23 November 2006

ஒடுக்கப்படுகிற மக்களே ஒன்றுபடுங்கள்!

நேற்று இரவு 8 மணிக்கு இந்தியாவின் தலித் மக்களது நிலை பற்றிய ஒரு கலந்துரையாடல் நடந்தது. இந்தியாவிலிருந்து மூன்று தலித் பெண்கள் ஹாலந்து நாட்டின் ஹேக் மாநகரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் இந்த கலந்துரையாடலில் வந்திருந்தனர். அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது கூட்டத்தில் அனைவரது முகமும் அதிர்ச்சியில் உறைந்திருந்தது.

உலகை அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்குள் ஆதிக்கம் செலுத்த துடித்து, "நான் வளர்கிறேனே மம்மி" விளம்பரத்தில் திளைக்கிற இந்தியாவை பற்றி இந்த "தேசவிரோதிகள்" வெளிநாட்டினர் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்க பேசியது என்ன?

"உங்களுக்கெல்லாம் அறிமுகமாகி இருக்கிற இந்தியா 20 சதவிகித மக்களை பற்றியது. அவர்களுடைய வளர்ச்சி, கனவு, திட்டம், மதம், கொள்கை, வாழ்க்கை பற்றியது. இந்த திரைக்கு பின்னால் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை போராட்டம் மறைக்கப்படுகிறது."

"பெண்களுக்கான திட்டங்களும் ஒதுக்கீடுகளும் ஆதிக்க வகுப்பை சார்ந்த பெண்களுக்கே சேர்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்கும், மேல்சாதியினரின் கல்வி வளர்ச்சிக்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது. இது எங்கள் மக்கள் வேலை மற்றும் தலைமை பொறுப்புகளில் வருவதற்கு எதிரான தடை. கிடைக்கிற சில திட்டங்களில் கூட ஆண்களுக்கே கிடைத்து விடுவதால் ஒடுக்கப்பட்ட பெண்கள் இரண்டு விதமான ஒடுக்குமுறையை சந்திக்கிறார்கள். ஒன்று சாதி சார்ந்தது இன்னொன்று ஆணாதிக்கம் சார்ந்தது."

"எங்கள் உடம்பில் பட்ட காற்று கூட மேல்சாதி வீடுகளில் வீசினால் தீட்டாம். இதனாலே ஆண்டாண்டு காலமாக எங்கள் குடிசைப் பகுதிகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்திலேயே தள்ளி இருக்குது..."
- ஜான்சி, ஆந்திரா மாநிலம்.

காற்று பட்டால் கூட தீட்டாக ஒதுக்கி வைக்கப்படுகிற ஒடுக்கப்பட்ட பெண்களை வன்புணர்ச்சி செய்கிற வேளைகளில் மேல்சாதி ஆணாதிக்க வர்க்கத்திற்கு "தீட்டு" பற்றிய கவலையில்லை. அவர்களது மதமே அதை தான் அவர்களுக்கு கற்றுத் தருகிறது.

"பெண்களையும், நாயையும் தினமும் அடித்து வளர்க்க வேண்டும்"
- மனு தர்மம்.
சாதியாதிக்கமும், ஆணாதிக்கமும் கலந்த இந்த கொடுமையான மத கோட்பாடுகளை தலையில் தூக்கி வைத்து ஆடும் வரை சாதீய விடுதலை எளிதான செயலல்ல.

"என்னோட பாட்டி பீ அள்ளி அகற்றும் வேலை பாத்தாங்க, என் அம்மாவும் அதை தான் செய்தாங்க, நானும் அதையே செய்திருக்கேன்....இந்த மாதிரி வேலை செய்பவர்களுக்கு கண்பார்வை, இதயம், ஈரல், தோல் சார்ந்த நோய்கள் அதிகமா வந்து ஆரோக்கியமற்று வாழுறாங்க" - தனது பரம்பரை அடிமையாக்கப்பட்டது பற்றி, உத்தரபிரதேசத்திலிருந்து, மஞ்சு வால்மீகி

நம்மிடையே "இன்னும்" 7 தலைமுறைகளின் பெயர், வரலாறு, பரம்பரை குலப்பெருமை என பெருமிதம் கொள்பவர்களுக்கும் ஒடுக்கபடுகிற மக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி என்பது ஒரு அடக்குமுறையின் வரலாற்றுப் பதிவு.

தகுதியும் திறமையும் பற்றிய வாதங்களால் அடக்குமுறையை ஆதரிப்பது என்பது இன்று அறிவுசீவித்தனமாக வளர்கிறது. பரம்பரை பரம்பரையாக "இழிபிறவிகளாக" நடத்தப்பட்டு வந்தவர்கள் ஒரு தலைமுறை அலல்து இரு தலைமுறை கல்வி, வேலைவாய்ப்பில் குலப்பெருமை பேசும் ஆதிக்கசாதியினருடன் தகுதி, திறமை என்ற அளவுகோலில் போட்டியிட சொல்வது மோசடியான ஆதிக்கமனப்பான்மை. இடஒதுக்கீடு அமலுக்கு வந்து 15 ஆண்டுகள் கடந்தும் ஒடுக்கப்பட்ட மக்களில் நிலை நம்பிக்கையற்ற, அடையாளம் இல்லாது கல்வி, வேலைவாய்ப்பற்ற நிலையில் இருக்கிறது.

அவர்களின் அடையாளம் ஒடுக்கப்படுகிற சாதியினர் என்பதே! இந்த அடையாளம் ஒரு போராட்ட கருவியாக அமைதல் அவசியம். ஆதிக்கசாதியினரின் சாதித் திமிர் பிடித்த சங்கங்களுக்கும், அடக்கப்படுபவனின் ஒன்று கூடல் அடையாளத்திற்கும் வேறுபாடு அதிகம். வெள்ளையினத்தவரின் அடக்குமுறைக்கு எதிராக கறுப்பின மக்களின் அமைப்புகள் எழுந்ததை யாரும் வரலாற்றில் குறை சொல்லவில்லை. கறுப்பு என்ற இழிவாக நடத்தப்பட்ட ஆயுதம் மறுப்பக்கத்தில் விடுதலைக்கான கூரான சிந்தனையியலை உருவாக்கியது. இப்படியான் அடையாளத்திலிருந்து பிறந்த விடுதலை வேட்கையினால் தான் தென்னாப்பிரிக்காவில் வாழுகிற இந்தியர்கள் கறுப்பின மக்களுடன் ஒரே களத்தில் நிறவெறியை எதிர்த்து நின்றார்கள். ஒடுக்கப்படுகிற மக்கள் ஒன்று கூடி தங்களுக்குள் இருக்கிற பங்காளி வேற்றுமைகளை கழைந்து ஆதரவு சக்திகளுடன் இந்தியாவின் சாதீய விடுதலைப் போராட்டத்தில் ஒன்று சேர்வது இன்றைய காலத்தின் அவசியம். இந்த ஆயுதத்தை பறித்து ஆதிக்கத்தை நிலை நாட்டவே பார்ப்பனீய சக்திகள் "நாம் அனைவரும் இந்து" என கூவியழைக்கிறது. ஒடுக்கப்படுகிற மக்களே ஒன்றுபடுங்கள்!

