29 February 2008

தர்மம் செய்வது அக்கிரமம்

தர்மம் அதாவது ஏழைகளுக்குப் பிச்சை இடுதல் முதல் மற்றவர்களுக்குப் பலவித உதவிகள் செய்வது என்பதுவரை, அனேக விஷயங்கள் தர்மத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை பிச்சை கொடுத்தலை மிக நிர்பந்தமாகக் கட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.

எப்படியெனில், தர்மம் கொடுக்காதவன் பாவி என்றும் அவன் நரகத்துக்குப் போவான் என்றும், கடவுள் அவனை தண்டிப்பார் என்றும் இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாகக் கற்பித்து 32 தர்மங்களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால் அவனுக்கு இன்ன இன்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

அதுபோலவே, இஸ்லாம் மதம் என்பதிலும் அன்னியனுக்குப் பிச்சை கொடுத்தாக வேண்டும் என்றும், அது ஒருவனுடைய வருஷ வரும்படியில் அவனது செலவு போக மீதி உள்ளதில் 40இல் ஒரு பாகம் வருஷந்தோறும் பிச்சையாக பணம், சாப்பாடு, துணி முதலியவைகளாய் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படி செய்யாவிட்டால், மதத் துரோகம் என்றும் இந்தப்படி செய்யாதவன் இஸ்லாம் ஆகமாட்டான் என்றும்கூட கூறப்படுகிறது.

அதுபோலவே, கிறிஸ்தவ மதத்திலும் தர்மம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானதென்றும், தர்மம் செய்யாதவனுக்கு மோட்சமில்லை என்றும், உதாரணமாக ஒரு ஊசியின் காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே ஒழிய, பிச்சை கொடுக்காத பணக்காரன் ஒரு காலமும் மோட்சத்துக்குப் போக மாட்டான் என்றும் சொல்லப்படுகிறது.
செல்வம் என்பது உலகத்தின் பொதுச் சொத்து. அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்த ஜீவனுக்கும் அது பொதுச் சொத்தாகும். ஆனால், அந்தப் பொதுச் சொத்தானது பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப் போய்ச் சேரவும், மற்றொருவனுக்கு சிறிதுகூட இல்லாமல் தரித்திரம், பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப்படுகிறதே ஒழிய, மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.

இந்தப்படி செய்வது முடியாத காரியம் என்று யாராவது சொல்லுவார்களானால், ரஷ்யாவில் லெனின் என்ற ஒரு மனிதன் இந்தப்படி உத்திரவு போட்டு பணக்காரரும், பிச்சைக்காரரும் இல்லாமல் செய்துவிட்டாரே! இவர் கடவுளுக்கும் பெரியவரா என்று கேட்கிறேன். ஆதலால் தர்மம் பிறத்தியானுக்கு பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவுவது என்கின்ற முறைகள் எல்லாம் பணக்காரத் தன்மைக்கு அனுகூலமானதே தவிர பணக்காரத் தன்மையைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டதே தவிர, அவை ஒரு நாளும் ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் அனுகூலமானதல்ல.
ஏனெனில் பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்கின்ற காரியங்களால்தான், இல்லாத ஏழை மக்களை தரித்திரவாசிகளான மக்களைப் பிரித்தாள முடியும். ஏழை மக்கள் பிரிந்திருந்தால்தான் பணக்காரர்கள் வாழ முடியும். அன்றியும் பணக்கார மக்கள் மீது ஏழைமார்களுக்கு குரோதமும் வெறுப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்ற காரியத்திற்காகவே தர்மம் என்பதும், ஜக்காத் என்பதும், பிச்சை என்பதும் கற்பிக்கப்பட்டதே ஒழிய, பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதற்கோ அவர்களைக் காப்பாற்றுவதற்கோ ஏற்பட்டதல்ல.

எது எப்படி இருந்த போதிலும், உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழ வேண்டுமானால், பிச்சை கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான் மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியும். பிச்சை கொடுக்கும் வேலையை சர்க்காரே எற்றுக் கொண்டு அதற்குப் பணம் வேண்டுமானால், பணக்காரரிடம் இருந்து பிச்சை வரி என்று ஒரு வரியை கிறிஸ்து சொன்ன கணக்குப்படியோ, சர்க்கார் வசூலித்து, அதற்கு ஒரு இலாக்கா வைத்து விநியோகிக்க வேண்டும். அந்தப் பிச்சையை சர்க்கார் தொழிற்சாலைகள் வைத்து, அதன் மூலம் பிச்சைக்காரர்களிடம் வேலையை வாங்கிக்கொண்டு விநியோகிக்க வேண்டும். இந்தக் காரியத்துக்காக சர்க்கார் எந்தத் தொழிற்சாலை வைக்கிறார்களோ, அந்த மாதிரி தொழிற்சாலையை மற்றவர்கள் வைக்காமல் தடுத்துவிட வேண்டும்.

இப்படிச் செய்தால் பணக்காரர்கள் ஏற்பட்டு நாசமாய்ப் போனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லையாவது இல்லாமல் போய்விடும். பணக்காரத் தன்மை ஆட்சியில்லாத தேசம் எதிலும் இந்தக் காரியம் சுலபமாய் நடத்தலாம். ஆகவே, தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும், பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன்.

21.4.1945 அன்று ‘குடி அரசு' இதழில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் எழுதிய தலையங்கம்

22 February 2008

ஆண்களின் ஆணவமே விபச்சாரத்திற்குக் காரணம்-பெரியார்

‘விபச்சாரம்' என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக, இப்பொழுது "பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபச்சாரம்' என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின் செய்கையையும் "விபச்சாரம்' என்றே கூறலாம்.

ஜன சமூகத்தை அரித்துக் கொல்லும் புழுக்களில் ‘விபச்சார'த்தைப் போன்ற வேறொரு கொடிய புழு இல்லையென்றே சொல்லலாம். பண்டைக்காலந்தொட்டு வழங்கி வரும் அநேக தீய விஷயங்களில் ‘விபச்சார'மும் ஒன்றாகும். இந்த ‘விபச்சாரம்' என்னும் கொடிய வழக்கம், இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதையும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நமது நாட்டில் நிலைத்து வருகிறதென்பதையும் அறியலாம்.

சிற்றின்ப வேட்கை கொண்ட முரட்டு ஆண்கள் பலரால் பலவந்தப்படுத்தப்பட்டு விபச்சாரியானவர்கள் பெருகியே விபச்சாரிகள் அதிகமானார்கள் என்று கூறுவது, எவ்வகையிலும் பொருந்தாமற் போகாது. இரண்டாவது, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பல கொடுமையான சட்ட திட்டங்களும் விபச்சாரத்தை மிகுதிப்படுத்தின என்பதில் அய்யமில்லை.

