உலகை அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்குள் ஆதிக்கம் செலுத்த துடித்து, "நான் வளர்கிறேனே மம்மி" விளம்பரத்தில் திளைக்கிற இந்தியாவை பற்றி இந்த "தேசவிரோதிகள்" வெளிநாட்டினர் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்க பேசியது என்ன?
"உங்களுக்கெல்லாம் அறிமுகமாகி இருக்கிற இந்தியா 20 சதவிகித மக்களை பற்றியது. அவர்களுடைய வளர்ச்சி, கனவு, திட்டம், மதம், கொள்கை, வாழ்க்கை பற்றியது. இந்த திரைக்கு பின்னால் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை போராட்டம் மறைக்கப்படுகிறது."
"பெண்களுக்கான திட்டங்களும் ஒதுக்கீடுகளும் ஆதிக்க வகுப்பை சார்ந்த பெண்களுக்கே சேர்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்கும், மேல்சாதியினரின் கல்வி வளர்ச்சிக்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது. இது எங்கள் மக்கள் வேலை மற்றும் தலைமை பொறுப்புகளில் வருவதற்கு எதிரான தடை. கிடைக்கிற சில திட்டங்களில் கூட ஆண்களுக்கே கிடைத்து விடுவதால் ஒடுக்கப்பட்ட பெண்கள் இரண்டு விதமான ஒடுக்குமுறையை சந்திக்கிறார்கள். ஒன்று சாதி சார்ந்தது இன்னொன்று ஆணாதிக்கம் சார்ந்தது."
காற்று பட்டால் கூட தீட்டாக ஒதுக்கி வைக்கப்படுகிற ஒடுக்கப்பட்ட பெண்களை வன்புணர்ச்சி செய்கிற வேளைகளில் மேல்சாதி ஆணாதிக்க வர்க்கத்திற்கு "தீட்டு" பற்றிய கவலையில்லை. அவர்களது மதமே அதை தான் அவர்களுக்கு கற்றுத் தருகிறது.
"பெண்களையும், நாயையும் தினமும் அடித்து வளர்க்க வேண்டும்"
"என்னோட பாட்டி பீ அள்ளி அகற்றும் வேலை பாத்தாங்க, என் அம்மாவும் அதை தான் செய்தாங்க, நானும் அதையே செய்திருக்கேன்....இந்த மாதிரி வேலை செய்பவர்களுக்கு கண்பார்வை, இதயம், ஈரல், தோல் சார்ந்த நோய்கள் அதிகமா வந்து ஆரோக்கியமற்று வாழுறாங்க" - தனது பரம்பரை அடிமையாக்கப்பட்டது பற்றி, உத்தரபிரதேசத்திலிருந்து, மஞ்சு வால்மீகி
நம்மிடையே "இன்னும்" 7 தலைமுறைகளின் பெயர், வரலாறு, பரம்பரை குலப்பெருமை என பெருமிதம் கொள்பவர்களுக்கும் ஒடுக்கபடுகிற மக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி என்பது ஒரு அடக்குமுறையின் வரலாற்றுப் பதிவு.
தகுதியும் திறமையும் பற்றிய வாதங்களால் அடக்குமுறையை ஆதரிப்பது என்பது இன்று அறிவுசீவித்தனமாக வளர்கிறது. பரம்பரை பரம்பரையாக "இழிபிறவிகளாக" நடத்தப்பட்டு வந்தவர்கள் ஒரு தலைமுறை அலல்து இரு தலைமுறை கல்வி, வேலைவாய்ப்பில் குலப்பெருமை பேசும் ஆதிக்கசாதியினருடன் தகுதி, திறமை என்ற அளவுகோலில் போட்டியிட சொல்வது மோசடியான ஆதிக்கமனப்பான்மை. இடஒதுக்கீடு அமலுக்கு வந்து 15 ஆண்டுகள் கடந்தும் ஒடுக்கப்பட்ட மக்களில் நிலை நம்பிக்கையற்ற, அடையாளம் இல்லாது கல்வி, வேலைவாய்ப்பற்ற நிலையில் இருக்கிறது.
அவர்களின் அடையாளம் ஒடுக்கப்படுகிற சாதியினர் என்பதே! இந்த அடையாளம் ஒரு போராட்ட கருவியாக அமைதல் அவசியம். ஆதிக்கசாதியினரின் சாதித் திமிர் பிடித்த சங்கங்களுக்கும், அடக்கப்படுபவனின் ஒன்று கூடல் அடையாளத்திற்கும் வேறுபாடு அதிகம். வெள்ளையினத்தவரின் அடக்குமுறைக்கு எதிராக கறுப்பின மக்களின் அமைப்புகள் எழுந்ததை யாரும் வரலாற்றில் குறை சொல்லவில்லை. கறுப்பு என்ற இழிவாக நடத்தப்பட்ட ஆயுதம் மறுப்பக்கத்தில் விடுதலைக்கான கூரான சிந்தனையியலை உருவாக்கியது. இப்படியான் அடையாளத்திலிருந்து பிறந்த விடுதலை வேட்கையினால் தான் தென்னாப்பிரிக்காவில் வாழுகிற இந்தியர்கள் கறுப்பின மக்களுடன் ஒரே களத்தில் நிறவெறியை எதிர்த்து நின்றார்கள். ஒடுக்கப்படுகிற மக்கள் ஒன்று கூடி தங்களுக்குள் இருக்கிற பங்காளி வேற்றுமைகளை கழைந்து ஆதரவு சக்திகளுடன் இந்தியாவின் சாதீய விடுதலைப் போராட்டத்தில் ஒன்று சேர்வது இன்றைய காலத்தின் அவசியம். இந்த ஆயுதத்தை பறித்து ஆதிக்கத்தை நிலை நாட்டவே பார்ப்பனீய சக்திகள் "நாம் அனைவரும் இந்து" என கூவியழைக்கிறது. ஒடுக்கப்படுகிற மக்களே ஒன்றுபடுங்கள்!
"நமது யுத்தம் செல்வம் சேர்ப்பதற்கானதோ, அதிகாரத்திற்கானதோ அல்ல, இது விடுதலைக்கான யுத்தம், நமது ஆளுமையை மீட்டெடுப்பதற்கான யுத்தமிது." -டாக்டர்.பாபாசாகேப். அம்பேத்கார்.