"நமது யுத்தம் செல்வம் சேர்ப்பதற்கானதோ, அதிகாரத்திற்கானதோ அல்ல, இது விடுதலைக்கான யுத்தம், நமது ஆளுமையை மீட்டெடுப்பதற்கான யுத்தமிது." -டாக்டர்.பாபாசாகேப். அம்பேத்கார்.

17 November 2006

பெரியார் எந்த கடவுளை எதிர்த்தார்?

நண்பர்களே!

பெரியார் பற்றி தெரியாமலும், பெரியார் ஆற்றிய சுயமரியாதை பணியின் மீதுள்ள வெறுப்பிலும் பார்ப்பனீயவாதிகள் பெரியார் மீது சேறு வீசுவது வழக்கமானதே. பெரியார் உயிருடன் இருக்கையில், வேத சாஸ்திரங்கள் சொல்லி இருப்பதன் படி மேடைகளில் செருப்பு, கற்கள், மலம் என வீசி குழப்பங்களை உருவாக்கி அவரை பேச விடாது தடுக்கும் முயற்சியை மேற்கொண்டவர்கள் இந்த பார்ப்பனவாதிகள். இவர்களது மூதாதையர் செய்த இந்த வேதக்கொடுமைகளை கண்டு கலங்காது சுயமரியாதையில் நிமிர்ந்து நின்று மனிதனை மனிதனாக நேசிக்க கற்றுத்தந்தவர் தந்தை பெரியார். இன்று இணையத்தளங்களில் பெரியாரை பற்றி தவறான தகவல்களை பரப்ப ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க பார்ப்பனீயம் தனது வழக்கமான நடைமுறைகளை கையாழுகிறது. இதுவும் அவர்கள் பெரியாருக்கு செய்யும் பெருந்தொண்டாக கருதலாம். இவர்கள் தவறான தகவல்கள் பரப்புகிற வேளை தானே, நம்மால் உண்மையை அறியவும், பரப்பவும் முடிகிறாது.

பெரியார் கடவுள் எதிர்ப்பாளர் என்ற ஒரு வளையத்தில் அடங்குபவரல்ல. பெரியாரைப் பற்றிய பெரும்பாலான பரப்புரைகள் கடவுளுக்கு எதிரி என்ற ரீதியில் தான் அமைகிறது. இது பெரியாரை முழுமையாக புரிந்து கொள்ளாமையின் வெளிப்பாடு அல்லது அவரது சுயமரியாதை போராட்டத்தை வளரவிடாது பார்ப்பனீய அடக்குமுறையை வளர்க்கும் முயற்சியாக தான் இருக்க இயலும். பெரியார் எந்த கடவுளுக்கு எதிரி? அவரே பேசுகிறார் கேளுங்கள்...இனி பெரியாரின் குரல்

°°°°°°°°°°°
சில தொழிலாளர் தலைவர்கள் என்பவர்கள் என்மீது குரோதம் கொண்டிருக்கிறார்கள். என்னைப்பற்றி விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். ‘ராமசாமி நாயக்கர் மதத்தில், கடவுளில் பிரவேசிக்காவிட்டால் நான் அவருடன் நேசமாக இருப்பேன். ஆனால், அவர் நாத்திகம் மதத்துவேஷம் பேசுகிறார். ஆகையால் ஜாக்கிரதையாக இருங்கள்' என்று உங்கள் தலைவர்களில் சிலர் சொல்லி, உங்களை என்னிடம் அணுகவிடாமல் செய்கிறார்கள். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.

எது மதம், எது கடவுள் என்பது இந்த அன்னக் காவடிகளுக்குத் தெரியுமா? நான் எந்த மதத்தை, எந்தக் கடவுளை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகிறேன் என்பது, இந்தத் தற்குறிகளுக்குத் தெரியுமா என்று கேட்கிறேன். எந்த ஒரு மதம் ஒரு மனிதனை, ‘பிராமணனாக'வும் ஒரு மனிதனைச் சூத்திரனாகவும் அதாவது தொழிலாளியாகவும் பாட்டாளியாகவும், பறையனாகவும் உண்டு பண்ணிற்றோ, அந்த மதம் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன். ஒழிய வேண்டுமா வேண்டாமா? (ஆம், ஒழிய வேண்டும் என்னும் பேரொலி).

எந்தக் கடவுள் ஒருவனுக்கு நிறையப் பொருள் கொடுத்தும், ஒருவனுக்குப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழ உரிமை கொடுத்தும் மற்றொருவனை உழைத்து உழைத்து ஊரானுக்குப் போட்டுவிட்டுச் சோற்றுக்குத் திண்டாடும்படியும், ரத்தத்தை வேர்வையாய்ச் சிந்தி உடலால் உழைத்தவண்ணம் இருந்து கீழ் மகனாய் வாழும்படியும் செய்கிறதோ, அந்தக் கடவுள் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன். அந்தக் கடவுள் ஒழிய வேண்டுமா, வேண்டாமா? ஆகவே தோழர்களே! இது சொன்னால் நான் நாத்திகனும், மதத் துவேஷியுமா? ‘ஆம் ஒழிய வேண்டும்' என்று சொன்ன நீங்கள் மதத்துவேஷியா, நாத்திகர்களா?

°°°°°°°°°°°

(சென்னை ‘பி அண்ட் சி மில்' தொழிலாளர்கள் கூட்டத்தில் 30.6.1946 அன்று ஆற்றிய உரை)

நன்றி: கீற்று.காம்

09 November 2006

வர்ணாஸ்ரமமும் சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரலும்

முந்தைய காஞ்சி சங்கராச்சாரியார் அருளிய வார்த்தைகளிலிருந்து சில பகுதிகள் இங்கே.

சிவப்பு வண்ண எழுத்துகள் எனது கேள்விகள்.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்), வைதிக மதம்

வர்ண தர்மம்
.............................நம்முடைய ஸநாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வர்ணம் தர்மம் இருப்பதால், இது அவசியமில்லை என்று எடுத்துப் போட்டுவிட்டு நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கிவிடவேண்டும் என்று சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள். (அவர்களுக்கு வேற வேலையில்ல இராமசாமியார் வந்து சீர்திருத்தம், சுயமரியாதை அது இதுன்னு சொல்லி இதுவரை கேள்வி கேட்காம இருந்தவாளை எல்லாம் கிளப்பி விட்டுட்டார். இத தானே சொல்லுறேள் சாமி?)