காதல் மணமில்லாமை, விதவை மணம் இல்லாமை, விவாக விடுதலை உரிமை இல்லாமை, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமை முதலிய சமூகக் கட்டுப்பாடுகள், பெண்கள் விபச்சாரிகளாவதற்கு முக்கிய காரணமாயிருப்பனவாகும். ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளாத ஒரு தம்பதிகளின் வாழ்க்கை, தூய வாழ்க்கையாக இருப்பது கஷ்டம். அத்தம்பதிகள் இருவரும் தங்கள் மன இச்சையைத் தகாத வழியில்தான் பூர்த்தி செய்து கொள்ள நேரும்.

பருவ காலத்தில் விதவையான பெண்களைச் சாஸ்திரங்களின் மேலும், மதத்தின் மேலும் பழி சுமத்தி மணஞ்செய்து கொடாமல் வைத்திருப்பதனால் விளையும் விபச்சாரக் கொடுமையை அளவிட்டுக் கூற யாரால் முடியும்? இன்று குளங்களிலும், ஆறுகளிலும், கிணறுகளிலும், சாக்கடைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் எறிந்து கொல்லப்படும் குழந்தைகளெல்லாம் விபச்சாரிகளாலும் விதவைகளினாலும் பெற்ற குழந்தைகள் என்பதை யார் மறுக்க முடியும்? வீட்டுக்கு வீடு விதவைகள் குடி கொண்டிருக்கும் ஜாதியில்தான் விபச்சாரங்களும், சிசுக் கொலைகளும் அதிகம் என்று அறியாதார் எவர்?

ஆகவே, உண்மையில் விபச்சாரம் ஒழிய வேண்டுமானால், ஆண்களுடைய ஆணவத்தை அடக்குவதற்கும் பெண்கள் சுதந்திரமாகிய காதல் மண உரிமை, விவாக விடுதலை உரிமை, விதவை விவாக உரிமை, சொத்துரிமை முதலியவற்றிற்கும் சட்டங்களின் மூலம் பலவந்தமாக உதவி செய்ய வேண்டும். இப்பொழுது பல நாடுகளிலும் விபச்சாரத்தை ஒழிப்பதற்குச் சட்டங்கள் செய்யப்பட்டு அமுலிலும் இருந்து வருகின்றன. ஆனால், விபச்சாரத் தடைச் சட்டம் அமுலில் இருக்கும் எல்லா நாடுகளிலும் அது அடியோடு ஒழிந்து விட்டது என்று கூறத்தகாது. ஒருகால் இந்தியாவைத் தவிர, மற்ற தேசங்களில் விபசாரத்தடைச் சட்டத்தினால் அதை அடியோடு நிறுத்தி விடக்கூடும். ஏனெனில் இந்தியாவைத் தவிர, மற்ற இடங்களில் நடைபெறும் விபச்சாரம் வெளிப்படையானவை. வெளிப்படையாக வியாபாரம் போல் நடைபெறும் விபச்சாரத்தைத் தடுப்பது எளிது. ஆனால், நமது நாட்டில் நடைபெறுவது போன்ற மறைமுகமான விபச்சாரங்களைத் தடுப்பது முடியாது. விதவைகள் செய்யும் விபச்சாரத்தையும், விவாக விடுதலை செய்து கொள்ள முடியாமல் பேருக்குத் தம்பதிகளாக வாழும் குடும்பங்களில் நடைபெறும் விபச்சாரங்களையும் எப்படித் தடுக்க முடியும்?

மேல் நாடுகளில் ரஷிய தேசம் ஒன்றில்தான் அடியோடு விபச்சாரம் ஒழிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூக வாழ்க்கையில் எத்தகைய வேற்றுமையும் இருப்பதற்கு இடமில்லாமல், சட்ட மூலம் ஏற்பட்டிருக்கும் சவுகரியமேயாகும்.

ஆகையால் மற்ற நாடுகளைப் போல், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமூக விஷயங்களில் எத்தகைய வித்தியாசமும் இல்லாமல் சம சுதந்திரம் ஏற்படுத்தி, அதை அனு÷பாகத்தில் கொண்டு வருவதன் மூலம்தான் விபச்சாரத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

மதப்புரட்டுகளையும் சாஸ்திரப் புரட்டுகளையும் நம்பி பெண்களைக் கொடுமைப்படுத்தி விபச்சாரத்தனத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் இந்த மடையர்களான வைதீகர்களும், பகுத்தறிவற்றவர்களும், நமது நாட்டில் அரசியல் விஷயங்களிலும் செல்வாக்குப் பெற்றிருக்கும் வரையிலும், விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தகையச் சட்டங்கள் செய்யப்பட்டாலும் அவைகளுக்குத் தகுந்த முழுப்பலனும் கிடைக்க முடியாதென்றே கூறுவோம்.


‘குடி அரசு' இதழில் பெரியார்.ஈ.வெ.ரா அவர்கள் எழுதிய தலையங்கம் 29.5.1932

18 February 2008

கான்பூர் குடியரசுக் கட்சி ஊழியர்களிடையே பெரியார் உரையாடல்

சாதியை ஒழிக்க நீங்கள் வழி சொல்லுங்கள்?
பொதுவாக இரண்டு வழிகள் உண்டென்று சொல்லலாம். ஒன்று, சட்ட வரம்புக்குட்பட்ட முறையில் போராடுவது. மற்றொன்று, சட்டத்தைப் பற்றி லட்சியம் செய்யாது சட்டத்தை மீறிக் கிளர்ச்சி செய்வது. என்னுடைய இயக்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் சட்ட வரம்புக்கு மீறிய வகையில் பல கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். நம்முடைய கீழ் சாதித் தன்மை நீங்க வேண்டுமானால், நீங்கள் அவசியம் பின்வரும் முறைகளையாவது பின்பற்ற வேண்டும் :

1. எந்த இந்துக் கோயிலுக்கும் நீங்கள் பிற்படுத்தப்பட்ட, கீழ்சாதி மக்கள் யாரும் போகக்கூடாது
2. இந்து மதக் கடவுள்களைக் கும்பிடக்கூடாது
3. இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது
4. நெற்றியில் எந்தவிதமான குறிகளையும் சின்னங்களையும் அணியக்கூடாது 5. உச்சிக் குடுமியை ‘சோட்டி' யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது
6. வைதீகச் சடங்குகள் எதையும் செய்யக்கூடாது
7. எந்தவிதமான சடங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கும் பார்ப்பானை அழைக்கவே கூடாது
8. இந்துக் கடவுள்களின் படங்களை உங்கள் வீட்டில் எங்கும் மாட்டக் கூடாது
9. பார்ப்பனர்களால் நடத்தப்படும் உணவுச் சாலை, சிற்றுண்டிச் சாலைகளுக்குப் போகக் கூடாது.

