்கான ஆய்வுக்கட்டுரை.