.................மற்ற மதங்களில் சகல பிராணிகளுக்கும் அவசியமான பொது தர்மங்களை மட்டும் சொல்லியிருக்கிறது. அவற்றை நம் வைதிக மதமே ஸாமானிய தர்மங்கள் என்ற பெயரில் சர்வ ஜனங்களுக்கும் வித்தித்திருக்கிறது. அஹிம்ஸை, சத்தியம், தூய்மை, புலனடக்கம் தேவைக்கு அதிகமாக ஒரு துரும்பைக்கூடத் தனக்கென வைத்துக் கொள்ளாமலிருப்பது, தெய்வ பக்தி, மாதா பிதா விடம் விசுவாஸம், சகல ஜீவராசிகளிடத்துலும் சமமான அன்பு, இவை எல்லாம் எல்லாருக்கும் நம் மதத்தில் விதிக்கப்பட்ட ஸாமான்ய தர்மங்கள். (இந்த ஸாமான்ய தர்மத்தை கோட்சே, நரேந்திர மோடி, மத தீவிரவாத இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ் போன்றவை கடைப்பிடிக்க வேண்டாமுங்களா சாமி?) அது தவிர வர்ணம் என்ற பெயரில் சமூகத்தைப் பரம்பரை ரீதியில் வெவ்வேறு தொழில்களாகப் பல பிரிவாகப் பிரித்து சில விசேஷ தர்மங்கள் அவரவருக்கும் விதிக்கப்படிருக்கின்றன.

...............................

யோசித்துப் பார்த்தால், நம் தேசத்திலும்கூட பழைய வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்துபோய், எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்ராயம் வந்தபிற்பாடுதான், மத உணர்ச்சி குன்றி, நாஸ்திகம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிகிறது. சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது (மக்கள் விழிப்புணர்வு அடைந்து சூட்சுமத்தை புரிந்து கொண்டதன் விளைவு இதுன்னு சொல்ல வறேளா சாமி?).

.................பல வகுப்பாக சமுதாயத்தை வர்ண தர்மத்தில் பிரித்து வைத்திருக்கிற நம் மதமோ இன்றளவும் என்னை யார் என்ன செய்துவிடமுடியும் என்று மூச்சைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு உயிர்வாழ்கிறது. இதன் சூக்ஷ்மத்தை நாம் உணர்ச்சிவசப்படாமல் அறிவைத் தெளிவாக வைத்துக் கொண்டு ஆலோசித்துப் பார்க்க வேண்டும்.

ஆயிரம் பதினாராயிரம் வருஷமாக வர்ண தர்மத்தைப் பின்பற்றியும் நம் மதம் இத்தனை ஜீவ களையுடன் இருந்து வந்ததன் மர்மம் என்ன. அப்படியாவது, நம் சாஸ்திரங்களை ரக்ஷித்துக் கொண்ப்பதே ஸ்வதர்மம் என்று கொண்டிருந்த பிராம்மணர்கள் பெருமாபான்மையினராக (மெஜாரிட்டியாக) இருந்தார்களா இல்லை. அவர்கள் ஆயுத பலத்தையாவது வைத்துக் கொண்டிருந்தாரா. அதுவும் இல்லை. பிராமணன் பணம் சேர்த்து வைப்பது ரொம்பப் பிற்காலத்தில், சமீபத்தில் ஏற்பட்ட விபரீதம்தான். சாஸ்திரப்படி பிராமணன் ஏழையாகத்தான் இருக்க வேண்டும். இப்படிப் பணம் இல்லாமல், பலமும் இல்லாமல், எண்ணிக்கையிலும் பெரும்பான்மையாக இல்லாமல் இருக்கிறவர்கள் விதித்த சாஸ்திரப் பிரிவினைகளை மற்றவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும். (பிராமணர்கள் தான் வர்ணசாஸ்திரத்தை விதித்தார்கள்னு சொல்லுறேள்) மற்ற அத்தனைப் பேரும் அத்தனை காலமும் ஏமாந்தவர்களாகவா இருந்தார்கள். அப்படி இவர்கள் ஏமாந்து போயிருந்தால்கூட, அவ்வப்போது ஒரு புத்தர், ஒரு ஜீனர் மாதிரி ரொம்பப் பெரியவராக ரொம்பச் செல்வாக்கோடு ஒருத்தர் வந்து இந்த வேதம், யாகம் இதெல்லாம் வேண்டாம். எல்லா ஜனங்களுக்கும் பொதுவான சாமான்ய தர்மங்களை மட்டும் வைத்துக் கொள்வோம். ஸமஸ்கிருதம் வேண்டாம். பொது ஜனங்களின் பிராகிருத பாஷைகளான பாலி முதலியவைகளிலேயே நம்முடையது புது சாஸ்திரங்களை வைத்துக் கொள்வோம் என்று புதிய வழியைக் காட்டினால்கூட ஜனங்கள் அப்போதைக்கு ஏதோ ஒரு வசீகரத்தால் அந்தப் புது மதங்களில் சேர்ந்து இருக்கிறார்களேயழிய, அப்புறம் அவற்றின் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடைசியில் அவை ரொம்பவும் தேய்ந்து போயே போய் விடுகின்றன. பார்த்தால், பழைய வைதிக மதமே செத்தேனாபார் என்று தலையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிறது. (கடைசியா சுற்றி சுற்றி வந்து வர்ணாஸ்ரம சாதிமுறையை மாற்றக்கூடாதுன்னு சொல்ல வறேளா சாமி?)

நிஷ்பக்ஷபாதமாக இதை ஆராய்து பார்த்தால் என்ன தெரிகிறது. மற்ற தேசங்களிலும் சரி, நம் தேசத்திலும் சரி. மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இதுமட்டும் பதினாராயிரம் வருஷமாகப் போகாமலிருக்கிறதென்றால், அவைகளில் இல்லாத ஒன்று இவற்றில் இருக்கிறது என்று தானே அர்த்தம். அது என்ன என்று பார்த்தால், வர்ண தர்மம்தான் நமக்கு மட்டும் பிரத்தியோகமாக இருக்கிறது. ஆகையால் வர்ண தர்மம் சமூகச் சீர்குலைவுக்கே காரணம் என்று புது நாகரீகக்காரர்கள் சொன்னாலும், இது இருக்கிற சமூகம்தான் சீர்குலையாமல் இருந்து வருகிறது. நவீன யுகத்தில் சமத்துவம் என்று சொல்லப்படுவதைவிட சிலாக்கியமாக, சமூகத்திற்கு ரொம்பவும் க்ஷிக்ஷமம் விளைவிப்பதாகப் பழைய தர்மத்தில் எதுவோ இருந்திருக்க வேண்டும் என்று தானே ஏற்படுகிறது. (அந்த எதுவோ என்பது என்ன சாமி உறுதியாக சொல்லுங்களேன், யூகமாக சொல்லுறேளே) அதனால்தான் சமூகத்தைப் பலவாகப் பாகுபாடு செய்திருக்கிற நம் மதம் ஒன்று மட்டுமே, இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் விழமாட்டேன் என்று இன்று வரைக்கும் கையில் பிடித்துக் கொண்டு இருந்து வருகிறது.

வர்ணாஸ்ரம தர்ம அடிப்படையில் மனிதனை பிரித்து வைத்து சாதிகளாக கூறு போட்டு, ஒரு சாதி இன்னொரு சாதியை அடிமைப்படுத்தி, கொலை, பாலியல் பலாத்காரம் என அட்டூழியங்கள் நடத்தி சக மனிதனை கேவலமாக நடத்துவதை சங்கராச்சாரியார் எப்படியெல்லாம் ஆதரிக்கிறார் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

08 November 2006

பூணூலும் காந்தியாரும்...