‘குடியரசுக் கட்சி'யாகிய எங்கள் கட்சியோடு சேர்ந்து வேலை செய்வீர்களா?

எந்த வகையான உதவியை நீங்கள் சாதி ஒழிப்பிற்காக வேண்டுகிறீர்களோ, எங்களால் முடிந்த அளவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், உங்கள் கட்சித் தலைவர்கள் எனப்படுபவர்களுக்கு, சட்டசபையையும், ‘பார்லிமென்ட்'டையும் கைப்பற்றுவது எப்படி என்பதுதான் குறிக்கோள். ஆகவே, அதற்கெதிராக இருக்கின்ற எங்களை அவர்கள் விரும்புவதில்லை.

நாம் இப்படிப் பார்ப்பானையும், இந்து மதத்தையும் புறக்கணிக்கும்படி பிரச்சாரம் செய்தால், வெற்றிகாண முடியும் என்று நம்புகிறீர்களா?

ஆகா! தாராளமாக எனக்கு அதில் நம்பிக்கையுண்டு. 10 வருட காலத்திற்குள் கட்டுப்பாடான இடைவிடாதப் பிரச்சாரத்தின் மூலம் நாம் அந்த நிலையை அடைவோம் என்ற நம்பிக்கை உண்டு; அந்த உணர்ச்சியை மக்களிடையே அடைய வைக்க முடியும்.

சாதியை ஒழிக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே, அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

நல்ல கேள்வி. முதலாவது அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும், உடனே அவனது நாணயம், ஒழுக்கம் கெட்டுப்போய் விடுகின்றன. அவன் புரட்டு, பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபாசாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி, அப்படித்தான் ஆகிவிடுவோம்; அது அப்படி ஆக்கிவிடும்.

இரண்டாவது, இன்றைய அரசியல் சட்டப்படி நடைபெறும் ஒன்று. அரசியல் சட்டத்தில் மாற்ற முடியாத வகையில் சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. யார் போனாலும் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்படி நடக்க வேண்டியவர்களே தவிர, அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. சிலர் சொல்லுவார்கள், ‘ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் கூட அங்கு போனால் இதை எடுத்துச் சொல்லலாம்' என்று. அதற்கு அங்கு போக வேண்டும் என்பது அவசியமில்லையே! பொதுக்கூட்டம் போட்டு எடுத்துச் சொன்னாலே அது அரசாங்கத்திற்குச் செல்கிறது!

நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றலாமே! கைப்பற்ற முடியாதா?

அது முதுகில் மூன்றாவது கை முளைத்து அதனால் சொரிந்து கொள்ளலாம் என்பது.

எப்படியும் நாம் இந்த அரசாங்கத்தைக் கைப்பற்றித்தானே ஆக வேண்டும்?

அதற்காகத்தான் நாங்கள் சொல்லுகிறோம்: ‘சாதியை ஒழிக்க விரும்பாத சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் உனது அரசாங்கத்தோடு இருக்கவில்லை; தனியே பிரிந்து செல்கிறோம். எங்கள் நாட்டிற்குச் சுதந்திரம் வந்தால், நாங்கள் சாதியை உடனே ஒழித்துவிட முடியும். உனது ஆட்சி அதற்கு இடம் கொடுக்காததால் விலகிவிடுகிறோம்' என்று. அதற்காகத்தான், ‘சுதந்திரத் தமிழ் நாடு' கிளர்ச்சி இருக்கிறது. அது ஒரு நாட்டைக் கொளுத்தும் பிரச்சினையல்ல; நமக்கு வேண்டாத ஆட்சியை வெறுக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல நீங்களும், உங்களுடைய ஆட்சி வேண்டாம் என்று பிரிந்து சென்று விடலாமே! நீங்களும் இந்தக் கொடுமையான பார்ப்பன சாதி நாயகமான அரசாங்கத்தினின்றும் பிரிந்து விடலாம். அதற்குத்தான் பட எரிப்புப் போராட்டம் நடத்தப் போகிறோம்.

நீங்கள் ஏன் கறுப்பு உடை அணிகிறீர்கள்?

நாம் இப்போது இழிசாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகக் கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் ‘வட்டச் சிவப்பு' இருப்பது அந்த இழிவிலிருந்து நாம் நாளாவட்டத்தில் மீண்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது.

(கான்பூர் குடியரசுக் கட்சி ஊழியர்களிடையே பெரியார் 9.2.1959 அன்று நிகழ்த்திய உரையாடல். )

13 February 2008

ஜாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளுக்கு-பெரியார்

சாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளே! ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள், 4,000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறிமாறிக் கலந்ததால் ஏற்பட்டது என்று குறித்தும், அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது, தங்களை ‘வேளாளர்' என்று சொல்லுபவர்களில் ஒரு சிலர் மேற்படி சாதிக் கிரமத்தை அதாவது ‘ஆதிசாதி' என்பவைகளான பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் ‘சற்சூத்திரர்' என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொள்கின்றனர்.

அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு ஆகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்தனவென்றும், அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும், ஒரு கற்பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்டவர்களான தாங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாய் இருக்க வேறு பல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள்தான் "பள்ளு, பறை பதினெட்டுச் சாதிகள்' என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள்.

அந்தப்படிக் கூறப்படும் "பள்ளு, பறை பதினெண் குடிமக்கள்' என்பவர்களைக் குறிக்கும் முறையில் பணி செய்யும் பதினெண்வகைச் சாதியார் என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கல்தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன், தட்டõன், நாவிதன், பள்ளி, பறையன், பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்று அகராதியில் உள்ளது.

ஆனால், இதே பதினெண் மக்களை "அபிதானகாசம்' என்னும் ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறிக்கின்றது என்னவெனில் ஏவலாள்களாக சிவிகையர், குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணெய் வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் எனப் பதினெண் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

மற்றபடி, இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை மூடர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர, சாதிக்கும் சாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கும் ஆதாரமான வேதம், சாஸ்திரம், தர்மம் என்று சொல்லப்பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆட்சேபணையும் எவ்வித தத்துவார்த்தமும் சொல்ல முடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டியதாகும்.

இவை ஒருபுறமிருக்க, இந்தச் சாதிக் கிரமத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் யோக்கியதைகளையும் உரிமைகளையும் பார்ப்போமானால், கடுகளவு பகுத்தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர்கள் ஒரு காலமும் தங்கள் சாதிப்பேரைச் சொல்லிக் கொள்ள முடியாதபடியும், அதைக் கனவிலும் நினைக்கமுடியாத படியும் இருப்பதை நன்றாய் உணரலாம்.

எந்தக் காரணத்தாலோ இந்துமத தர்மத்தை கடைப்பிடித்துத் தீர வேண்டியதல்லாத ஓர் ஆட்சி, இந்த நாட்டுக்கு ஏற்பட்டதன் பலனால் நம்மில் சிலராவது இந்தத் தர்மங்கள் முழுவதும் வலியுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால், இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது சாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கு என்று மதத்தையும் சாதியையும் சொல்லி அவற்றை நிலைநிறுத்திக் கொண்டே போவோமானால், பின்னால் நமது நிலை என்னாகும் என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்துக்கள் என்பவர்களுக்குள் சாதிப் பிரிவு இருக்கும்வரை உயர்வு தாழ்வு போகாது என்பது கண்டிப்பாகும்.

இந்தியாவில் இந்துக்களில் 1000க்கு 999 பேருக்குக் குறையாமல் சாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு, ஒவ்வொருவரும் மேல்சாதி ஆகவேண்டுமென்று ஆசைப்படுபவராகவும் தனக்குக் கீழ் பல சாதிகள் இருக்க வேண்டுமென்ற உணர்ச்சி உள்ளவர்களாகவுமே இருக்கின்றார்கள். இன்றைய தினம் இந்த நிலையில் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு, வருணாசிரமக் கொள்கையும், சாதி ஆதிக்கமும் உடையவர்களான மக்களிடம் ஆட்சி வந்துவிட்டால், பிறகு எவ்விதத்திலும் சாதிக் கொடுமைகள் ஒழியாது.

(30.11.1930 அன்று பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் எழுதிய‘குடி அரசு' தலையங்கம்)

12 February 2008

இந்தியப் பொருளாதாரம் சீரடைய வர்ணாசிரம முறையை ஒழிக்க வேண்டும்-பெரியார்

‏இந்திய நாடு எவ்விதமான வளத்திலும் குறைந்தது அல்ல. இந்தியாவில் ராஜாக்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள், ஆச்சாரிய பீடங்கள், கோடீஸ்வரர்கள் மற்ற நாட்டிலுள்ளவர்களுக்குக் குறையாமல் உள்ளார்கள். விவசாயத் துறையிலும் ஏராளமான பூமிகள் இருப்பதும், அவற்றிற்கு அனுகூலமாக நீர் வசதிகள் இருப்பதும், ஒவ்வொரு மிராசுதார்கள் 1000 ஏக்கர், பதினாயிரம் ஏக்கர், சிலர் லட்சம் ஏக்கர் நிலங்களை உடையவர்களாக இருப்பதும், விவசாயம் செய்யப்பட வேண்டிய பூமிகள் இன்னும் எவ்வளவோ இருப்பதுமான நாடாக உள்ளது.

இப்படிப்பட்ட பல்வளமும் பொருந்திய இந்திய நாடு ஏன் தரித்திரமான நாடு என்றும், அடிமையான நாடு என்றும், ஏழைகள் பெருத்த நாடு என்றும் சொல்லப்பட்டு வருகின்றது? முதலாவது, மேற்கண்ட வளமுள்ள செல்வம் எல்லா மக்களும் அடையத்தக்க மாதிரியான சமூக அமைப்பு இல்லாமல் செல்வங்கள் சில வகுப்பு மக்களுக்கே உரியவையாகவும் அனுபவிக்கத் தக்கவையாகவுமான சமூக அமைப்பு முக்கிய காரணமாகும்.

அதாவது, வருணாசிரம தருமப்படி இன்ன இன்ன வகுப்புக்கு இன்ன இன்ன தொழில், இன்ன இன்ன உரிமை என்பதான திட்டமே, நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கில்லாமல் தடைபடுத்திக் கொண்டிருக்கிறது என்பது முதல் காரணம். வெள்ளைக்கார அரசாங்கத்தின் பயனாய் இந்த தர்மங்கள் சிறிது சிறிது மாற்றமடைந்து ஏதோ நூற்றில் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர் செல்வவான்கள் ஆகவும், வருணமுறை தவறிப் பணம் சம்பாதிக்க உரிமை உடையவர்களாகவும் ஆனாலும்கூட, அந்தப் பணமானது மநுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் அதாவது, ‘சூத்திரன் செல்வத்தைப் பிராமணன் எந்தவிதத்திலானாலும் கொள்ளை அடிக்கலாம்' என்கின்ற தர்மப்படி, சூத்திரன் செல்வத்தைக் கொள்ளை கொள்ளவே ஸ்தலம், கோவில், குளம், புண்ணியம், பாவம், சடங்கு முதலிய காரியங்களின் மூலம் கொள்ளை அடிக்கப்பட்டு விடுகின்றன.

இந்தக் காரணத்தாலேயே சூத்திரர்களில் 100க்கு 75 பேர்கள் கடன்காரர்களாகவே இருக்க நேரிட்டு இருக்கின்றது. மேலும், நமது மக்களின் மதத் தத்துவமே இவ்வுலக வாழ்க்கை "பொய்' என்பதும் "மாயை' என்பதும்; செல்வத்தை மோட்சத்தில் இடம்பிடித்து வைக்கவும், அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவியாய் பிறக்க ஏற்பாடு செய்துகொள்ளவும் செலவழிக்க வேண்டும் என்கின்றதுமான எண்ணங்கள், செல்வங்களைப் பாழாக்கி விடுகின்றன.

அன்றியும், பாடுபடுகின்ற மக்களுக்குத் தங்கள் மதக் கடமை, சாதிக் கடமை என்பது மாத்திரமல்லாமல் முன் ஜென்மக் கர்மத்தின் பயன் என்றும் எண்ணும் எண்ணங்களே புகுத்தப்பட்டு, தங்கள் கஷ்டங்களையும் தரித்திர நிலைமையையும் உணராமல் இருந்து வருகின்ற குணமும் தகுந்த பயனை அடைய முடியாமல் செய்து விடுகின்றன.

சாதாரணமாக, சென்னை மாகாணத்தின் சர்க்காரார் வரி எவ்வளவு இருக்குமோ, அதில் 4இல் 1 பங்குக்குக் குறையாமல் இம்மாகாணத்தில் வரும்படி வரத்தக்க சொத்துகள் கொண்ட தர்ம ஸ்தாபனங்கள் இருக்கின்றன. அவற்றின் மற்ற செலவுகளுக்கென்று நமது மக்களால் செய்யப்படும் செலவுகளின் மொத்தம், நாம் செலுத்தும் வரித் தொகைக்குக் குறையாதென்றே சொல்லலாம். இவை இந்த நாட்டு மக்களுக்குப் பயன்படாததோடு வீண் செலவினமாகவே ஏற்பட்டுவிடுகின்றன.