பூணூல் பற்றி அடிக்கடி பல கேள்விகள் எழுகிறது. பூணூல் உயர்சாதி தன்மையை அடியாளாமாக்குகிறது என பகுத்தறிவுவாதிகள் கருத்து கொண்டுள்ளமை நாம் அறிந்ததே. பூணூலில் என்ன இருக்கிறது இப்படி பெரிதாக பேச என்ன இருக்கிறது?

பூணூல் என்பது என்ன?
யஜ்னோபவிதா, என்றழைக்கப்படுகிற கையால் பின்னப்பட்ட நூல் பெரும்பாலும் பிராமணர்களால் அணியப்படுகிறது. இடது தோளிலிருந்து தொங்கியவாறு மார்பு வழியாக புரண்டு வலது பக்கம் இடை வரை உருள்கிறது. இதை பூணூல் என்றும் அழைக்கப்படுகிறது. பூணூல் அணுயும் பழக்கம் வேதகாலத்தில் சடங்குகள் செய்யும் போது அணிய துவங்கியதாக கருதப்படுகிறது.

8 வயதானதும் பிராமண சிறுவனுக்கு (வது) முதலில் உபன்னயானா சடங்கு நடத்தி 3 நூல்களடங்கிய யஜ்னோபவிதா, (பூணூல்) அணிவிக்கப்படுகிறது. அத்துடன் புனிதமாக கருதப்படுகிற காயத்ரி மந்திரத்தையும் பயிற்றுவிக்கிறார்கள். திருமணமானதும் பொறுப்பை உணர்த்தும் அடையாளமாக 6 நூல்களாக அவை அதிகரிக்கிறது.
இன்றைய இந்து சமுதாயத்தில் பூணூல் பண்டைய கால மரபையும் சாதி அடையாளத்தையும் வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு யஜ்னோபவிதா அணிவிப்பதில்லை.

பூணூல் பற்றி காந்தியார் சொன்ன கருத்துக்கள்...
"நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு, இந்தியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும், பலர் நல்ல எண்ணத்தின் பேரிலேயே நான் பூணூல் போட்டுக் கொள்ளும்படி செய்ய முயன்றார்கள். ஆனால் அவர்கள் முயற்சி வெற்றியடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் போட்டுகொள்ளுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று விவாதித்தேன். பூணூல் கொள்ளுவது அனாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால் அதை அணிஅய் வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. பூணூலைப் பொறுத்தவரையில் எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால் அதை அணியவேண்டும் என்பதற்குரிய நியாயம் தான் எனக்குத் தென்படவில்லை."

காந்தியாரை மட்டுமல்ல திருவள்ளுவர் பட சர்ச்சையில் பூணூல் வரைந்து திருவள்ளுவர் பிராமணர் என சாதி அடையாளத்தை புகுத்த நடந்த வித்தையும் ஒரு வரலாறு.

பூணூலை கழற்றி எறிகிற சிலர் கூட தங்கள் மனதிற்குள் இருக்கிற பூணூலை அணிந்து கொண்டு தான் காரியங்களில் ஈடுபடுகின்றனர். எப்படியிருப்பினும் பூணூல் இன்றைய காலத்தில் சாதியின் அடையாளமாக வர்ணாஸ்ரமத்தின் சின்னமாக விளங்குகிறது என்பதை மறுக்க இயலுமா?

17 September 2006

யார் இவர்?

சிவந்தமேனி, தடித்த உடல், பெருத்த தொந்திம் நல்ல உயரம், வெளுத்த தலை மயிர், நரைத்த மீசை, நடுத்தரமான தாடி, திரண்டு நீண்ட மூக்கு, அகன்ற நெற்றி, உயர்ந்து மயிரடர்ந்த புருவங்கள், ஆழமான கண்கள், மெதுவான உதடுகள், செயற்கைப் பற்கள், ஒரு சாதாரண மூக்குக் கண்ணாடி.

பெசண்ட் அம்மையாரின் தலைமயிர், பர்னாட்ஷாவின் தாடி, தாகூரை விட அழகான மூக்கும், இவர்கள் இருவரையும் விட அழகான உருண்டை முகம், ஒரு தனியான முக வெட்டு, என்னமோ ஒரு விதமான கவர்ச்சி.

இடுப்பில் எப்போதும் ஒரு நான்கு முழத் துணி, காலில் செருப்பு. முக்கால் கையுடன் ஒரு மாதிரியான வெள்ளைச் சட்டை. அதில் வரிசையான நூல் பொத்தான்கள். பழங்காலத்து முழுக் "கோட்டு"க்கும் இக்காலத்து சட்டைக்கும் நடுவில் ஒரு நூதனமான உடுப்பு, வெளிப் புறத்தில் மூன்று பாக்கட்டுகள். உட்புறத்தில் (பணப்பை வைத்துக் கொள்வதற்காக) கட்டாயம் ஒரு பாக்கட். வெளிப்பைகளில் செய்தித்தாள்கள், சில கடிதங்கள், பொதுக்கூட்டங்களில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்கள், இரண்டொரு சிறு புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள், நாட்குறிப்பு, ஒரு சிறு கத்தி-ஆகிய சகல சாமான்களும் நிறைந்து எப்போதும் உப்பிக்கொண்டே இருக்கும். வெளிப்புறத்துக்கு மேல் ஒரு பவுண்டன் பேனா சொருகப்பட்டிருக்கும். உட்புறப் பையில் ஒரு மணிப்பர்ஸ். அதன் அறையொன்றில் ஒரு கடிகாரம்.

இவ்விதமான சட்டைக்கு மேல் போர்த்தியிருப்பது ஒரு ஐந்து முழப் போர்வை. அநேகமாக ஆரஞ்சு அல்லது காப்பி நிறத்தில். இந்த உடைகள் பெரும்பாலும் அழுக்காகவே இருக்கும். சட்டைப்பைகளின் ஓரங்கள் அடிக்கடி கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும். கையில் எப்போதும் ஒரு மொத்தமான தடி. பிடிக்கும் பக்கம் வளைந்திருக்கும்.

கையில் ஒரு தோற்பெட்டி. அதற்கு பூட்டுமில்லை; சாவியுமில்லை. மிக அந்தரங்கமான சொந்த கடிதங்கள் முதல், பழைய செய்தித்தாள்கள், பட்டையாக நசுக்கப்பட்ட பற்பசை, மிக பழைய பல் ப்ரஷ், மைப்பெட்டி, சோப், கடிதத்தாள், உறைகள் வரையில் எல்லாம் இப்பெட்டிக்குள் தான். சட்டைப் பைகளில் உள்ள குப்பைகள், ஏதாவது ரிக்கார்டுகள் மிகுந்துவிட்டால், அவைகளில் சில இப்பெட்டிக்குள் வந்துவிடும். இரண்டு மூன்று மாதங்களுக்குள் ஒரு முறை பெட்டி மூட முடியாமலே மாட்டிக் கொண்டால், இப்பெட்டி காலி செய்யப்படுவதுண்டு.