அன்றியும் தர்ம ஸ்தாபனங்களில் வரும்படி இல்லாமல் வெறும் முடக்கமாய் இருக்கும் சொத்துகள் தங்கம், வெள்ளி, கல் நகைகள், இடங்கள் முதலியன கோடிக்கணக்கான ரூபாய் வரும்படி வரக்கூடிய அளவு உள்ள சொத்துகள் யாதொரு பிரயோசனம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.

இவ்வளவும் தவிர, இந்திய மக்களின் வருமானம் என்பதே அவர்கள் தங்களது தொழில் முறைகளைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாததால் பிரயாசை அதிகமும், சாமான் யோக்கியதைக் குறைவும், உற்பத்திக் குறைவும் இதனால் வரும்படி குறைந்ததுமாக இருப்பதுடன், மனிதனுடைய தேவைக்கும், போக போக்கியங்களுக்கும் வேண்டியவைகளுக்கெல்லாம் ஏழை முதல் செல்வவான், மகாராஜாக்கள் வரை, வெளிநாட்டுப் பொருள்களையே உபயோகிக்க வேண்டியவர்களாகி, அதன் மூலம் செல்வம் ஏராளமாய் வெளியில் போய் விடுவதால், ஒருவித நஷ்டத்தையும் அடைய வேண்டியதாக ஏற்பட்டு விடுகின்றது.

இந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்படுத்துவதற்கு முதலாவது, வருணாசிரம முறை ஒழிய வேண்டும்; இரண்டாவது, மதசம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்பட வேண்டும்; இன்றாவது கோவில், குளம், சடங்கு, சாத்தான் ‘சனி விலக்கு' ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும். பிறகு அரசன், ஜமீன்தாரன் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாக வேண்டும்.

பொருளாதாரத் துறையில் இந்திய நாடு முற்போக்கடைய வேண்டுமானால், அதன் அஸ்திவாரமான காரணங்களையெல்லாம் கவனிக்காமல், மக்களுடைய மதியீனத்தையும் பகுத்தறிவற்றத் தன்மையையும் ஆதரவாய் உபயோகித்துக் கொண்டு, வெளிநாட்டுத் துணியை மறியல் செய்வதாலும், கதரை வாங்கிக் கட்டுவதாலும், கள்ளுக் கடைகளை மூடி விடுவதாலும், பொருளாதாரத் துறையை சரிப்படுத்திவிடலாம் என்று சொல்லுவது ஒரு நாளும் நாணயமானதும், அறிவுடைமையானதோ, காரியத்தில் பயன் கொடுக்கக் கூடியதோ என்பதாகச் சொல்லிவிட முடியாது.

(‘குடி அரசு' இதழில் 13.9.1931 அன்று பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் எழுதிய தலையங்கம்)

11 February 2008

சாதி அமைப்புமுறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது-பெரியார்

ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப் போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.

மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் முதலியவர்கள் இந்தப்படிதான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது, கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்டைய வாதம் என்னவென்றால், இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏங்கெல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் கீழ்ஜாதியாகவும் இருக்கிற சதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.

உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.

தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்கு சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றியமைத்தாக வேண்டும். ஆனால், சமூதாயப் புரட்சியை சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும். மக்கள் உள்ளத்திலே, இன்றைய சமூதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி, பிரத்தியட்ச (உண்மை) நிலையை மக்களுக்கு உணர்த்தினால் போதும். நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமூதாய அமைப்பை, இன்றைய சர்க்கார் அமைப்பு இருக்கும் போதே மாற்றிவிட முடியும் மக்கள் பகுத்தறிவு பெறும்படிச் செய்வதன் மூலமாக. 30 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம், திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவம் திமிரும்?

30 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள்? அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படும்படியாகச் செய்ததன் காரணமாக, நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

முதலில் இந்தக் காரியத்தைச் செய்வோம். பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட முடியும். பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவாரமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போமானால், தானாகவே பொருளாதார உரிமை வந்துவிடும். ஆகவே, இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.

இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே எடுத்துக் கொள்ளுங்களேன்: யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன் பார்ப்பான்; அதற்கடுத்தபடியாக பணக்காரன், நிலமுடையோன் சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். அதற்கடுத்தபடி, தூக்கியவன் தர்பார் என்பது போல இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால், சூத்திரனிலே தாழ்த்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே இல்லை. இப்போது சொல்லுங்கள்: பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடு, உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா, இல்லையா?

இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி, இந்த அமைப்பின் நிலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம். இன்னம் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில், இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்.

(27.4.1953 அன்று, மன்னார் குடி வல்லூரில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் ஆற்றிய உரை. "விடுதலை' 5.5.1953)

09 February 2008

கிராமச் சீர்திருத்தம்-பெரியார் உரை

"தலைவர் அவர்களே! தோழர்களே! இந்தக் கூட்டம் கிராமாதிகாரி ஆவதற்குப் பயிற்சி பெறும் மாணவர்கள் கூட்டமானாலும், இதற்குத் தலைமை வகிப்பவர் ஒரு கல்வி அதிகாரி ஆவார்; இங்கு அருகில் வீற்றிருப்பவர் கிராமாதி காரிகட்கு அதிகாரியாக இருக்கும் "டெப்டி கலெக்டர்" ஆவார்; இருவர்களும் தக்க அதிகாரமும், பொறுப்பும் பெற்ற அதிகாரிகள். அரசியல்வாதியும், பொதுமக்களின் வெறுப்பைப் பெற்ற சமுதாயப் "புரட்சிக்காரனும்" சகல துறையிலும் இந் நாட்டில் செல்வாக்குப் பெற்றிருக்கும் மேல் சாதிக்காரர்களால் தங்கள் சமுதாயத்திற்கே எதிரி என்று எண்ணும்படியான விரோதியுமாவேன் நான். இந்த லட்சணத்தில் நான் பழமை வழமை, பெரியோர் கருத்து, சாஸ்திரம், ஆதாரம் என்பவைகளைக் கண்மூடிப் பின்பற்றாத ஒரு பகுத்தறிவுவாதி என்று சொல்லப்படுபவன். நானும் என்னைப் பொதுவாக ஒரு சீர்த்திருத்த உணர்ச்சியுள்ளவன் என்று உரிமை பாராட்டிக் கொண்டாலும், என்னுடைய சீர்திருத்தம் என்பதானது பழைய அமைப்பு - மத - அடிப்படை என்பவைகளைக் கூட லட்சியம் செய்யாமல் அநேக காரியங்களை அடியோடு அழித்து நிர்மாணிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவன், இதனால் என்னை நாசவேலைக்காரன் என்று பலர் சொல்லும்படியானவனுமாவேன்.

இந்த நிலையில் இப்படிப்பட்டவர்கள் முன்னிலையில் "கிராமச் சீர்த்திருத்தம், கிராமத்தின் எதிர்காலத்திட்டம்" என்பதைப் பற்றிப் பேசுவதென்றால், அது இச்சபைக்கு அவ்வளவு திருப்தியாயும், பொருத்தமாகவும் இருக்குமா என்பது கவலைப்படத்தக்கதாக இருக்கிறது. இருந்தாலும் நாடகத்தில் நகைச்சுவை என்பதன் மூலம் எப்படித் தலை கீழான - வெறுப்பான - பல மாறான கருத்துகளைக் கண்டு உடல் துடிக்காமல் அவைகளைச் சகித்துக்கொண்டு அனுபவிக்க றோமோ அதுபோல், நான் சொல்வதைச் சற்று கவனமாய்க் கேட்டு நகைச்சுவையாய் அனுபவித்து வீட்டுக்குச் சென்று நடுநிலையில் இருந்து ஆலோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன். ஆத்திரப்படாமல் ஆலோசனையில் இறங்கினால்தான் நல்ல முடிவு கிடைக்கும். எதைச் சொல்கிறேனோ எதை எதிர்பார்க்கிறேனோ அதை தமிழ் நாடு பூராவும் பகுதி செய்கிறது. என்றால் தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும் திராவிடர் கழகம் ஆரம்பித்து 10,15 ஆண்டுகளில் ஆதரவளித்து பல கட்சிகள் நாட்டில் இருந்த போதிலும் திராவிடர் கழகத்தினர் தலைசிறந்த கட்டுப் பாடான நாணயமான எந்தவிதமான சுயநலமில்லாத வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் எந்தவித தியாகத்திற்கும் முன்வந்து பாடுபடுகிறவர்கள் என்று சொல்லும்படியான நல்ல பெயரை புகழை தஞ்சை வாங்கிக் கொடுத்துள்ளது.

இது தனிச் சிறப்புக் கொண்ட மாநாடு
உள்ளபடியே சொல்லுகிறேன் பகுதி மக்கள் வெளியில் இருக்கிறார்கள் உள்ளே இடமில்லாததால் டிக்கெட் கொடுப்பதை நிறுத்தியிருப்பார்கள் நானும் அப்படித் தான் சொல்லிவிட்டு வந்தேன்.

எனது 40 ஆண்டு பொதுவாழ்க்கையில் எந்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. தலைமை வகித்திருக்கிறேன் சுயமரியாதை இயக்க காலமுதல் சிறப்பாக முதல் மாநாடு செங்கற்பட்டில் நடந்தது. அதுதான் ரிக்கார்டு மாநாடு ஜமீன்தார்கள் 60-65 பேர் வந்திருந்தார்கள் எல்லா சட்டசபை மெம்பர்களும் எல்லா மந்திரிகளும் வந்திருந்தார்கள் நல்ல கூட்டம் இருந்தாலும் இதில் 1/2 பங்குக்குக் குறைவான அளவுதான் இருக்கும் அதற்குப் பிறகு பல மாநாடுகள் நடந்திருந்தாலும் இந்த மாநாட்டைத் தொடும்படியான அளவுக்குக்கூட நடந்ததில்லை இன்று திராவிடர் கழக தனிமாநாடு என்பதாக கூட்டியுள்ளோம் என் கணக்குத் தவறாக இருந்தாலும் இருக்கலாம். இது சிறப்பான மாநாடு ஆதரவான மாநாடு எல்லாவற்றையும்விட சிறப்பு! கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து அந்தந்த நகரங்கள் கிராமங்களிலிருந்தெல்லாம் என்னை தங்கள் குடும்பத்தில் சேர்ந்த ஒருவனாகவே கருதி உணர்ச்சியுள்ள மக்கள் கூடியுள்ள மாநாடு தனிமாநாடு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு எடைக்கு எடை வெள்ளி அளிக்கும் விழா பகுதிக்குமேல் காரணம், மதிப்புள்ள தங்கள் தலைவனுக்கு வழிகாட்டிக்கு இதுவரை நடந்திராத மரியாதை நடக்கிற போது அதை நாம் காண வேண்டாமா? நம் பங்கும் இருக்கவேண்டாமா என்று இவ்வளவு அதிகமான மக்கள் கூடியிருக்கிறார்கள். நான் பெருமைக்காகச் சொல்ல வில்லை எங்கும் கூட்டம் குறைவாக இருந்தால் "கூட்டம் இல்லை" என்று சொல்லுவதுதான் எனது வழக்கம் நானும் நண்பர்களும் தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தோம். கொள்ளலாம்; முதல் வருணத்தார்தான் படிக்கலாம், 4,5ஆவது வருணத்தார் படிக்கக்கூடாது; படித்தால் உலகம் நடைபெறாது" என்பது போன்ற மனுதர்ம முறைப்படிதானே அனுபவத்தில் கிராமத்திற்கும், நகரத்திற்கும், வருணமுறை ஊர்த் தர்மம் இருந்து வருகிறது. இது உண்மையா இல்லையா? என்று யோசித்துப்பாருங்கள்.

கிராமம் என்றால் என்ன?
கிராமம் என்றால் என்ன? அதில் பள்ளிக்கூடமில்லை, ஆஸ்பத்திரி இல்லை, டிராமா இல்லை, பார்க் இல்லை, நீதி ஸ்தல மில்லை, போலீஸ் காவல் இல்லை, நல்ல ரோட்டு வசதியில்லை, விளக்கு இல்லை, நல்ல தண்ணீர் இல்லை, உயர்ந்த நாகரிகம் என்பது இல்லை, பெரும்பாலும் வயிற்றுக்கு ஆகாரம் சம்பாதிப்பதைவிட, வாழ்வு ஆசைக்குப் பணம் சம்பாதிக்கும் வசதி இல்லை, புத்தியைச் செலவழித்து முற்போக்கடைய வழியில்லை - இப்படி இன்னும் பல வசதிகள் (நகரத்தானுக்கு இருப்பவைகள்) கிராமத்தானுக்கு இல்லையென்பதல்லாமல் கிராமம் என்றால் வேறு என்ன?

ஆனால், "நகரங்களுக்கு ஆதாரம் கிராமங்கள் தான்" என்று சொல்லப்படுகிறது. சொல்லுவது மாத்திரமல்லாமல் கிராமத்தாரின் உழைப்பில் ஏற்பட்ட விளைபொருள்களும், உற்பத்திப் பொருள்களுமே நகரத்தார் அனுபவிக்கவும், நகரத்தார் செல்வவான்களாக ஆகவும், அரசாங்கம் நடக்க வரி கொடுக்கவும், அரசாங்கம் - நகர மக்கள் ஆகியவர்கள் மாத்திரமல்லாமல் கடவுள்கள், கோவில்கள்கூட அங்கிருப்பவர்களும் சேர்ந்து தேவஸ்தான சட்டபடி ஒழுங்காக சகல இன்பங்களும் அனுபவிக்கவும் வசதிகள் இருந்துவருகிறது.