இம்மாதிரி உருவத்தோடும், உடையோடும், வாலிப நடையோடும் கையிற் பிடித்த தடியுடன் இதோ தெரிகிறாரே, இவர் தான் பெரியார். தமிழரின் தலைவர். ஈரோட்டு இராமசாமியார்.
*****
பெரிய்ஃஃரின் பொறுமை யாவராலும் போற்றக்கூடியது. எவ்வளவு கிளர்ச்சியான நிகழ்ச்சிகளிலும் சரி, எதிர்பாராத சம்பவங்களிலும் சரி பொறுமையை மட்டும் இழக்கமாட்டார். கடுங்சொற்களை பயன்படுத்தமாட்டார்.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு (1929) ஒரு சமயம் மன்னார்குடியில் மிகப்பெரிய ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். பார்ப்பனீயத்தால் மக்களுக்கு நேர்ந்துள்ள கெடுகளைப்பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தார். அவர் Pஏசும் மேடைக்கு கீழே ஒரு 'பிராமணர்' உட்கார்ந்து கொண்டு சரமாரியாக கேள்விகளை எழுதி அவரிடம் கொடுத்துக்கொண்டே இருந்தார். கூட்டத்தில் உள்ள பொதுமக்கள் கடுங்கோபம் கொண்டு அப்பிராமணரைச் சீறிக்கொண்டே இருந்தனர். பெரியார் அவர்களை அடக்கிக்கொண்டே ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூறி வந்தார். பல கேள்விகள் ஆகி விட்டன. எழுதிக் கொண்டே இருக்கும் போது பென்சில் முனை ஒடிந்து விட்டது. பேசிக் கொண்டிருந்த பெரியார் அதனைக் கவனித்து விட்டார். தம் பேனாவை எடுத்து, உறையை அதன் பின் புறம் போட்டார். "அய்யா! இதனால் எழுதுங்கள்" என்று கொடுத்து விட்டு பேச்சைத் தொடர்ந்தார். 'பிராமாணர்' வெட்கிப் போய் விட்டார். மேலே எழுத முடியவில்லை.

கூட்டம் முடிந்தது. மோட்டாரில் ஏறி இருந்த பெரியாரிடம் கூட்டத்தை நெருக்கித் தள்ளிக் கொண்டு அப்பிராமணர் வந்தார். "நாயக்கர்வாள்! என்னை மன்னிக்க வேண்டும். எதிரிகள் தங்களைப் பற்றி கூறுவது முற்றும் தவறு. நீங்கள் மகாப்பெரியவர். நமஸ்காரம்" என்று கூறி விட்டுப் போனார்.

மற்றொரு சமயம் பெரியாரும் தோழர் கண்ணப்பரும் மதுரைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். மூன்றாம் வகுப்பு வண்டியில் இவர்களோடு பிரயாணம் செய்த ஒரு பிராமணர் கண்ணப்பரோடு வாதம் புரிந்து கொண்டிருந்தார். கண்ணப்பர் சில கடுமையான சொற்களைச் சொல்லி விட்டார். உடனே, பெரியார் இடைமறித்து, அவரை நோக்கி "ஏன் இவ்வாரு பேசுகிறீர்கள்? பொறுமையாய் பதில் கூறினால் தானே அவருடைய தப்பெண்ணங்களை மாற்றி, நம் பக்கம் அவரை திருப்பலாம்? சந்தேகங்களை விளக்கி, உண்மையை உணர்த்த வேண்டிய இம்மாதிரியான நல்ல சந்தர்ப்பங்களை வீணாக்கலாமா?" என்றார். அதற்கு அப்பிராமணர் பெரியாரைப் பார்த்து, "பெரியவரே, நீங்கள் சொல்வதை இவர் கேட்கமாட்டார். இவர்களெல்லாம் அந்த இராமசாமி நாயக்கன் கூட்டத்தை சேர்ந்தவர்கள்; இப்படித் தான் பேசுவார்கள்" என்றார். இருவருக்கும் உண்டான சிரிப்பை மறைத்துக் கொண்டார்கள். பிறகு கண்ணப்பர் அடுத்த வாண்டியில் ஏறிவிட்டார். பெரியார், வண்டியிலுள்ள கக்கூசுக்குள் சென்றிருந்தார். இந்நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் அந்த அய்யரை நோக்கி, "இவர் யார் தெரியுமா? இவர் தான் இராமசாமி நாயக்கர்; நீங்கள் என்ன அப்படிப் பேசி விட்டீர்களே" என்று சொல்லிவிட்டார். பெரியார் வெளியில் வந்தார். அய்யர் எழுந்து நின்று வணங்கியபடியே, "அய்யா! தங்களை யாரென்று தெரியாமல் பேசிவிட்டேன்; மன்னித்துக் கொள்ளுங்கள். தங்களைப் பற்றி அவதூறாக பேசுபவர்கள் அனைவரும் பொய்யர்கள். தங்களுடைய நற்குணமும், பொறுமையும் எவருக்கும் வராது. தாங்கள் அவசியம் ஒரு தடவை என் வீட்டிற்கு வர வேண்டும். நான் காரைக்குடியில் 'இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்'டாக இருக்கிறேன்" என்று கேட்டுக்கொண்டார்.

(சாமி சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் என்ற புத்தகத்திலிருந்து. முதற் பதிப்பு 1939.)

03 September 2006

பெரியாரின் பேச்சு (ஒலி ஒளி வடிவில்)

தந்தை பெரியாரின் பேச்சு! அவரது குரலை கேட்க ஆவலுடையவர்களுக்காக...



கூகிளில் பார்க்க http://video.google.com/videoplay?docid=6249903370246926377

30 August 2006

பெரியார் சிலைக்கு சந்தனம்: 2 சிவசேனா கட்சியினர் கைது

பெரியார் சிலைக்கு சந்தனம்: 2 சிவசேனா கட்சியினர் கைது
ஆகஸ்ட் 30, 2006

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் பெரியார்சிலைக்கு சந்தனம் பூசிஅவமரியாதை செய்த சம்பவம் தொடர்பாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள பெரியார் சிலைக்கு சந்தனம் பூசியும், மாலை அணிவித்தும், சூடம் ஏற்றி, ஊதுவத்தி கொளுத்தியும் அவமரியாதை செய்யப்பட்டது. இதனால் தி.க.வினர் கடும்ö காந்தளிப்படைந்தனர்.

சட்டசபையிலும்இப்பிரசிசனை எதிரொலித்தது. இந்தசெயலில் ஈடுபட்டவர்கள் பன்றிக் குணம் படைததவர்கள் என்று முதல்வர் கருணாநிதி காட்டமாக பதிலளித்தார். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரும் சிவசேனை கட்சியைச் சேர்ந்தவர்கள். திண்டுக்கல்லில் மணிமாறன் என்பவரை முதலில் நேற்று இரவு போலீஸார்பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட சிவசேனா செயலாளரான தர்மராஜாஎன்பவரை பல்லவ நாயக்கன்பட்டி என்றகிராமத்தில் வைத்து போலீஸார்கைதுö சய்தனர்.

தர்மராஜா மீது ஏற்கனவே தி.க. பிரமுகர் ராஜேந்திரன் என்பவரை அரிவாளால் வெட்டியது உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: http://thatstamil.oneindia.in/news/2006/08/30/periyar.html

பெரியார் சிலையும் இராமனுக்கு செருப்பு மாலையும்

தமிழகத்தின் திண்டுக்கல்லில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு ஆளரவமற்ற இரவுப்பொழுதில் நெற்றிப்பட்டை, மாலையிட்டு, திரி கொழுத்தி வைத்து மகிழ்ந்திருக்கிறது வக்கிர செயல் பிடித்த கூட்டமொன்று அவரவரது வக்கிரங்களின் அளவிற்கேற்ப இந்த இழிசெயலை ஆதரித்து தன் மன வக்கிரங்களை பதிவிலேற்றி. சக வலைப்பதிவாளர்களும் மகிழ்கின்றனர். பெரியார் மீது ஏன் இந்த வக்கிரம்?

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கடவுள், வேதம், சாத்திரம், ஆச்சாரம், ஆகமம், பூசணிக்காய் என மக்களை அடிமைப்படுத்திய கூட்டத்தை, அதன் கருத்தியலை துணிந்து எதிர்த்து உடைத்தெறிந்தவர் தந்தை பெரியார். கடவுள் இல்லை, கடவுளை நம்புபவன் முட்டாள், கடவுளை பரப்புபவன் அயோக்கியன் என்று வெளிப்படையாக பேசி தான் தனது உரையையே துவக்கியவர் அந்த அறிவு மேதை. கடவுள் என்ற பெயரில் காட்டுமிராண்டி உலகத்தை விட கேவலமான சாதி அடிமைத்தனத்தை வகுத்து, அதை கட்டிக்காத்து மக்களை அடிமையாக்கிய பார்ப்பனீயத்தையும் அதன் ஆணிவேரையும் அசைத்தன பெரியாரின் வைக்கம் கோவில் நுளைவு போராட்டம்.

நம்பூதிரி என்று அழைக்கப்படுகிற கேரள பிராமணர்களால் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதியாது தடுத்து, வீதிகளில் கூட மனிதனாக நிமிர்ந்து நடக்க விடாமல் அடக்குமுறை நடத்திய அவல நிலையை அகற்ற ஈரோட்டு சிங்கம் தந்தை பெரியார் கிழர்ந்தெழுந்தார். போராட்டம் வலுபெற்றதும் அதன் முடிவில் பார்ப்பனீயம் ஆட்டம் கண்டது. அதனால் தான் வைக்கம் வீரர் பெரியார் என அழைக்கப்பட்டார். இன்றும் அந்த கேரள வாழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரியார் தலைவர் என்பது வரலாறு.
அதன் தொடர்ச்சியாக அவர் கண்ட களங்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மகக்ளின் விடுதலையை, விடியலை, சமூக சமநிலையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு சுழன்றது. இறப்பிற்கு முந்தைய நாள் வரை தான் கொண்ட கருத்தை, கொள்கையை உறுதியாக உரக்க உரைத்து தமிழர்களின் வாழ்வில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். தனது தொன்னூற்றி ஐந்தாம் வயதில் கூட மூத்திரப்பையை ஒரு கையில் சுமந்த படி நோயிலும் சுழன்று சூரியனாய் மூடக்கருத்துக்களை எதிர்த்து அடக்குமுறையாளர்களுக்கு சவாலாக இருந்து பார்ப்பனரல்லாத மக்களின் காப்பரணாக விளங்கிய மாமனிதர் அவர். தனது சொந்த பணம் சொத்து அனைத்தையும் அறிவுக்கருத்துக்களை பரப்ப செலவிட்டவர். தனது பயணங்களை மிக மிக சிக்கன செலவில் நடத்தி அடித்தட்டு மக்களின் பள்ளிக்கூடங்களாக அறிவு மிகுந்த சொற்பொழிவுகளால் மாலை நேர பொதுக்கூட்டங்கள், பாசறைகள், பத்திரிக்கைகள் என பன்முக பிரச்சாரத்தை சொந்த பணத்தில் நடத்திய உன்னத மனிதர்.

ஒரு வலைப்பபதிவில் பின்னூட்ட நாயகர் ஒருவர் உமிழ்ந்தது //ராமசாமி நாய்க்கருக்கு சிலை வச்சதே அந்த ஆளாட கொள்கைக்கு விரோதம், அப்புறம் அதுக்கு என்ன செஞ்சா இவனுகளுக்கு என்ன?ஊருக்கு ஒரு பத்து பேரு இருந்துகிட்டு இவனுக சவுண்டு தாங்கல.எல்லாம் ரிடயர் ஆகி மண்டைய போடுற வரைக்கும் இப்படியே தான் கம்பத்துல கட்டி வச்ச நாய் மாதிரி - ஒரே சவுண்டா இருக்கும்.//

பார்ப்பனீய திமிர் பிடித்து இன்றும் சாதி அடைமொழியிட்டு தான் மனிதனை அழைப்போம் என்பவர்களை என்னவென்பது? என்ன படித்து என்ன பயன்? பார்ப்பனீயம் இரத்த நாளமெங்கும் சுரக்கும் வரை இவர்களது சாதி வெறி அடங்கப்போவதில்லை. பெரியாருக்கு சிலை வைப்பது அவரது கருத்துக்களுக்கு எதிரானது என இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து புதையல் கிடைத்ததோ? இது விடயத்தில் பெரியார் கருத்துக்களுக்கு காவல்காரர்கள் போல முகமூடியணிவது இவர்களது பார்ப்பனீய சாயம் வெளுக்கிறது என்பதன் அடையாளமே. கலைஞர் கருணாநிதிக்கு அண்ணாசாலையில் சிலை வைக்க காரணமாக இருந்தது தந்தை பெரியார் என்பதும், அறிவு மேதை சாக்கிரட்டீஸ் சிலை அருகில் நின்று தன்னை படம் பிடித்து, தானும் சாக்கிரட்டீஸ் போல அறிவுக்கருத்துக்களை பரப்புபவர் எனபதை அறிவித்ததும் இவர்களுக்கு புரியுமா? ஊர்வன, பறப்பன என பல வடிவங்களில் சிலை வடித்து கட்டுக்கதைகளை உருவாக்கி மக்களை விலங்குகளை விட கேவலமாக்கிய மூடத்தனத்தை எதிர்த்தவர் பெரியார். ஒட்டு மொத்தமான சிலைகளின் எதிர்ப்பாளரல்ல என்பதை பெரியாருக்கு சிலை சரியானதா என வினவுபவர்கள் சரிவர புரிந்து கொள்ளட்டும்.