உதாரணமாக
லேவாதேவிக்கு வட்டி கொடுத்துவந்த கிராமங்களான நஞ்சை புஞ்சை நில வசதிகளுள்ள நீர்ப்பாசனமும், பருவம் தவறாமல் மழை பெய்யும் கொழுத்த நீர் வசதியும் உள்ள நிலப்பரப்புக்கு மத்தியில் உள்ள கிராமங்களின் நிலைகள் எப்படி இருக்கிறது? அவர்களின் வீடு வாசல் மக்கள் நிலை எப்படியிருக்கிறது? அவர்களின் வீடு வாசல்- மக்கள் நிலை எப்படியிருக்கிறது? என்பதையும், பொட்டல் காடு, கானல் காடு, பாலைவனங்கள் ஆகியவைகளில் குடியிருக்கும் லேவாதேவித் தொழில்காரர்களான நாட்டுக் கோட்டையார், மார்வாடிகள் ஆகியவர்கள் வீடுகள் எப்படி இருக்கிறது? அவர்கள் வாழ்க்கை நிலைகள் எப்படி இருக்கிறது? என்பதையும் பாருங்கள். இதற்குக் காரணம் என்ன? இது வருணாசிரம முறையா அல்லவா? யோசித்துப் பாருங்கள், மற்றும் பாடுபட்டும் மிராசுதாரர், குடியானவன் ஆகியவர்கள் வீடு எப்படி இருக்கிறது? அவர்களிடம் சரக்கு வாங்கி விற்ற நகர வியாபாரிகள் வீடு, அவர்களது வாழ்வு எப்படியிருக்கிறது பாருங்கள்.

கிராமத்தானுக்குக் கல்வி இல்லாமல் இருந்தால்தானே பயிரிட்டு உழைத்து உழைத்து, அறுத்துமூட்டையாக்கித் தைத்து வண்டியில் போட்டு நகரத்துக்கு அனுப்பிவிட்டு சாவியாய்ப்போன தானியத்தை வீட்டுக்கு எடுத்துக் கொண்டுப் போய் கஞ்சியாகக் காய்ச்சிக் கலயத்தில் ஊற்றி, பிள்ளை குட்டிகளைச் சுற்றி வைத்துக்கொண்டு "இன்று கடவுள் நமக்கு இவ்வளவு கொடுத்தார்" என்று வாழ்த்துப்பாடி, எருமைமாடு தவிட்டுத் தண்ணீர் குடிப்பதுப் போல் வயிறு முட்டக் குடிக்கமுடியும்; அதோடு அவன் திருப்தி அடையவும் முடியும்.

அப்படி இல்லாமல் கிராமத்தானுக்கு கல்வி கொடுத்துவிட்டால் "நாம் உழைக்கிறோம்; நாம் விளைவித்தோம்; நாம் உருப்படி பண்ணினோம். அப்படி இருக்க நாம் கஞ்சி குடிப்பதும், உழைக்காதவன் தரித்துப் புடைத்து ஆக்கிப் படைத்துக் கொண்டு இப்படி தொப்பை வெடிக்க அமுக்குவதா?" என்கின்ற எண்ணம் ஏற்பட்டுவிடாதா? அதனால் தான் கிராமம் ஒரு பஞ்சமனுடைய நிலையில் வைக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையை நிலைக்க வைக்க "கிராமச் சீர்திருத்தம்" என்கின்ற பித்தலாட்டப் பெயரை வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் அதுவும் வருணாசிரம தர்மத்தின் மேல்படியில் இருப்பவர்கள் சீர்திருத்தக்காரர்களைப் பார்த்து பிகிராமத்துக்குச் செல்லுங்கள் பீ (கீச் ஞ்ச் ஞ்குக் ஞீகூஙீஙீஹகீக்சூ) என்று வாயில் கத்திக் கொண்டு ஞாயிற்றுக் கிழமை அன்றைக்கு வியாபாரத்துக்கும்,வக்கீல் வேலைக்கும் (கட்சிக்காரர்களைச் சேர்க்கும் நோக்கத்தோடு) கிராமங்களுக்குச் சென்று விளக்குமாற்றால் (துடைப்பத்தால்) ஒரு வீதியைக் கூட்டிவிட்டு அதற்கொரு பஜனைப் பாட்டைப்பாடி ஒரு கூடையில் அக்குப்பையை வாரித் தூக்கிக் கொண்டு போய் பக்கத்தில் ஒரு சிறு பிரசங்கம்-இராமாயணத்தில் இராவணக் கொடுமையும், அனுமான் பெருமையும், பற்றிப் பேசிவிட்டு வந்துவிட்டால் கிராமம் சீர்ப்பட்டு விடுமா என்று யோசித்துப் பாருங்கள்

கிராமம் எதற்கு ?
கிராமம் என்று ஒரு குப்பைக்காடு எதற்காக இருக்க வேண்டும்? ஆடு, மாடு, எருமை மேய்ப்பதும், அவைகளைக் காப்பாற்றிப் பால், தயிர், நெய், மோர் உற்பத்தி செய்வதும் கிராமத்தான்; அவ்வளவையும் அனுபவித்து வருவது நகரத்தான். இதற்கு என்ன ஆதாரம்? கிராமவாசி கிராமத்தில் இரவு 3மணிக்கு எழுந்து மாட்டுக்குத் தண்ணீர் வைத்து, கொட்டத்தைக் கூட்டி சுத்தம் செய்துவிட்டு 4 மணிக்குப் பால் கறந்துவிட்டு கஞ்சிகாய்ச்சிக் குடித்துவிட்டு 5 மணிக்குப் புறப்பட்டு 3,4,5, மைல் நடந்து 6 மணிக்கு நகரத்துக்கு வந்து நகரத்து மக்களை பிஅய்யா பாலுபீ, பிஅம்மா பாலுக்காரி நான்பீ என்று சொல்லிக் கதவைத் தட்டி எழுப்பி பால் ஊற்றிவிட்டுப் போகிறார்கள். தங்கள் பிள்ளை குட்டிகளுக்குப் பால், நெய் ருசியே தெரியாமல் செய்துவிடுகிறார்கள். இதற்கு பிநகரத்தார் பணம் கொடுக்கிறார்கள் என்பது உண்மைதான்பீ. கிராமத்தான் கையில் கிடைத்த இந்தப் பணம்தான் என்ன ஆகிறது. போலீசுக்கு ஒரு பங்கு, முனிசிபல் சிப்பந்திகளுக்கு ஒரு பங்கு போனது போக கனமாக ஏதாவது மீதியிருந்தால் அது வக்கீலுக்கும் அதிகாரிகளுக்கும் போகிறது.