இராமன் சிலைக்கு செருப்பு மாலையிட்டார் பெரியார் இது ஒன்றும் இரகசியமல்ல. நீதிமன்ற வழக்காகி, பெரியாரே அந்த வழக்கில் வாதாடினார் எதற்காக இராமனுக்கு செருப்பு மாலையிட்டார் என நீதிமன்றத்திலேயே தெளிவுபடுத்தினார். தான் செய்த செயலை ஒப்புக்கொண்ட வல்லமை படைத்தவர் பெரியார். எதற்காக இராமனுக்கு செருப்புமாலை? தமிழ் மக்களை அடிமைப்படுத்திய பார்ப்பனர்களது ஆரிய் அடையாளமான இராமனுக்கு செருப்பு மாலையிட்டார் பெரியார். தமிழ் மன்னர் இராவணனை கொடியவனாக சித்தரித்த கட்டுக்கதையான ஆரிய படைப்பான இராமாயணத்தையும் அதனுள் இருக்கும் ஆரிய சூழ்ச்சியையும் எதிர்த்தவர் பெரியார். இராவணனை பொம்மை உருவாக செய்து இழிவுபடுத்தி கொழுத்தி மகிழ்ந்த ஆரிய லீலா கூத்தை எதிர்க்கும் விதமாக இராமனுக்கு செருப்பு மாலையணிந்தார் பெரியார். இது ஒன்றும் இரகசியமல்ல. நாட்டார் வழக்கியல் தெய்வங்களுக்கு பெரியார் செருப்பு மாலையிட்டாரா? இல்லையே ஏன்? பார்ப்பனீய எதிர்ப்பின் ஒரு அம்சமாகவே பெரியாரின் செருப்பு மாலை போராட்டம் அமைந்திருந்தது.

பெரியார் இந்துக்களை அவமதித்தார் என கூக்குரலிடுபவர்கள் பதில் சொல்லுங்கள், ஆதிக்க சாதியினரும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களும் சமமா? அப்படியெனில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசு ஆணை வந்ததும் ஏன் இவ்வளவு ஆர்ப்பட்டம்? கோயிலில் நீ உயர்சாதியா, மற்றவர்கள் இழிந்த சாதியினரா? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகி வழிபாடு நடத்தினால் சாமிக்கு கோபம் வந்து கைலாயத்துக்கு போய் விடுமா? இறைவன் முன் அனைவரும் சமம் என்கிற தத்துவங்கள் பிறந்த உலகில் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதி மட்டுமே கோயிலில் வழிபாடு நடத்தலாம் என்கிற வெங்காயங்களை என்ன என்று சொல்வது? இப்படி இருக்கையில் நீயும் நானும் அவனும் இந்து என்பது மோசடி இல்லாமல் வேறு என்ன?

பெரியார் சிலைக்கு வணக்கம் தானே செய்திருக்கிறார்கள் மகிழுங்கள் என்கிற அடக்கமான நடுநிலைவாதிகளுக்கு; சரித்திரத்தில் பார்ப்பனீயம் இப்படி சீர்திருத்தத்திற்காக போராடியவர்களை கடவுளின் அவதாரம் என பார்ப்பனீய தத்துவத்தில் உள்ளடக்கி நீர்த்து போக வைத்த வரலாறு மறந்திருக்கலாம். புத்தர், நந்தனார், நாராயணகுரு, முத்து குட்டி சாமி என அந்த மாமனிதர்களின் பட்டியல் நீளமானது. தனக்கு எதிராக புரட்சி செய்பவர்களை அவதாரமாக்கிவிட்டால் அவர்களது கொள்கை, போராட்டம் மறைக்கப்படும் என்பது பார்ப்பனீய தந்திரம். அந்த தந்திரத்தை பெரியார் விடயத்தில் சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்த முயல்கிறார்களா? அது பெரியார் விடயத்தில் வெற்றியடைவது அவ்வளவு எளிதானதல்ல என்பதை காலம் உணர்த்தும்.

எந்த கருத்தியலை பெரியார் எதிர்த்தாரோ அந்த கருத்தியல் கொண்ட அடக்குமுறையாளர்களின் பாசிச் வக்கிரங்கள் தான் இன்று திண்டுக்கல்லில், வலைப்பூக்களில் என எதிரொலிக்கின்றன என்பதில் வியப்பில்லை. பகுத்தறிவு இயக்கம இப்படிப்பட்ட 'வேடமிட்டு அலைகிற அதிமேதாவிகளை' சந்தித்து தான் வளர்ந்தது. இந்த இழிசெயல் புரிபவர்களையும் அவர்களுக்கான இடத்தில் அனுப்பி வைக்குமென தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த வக்கிரத்தையும் பகுத்தறிவு இயக்கங்கள் சந்திக்கும். சிலையாகியும் பார்ப்பனீயத்தை பதற வைக்க பெரியாரால் முடிகிறது. அந்த விதத்திலும் அய்யா பெரியார் தான்!

திரு

29 August 2006

பெண் உரிமை பற்றி பெரியார்- இறுதி பகுதி

பெண்களை வீட்டுவேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள். (கு.8.3.36;14:3)

இன்று நம்முடைய சமுதாயத்திற்கு இருக்கும் குறைகளுக்கும் அவமானத்திற்கும் நம் மூடநம்பிக்கைகளே காரணமாகும். அதுவும் நம் தாய்மார்களிடம் இவ்வளவு இருக்குமானால் பிறகு அவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளின் நிலை என்னாவாகும்?எந்தச் சீர்திருத்தமும் பெண் மக்களிடம் இருந்து வந்தால் அதற்கு வலிவு அதிகம். (கு.27.10.40;3:3)

இன்றையப் பெண்கள், வெறும் அலங்காரத்தோடு திருப்தியடைந்து விடுகிறார்கள், அல்லது திருப்தி செய்யப்பட்டு விடுகிறார்கள். எனவே இவர்களுக்கு விடுதலை வேட்கை பிறப்பது அரிதாயிருக்கிறது. (வி.26.5.58;1:பெ,செ.)

குழந்தை மணம் ஒழிந்து, திருமண ரத்து, விதவைமணம்,கலப்புமணம், திருமண உரிமை ஆகியவைகள் இருக்குமேயானால் இன்றுள்ள விபசாரத்தில் 100-க்கு 90 பகுதி மறைந்து போகும். (வி.21.3.50;பெ.செ.)

பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம், ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கின்றாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதனால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருசுபடுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின்றார்கள். அன்றியும், அப்பிள்ளை பெறும் தொல்லையால் அவர்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம்ஏற்பட இடமுண்டாகி விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும். (கு.12.8.23;10:3)

16 August 2006

பெண் உரிமை பற்றி பெரியார்-பாகம்4

தாலி கட்டுவதென்பது அன்று முதல் அப்பெண்ணைத் தனக்கு அடிமைப் பொருளாக ஏற்கிறான் என்பதும், அப்பெண் அன்று முதல் ஆணுக்கு அடிமையாகி விட்டாள் என்பது மான கருத்தைக் குறிப்பதற்குத்தான். இதன் காரணமாக் கணவன் மனைவியை என்ன செய்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை, கணவன் தவறான முறையில் நடந்தால் அவனுக்குத்தண்டனையும் கிடையாது. (வி.15.4.61;1:பெ.செ)

இன்றையப் பெண் எவ்வளவோ கல்வியும் செல்வமும் நாகரிக அறிவும் கவுரவம் உள்ள சுற்றத்தாருக்குள்ளும் சகவாசத்துக்குள்ளும் இருந்துவந்தும், மிகப் பழங்காலப் பட்டிக்காட்டுக் கிராமவாசிப் பெண்களைவிட இளப்பமாய் நடந்து கொள்வதைப் பார்த்தால், நமக்கு எவ்வளவு சங்கடமாய் இருக்கிறது? இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர்களால் வளர்க்கப்பட்டால், அவற்றிற்கு மனிதத்தன்மை எப்படி ஏற்படும்? (பெ.சி.மி.187)

நமக்கு பெண்கள் தங்களைப் பிறவி அடிமை என்று நினைத்துக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும். (வி.22.3.43;3:4)

பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிகமிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள், எதிர்காலத்தில் “இவள் இன்னாருடைய மனைவி” என்று அழைக்கப்படாமல், “இவன் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்பட வேண்டும்.(கு.5.6.48;14:2-3)

கணவனின் அளவுக்கு மீறிய அன்பையும், ஏராளமான நகையிலும் புடவையிலும் ஆசையையும், அழகில் பிரக்கியாதி பெறவேண்டுமென்ற விளம்பர ஆசையையும் பெற்ற பெண்களும், செல்வத்தில் புரளும் அகம்பாவப் பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்துவிடுவார்களே ஒழிய, சீர்திருத்தத்திற்குப் பயன்படமாட்டார்கள். (கு.29.9.40;15:3)

தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்துகொள்வதையும், நைசான நகைகள் போட்டுக்கொள்வதையும் சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும் தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர-ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை. (வி.11.10.48;3:2)

சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரை யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால் முதலில் நமது பெண்மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களே. அக் குழந்தைகளுக்கு 6,7 வயது வரையில் தாய்மார்களேதான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். (கு.1.5.27;5:3)

இந்து மதத்தின் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களாயிருந்தும் இந்துமதக் கொள்கையின்படி பெண்களுக்கு கல்வியும் சொத்துக்களும் இருக்க இடமில்லையே ஏன்?(கு.3.11.29;8)

(தொடரும்)

13 August 2006

பெண் உரிமை பற்றி பெரியார்-பாகம்5

ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம்: எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம் என்கின்ற முறையே, விபச்சாரம் (பாலியல் தொழில்) என்னும் பிள்ளையைப் பெற்றெடுக்கின்றது. (கு.16.6.35;8:2)

மற்றவர்கள், பெண்களின் உடல் நலத்தை உத்தேசித்தும் குடும்பச் சொத்து குறையாமல் இருக்கவேண்டுமென்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியம் என்று கூறுகின்றார்கள். பெண்கள் விடுதலையடையவும் சுயேச்சைபெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். (கு.6.4.30;10:9)

பெண்ணைக் கொல்ல ஆணுக்கு உரிமை இருந்தால் ஆணைக் கொல்லப் பெண்ணுக்கும் உரிமை வேண்டும். ஆணைத் தொழுதெழ பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால், பெண்ணைத் தொழுதெழ ஆணுக்கும் நிபந்தனை இருக்க வேண்டும். (கு.12.2.28.13.3)

ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன், என்றும் விடுதலை பெறமுடியாத கட்டுப்பாடுகள், பலப்பட்டுக் கொண்டு வருகின்றன, பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சிகளே ஒழிய வேறல்ல. எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா? (கு.12.8.28;10:1-2)

(தொடரும்)

12 August 2006

பெண் உரிமை பற்றி பெரியார்-பாகம்3

ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான். (வி.24.6.40;3:4)

ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் ஒரு பண்ணை - ஓர் ஆணின் கண் அழகிற்கு ஓர் அழகிய - அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். (கு.21.7.46;2:2)

பெண்மக்கள் அடிமையானது ஆண்மக்களால்தான். ஆண்மையும் பெண் அடிமையும்கடவுளாலேயே ஏற்பட்டதாக எல்லா ஆண்களும் கருதுவதும், பெண்கள் அதை உண்மையென்று பரம்பரையாக நினைத்துக் கொண்டிருப்பதும்தான் பெண் அடிமைத்தனம் வளர்வதற்குக் காரணமாகும். (வி.14.2.61;1:பெ,செ.)

திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே, அதில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் சம தோற்றம், சம அன்பு, ஒத்த அறிவு, கல்வி ஒற்றுமை இருக்குமா என்று கருதுவதில்லை. அதற்கு மாறாக, நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு நல்ல அடிமையாக இருக்குமா என்ற கருத்தில், மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையே தான் பெண்கள் பிரச்சினையிலும் பார்க்கிறார்கள்.(வி.5.4.61;1:பெ.செ.)

பெண் உரிமை பற்றி பெரியார்-பாகம்2

பெண்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியும், உலக நடப்புக் கல்வியும், தாராளமாகக் கொடுத்து, மூட நம்பிக்கை, பயம் ஆகியவற்றை ஊட்டக்கூடிய கதைகளையோ, சாத்திரங்களையோ, இலக்கியங்களையோ காணவும் கேட்கவும் சிறிதும் இடமில்லாமல் செய்ய வேண்டும். (வி.22.3.43;4:2)

பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும் சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும். (பெ.சி.மி:170)

ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது மொழிகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம், ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை. (கு.8.1.28;6:3)

கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும். (கு.8.1.28;15:1)

பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது? (பெ.க.மு.தொ;134)

பெண்களுக்குத்தான் கற்பு: ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால்,பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை. (கு.1.3.36;11:3)

நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா? (வி.1.6.68;3:5)

சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ''ஆண்மை''க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன. ''ஆண்மை''க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.உலகத்தில் இந்த “ஆண்மை” மேலோங்கி நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலன்றி பெண்களுக்கு விடுதலையில்லை என்பது உறுதி. (கு.12.8.28;10:2)

தொடரும்...

பெண் உரிமை பற்றிய பெரியார் மொழிகள்...

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.(கு3.11.79;8)

பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?அவர்களுக்கு அறிவு இல்லை. ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகத்தான். கு.16.11.30;7)

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள், ஆனால் ஆண்களோ, பெண்களைப் பிறவிமுதல் சாவுவரை அடிமையாகவும் கொடுமையாகவுமே நடத்துகிறார்கள். (கு.8.2.31;12:2-1)

இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் வேதனையையும், இழிவையும், அடிமைத்தனத்தையும்விட மிக அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள். (கு.28.4.35;5:1)

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சிபெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது. (கு.16.6.35;7:3)

தொடரும்...

பெரியார் பற்றி யுனெஸ்கோ!

பெரியார், புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை. அறியாமை, மூட நம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் மட்டமான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி...

யுனெஸ்கோ 27-6-1970

பெரியாரின் வார்த்தைகளில் அவரைப் பற்றி...

ஈ.வே.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

அந்த தொண்டு செய்ய எனக்கு "யோக்கியதை" இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதை தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாக கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத் தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகின்றேன்.

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகின்றேன்.


ஈ.வே.இராமசாமி

பெரியார் வலைப்பூவின் நோக்கம்!

வலைப்பதிவு நண்பர்களுக்கு வணக்கம்!

இணையத்தில் வலைப்பூ வழியாக பெரியார் கருத்துக்கள், பெரியார் பற்றிய பதிவுகளை பதிவு செய்து இளைய தலைமுறைக்கு சேர்க்கும் முயற்சியாக இந்த வலைப்பூவை துவங்குகிறேன். இந்த முயற்சியில் இணைய விருப்பமுள்ள நண்பர்கள் இணைந்து கொள்ள வரவேற்கிறேன்.

அன்புடன்,

திரு