தானியம் விற்பது
நல்ல பெரிய விவசாயி என்பவனும் கிராமத்தில் இருந்தால் இதுபோல் தான். கிராமத்தான் பாடுபட்டுப் பயிராக்கித் தானியமாக்கி நகரத்துக்குக் கொண்டுவந்தால் நகர வியாபாரி கிராமத்தானின் பயிர்ச்செலவு - முட்டுவளிக்குக்கூட பத்தும் பத்தாமல் கணக்குப் போட்டு விலைபேசி ஒன்றுக்கு ஒன்றேகாலாக ஏமாற்றி அளந்து வாங்கிக் கொண்டு மொத்தக் கிரையத்தைத் பிதரகு, மகிமை, சாமிக்காசு, நோட்டு வட்டம், வாசக்காரிக்கு, கலாஸ்காரனுக்கு, வெத்திலை பாக்குச் செலவுபீ என்றெல்லாம் பல செலவுக்கணக்குப் போட்டுப் பிடித்துக்கொண்டு மீதி ஏதோ கொஞ்சம் கொடுக்கிறான். பணத்தை மொத்தமாகக் கண்டறியாத கிராம விவசாயி தன் மீது கருணைவைத்து, கடவுள் இவ்வளவு ரூபாயை கைநிறையக் கொடுத்தார் என்று கருதிக்கொண்டு காப்பி சாப்பிட்டு சினிமாப் பார்த்து விட்டு ஊருக்குப் போகிறான். வியாபாரியோ இந்தச் சரக்கை வாங்கி, இருப்பு வைத்து அதிக விலை வரும்போது விற்று லாபமடைந்த லட்சாதிபதியாகி மாடமாளிகை கட்டிக்கொண்டு கிராமவாசியை வண்டி ஓட்டவும், மாடு மேய்க்கவும், வீட்டு வேலை செய்யவும், உடம்பு பிடிக்கவும் வேலைக்கமர்த்திக் கொள்ளுகிறான்.

சர்க்காருக்கும் கிராமவாசி என்றால், கசாப்புக் கடைக்குப் போகும் ஆடுகள் போலக் காணப்படுகிறார்கள்.

ஆகவே, கிராமம் என்பது தீண்டப்படாத மக்கள் நிலையில்தான் இருந்துவருகிறது. கிராமத்தார் அல்லாத மற்றவர்களுக்கு உழைப்பதற்கு ஆகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த அடிப்படையை அப்படியே வைத்துக் கொண்டு கிராமத்தை எவ்வளவு சீர்திருத்தினாலும் கிராமம் பிசூத்திரன் - தீண்டாத ஜாதியானபீ நிலையில்தான் இருக்கும்.

எனவே சமுதாயத்தில் மக்கள் மனிதத்தன்மை பெற வேண்டுமானால் பிராமணன் என்ற ஒரு ஜாதியும் பறையன் என்கின்ற ஜாதிதான் இருக்கவேண்டும் என்று எப்படிக் கருதுகிறோமோ அதுபோல் ஊர்களிலும், பட்டணம், நகரம் என்று சில ஊர்களும், கிராமம், குப்பைக்காடு என்றும் இல்லாமல் பொதுவாக ஊர்கள் தான் இருக்கவேண்டும் என்று ஆக்கப்பட வேண்டும்.

வருணவிகிதமே
வருணாச்சிரம தர்மத்தைப்போல் தான் கிராமங்களும் என்பதற்கு மற்றொரு உதாரணம் பாருங்கள்; ஜனத்தொகைப்படி 100க்கு 90பேர்கள் 4ஆவது, 5ஆவது வருணத்தார்கள்; 10 பேர்கள்தான் மேல் வருணத்தார்களாக (முதல் மூன்று வருணத்தார்களாக) இருப்பார்கள். அதுபோலத்தான் மொத்த ஊர்களில் 100க்கு 90க்கு மேற்பட்ட ஊர்கள் கிராமங்களாக இருக்கின்றன. அதாவது இந்தியா பூராவும் 7லட்சம் கிராமங்கள் என்று தலைவர் சொன்னார். ஆனால் பட்டணங்கள் நகரங்கள் 7500கூட (100க்கு 10 கூட)இருக்காது.

படிப்பு
மற்றும் பார்க்கப்போனால் பட்டணத்தில் உள்ள ஒரு கைவண்டி இழுப்பவன், ஒரு கோர்ட்டுப் பிžன், ஒரு பிச்சையெடுக்கும் புரோகிதன், மணியாட்டும் அர்ச்சகன் ஆகிய இவர்கள் பிள்ளைகள் ந.ந.க.இ. ஆ.அ இஞ்சினீயர், டாக்டர் ஐ.இ.ந.கூடப் படிக்க முடிகின்றது. ஆனால், கிராமத்தில் 100ஏக்ரா, 200ஏக்ரா உள்ள குடியானவன் மகன்கூட எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமானால் வரும்படியில் பகுதி செலவாகிறது. ஏழைக் குடியானவன் மகனுக்கு நடக்கத் தெரிந்ததும் மாடுமேய்க்க வேண்டியதாகத்தான் முடிகிறது. பட்டணங்களில் இருப்பதில் ஒரு கக்கூசு எடுப்பவர், வீதி கூட்டுபவர் குழந்தையும் கட்டாயமாகப் படித்து ஆகவேண்டும் என்று சர்க்கார் உத்திரவுபோடும். இலவசப் பள்ளியும் வைக்கும். ஆனால்; கிராமத்தான் தன் மகனைப் படிப்பிக்க நகரத்துக்கு அனுப்பவேண்டும்; அங்கு மேல்பார்வை இல்லாமல் சிகரெட்டு, பீடி, காடி(கள்) பிராந்தி குடித்து நாசமாக வேண்டும். இதற்கு அருத்தம் என்ன?

ரேஷன்
இவ்வளவு சங்கதி ஏன்? ரேஷனை எடுத்துக் கொள்ளுங்கள். பட்டணத்திலே இருப்பவர்கள் கடவுள்களுக்கு நாட்டுக்கோட்டையார் படி அளப்பதுபோல், ஆளுக்கு இவ்வளவு என்று சர்க்காரால் அளவு அளிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்தான்களுக்கு அதுவும் தானியங்களை உற்பத்தி செய்யும் கிராமத்தான்களுக்கு ரேஷன் கடவுளிடம் தான் ஒப்படைக்கப்பட்டது. பிகடவுள் தான்பீ அவர்களுக்குப் படி அளக்க வேண்டும். அதாவது ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி நகரத்தானிடம் திருட்டுத் தனமாய் வாங்கிக்கொண்டு போகிறார்கள். பாடுபட்டு விளைவித்ததைக் கொண்டு வந்து வியாபாரியிடம் கொடுத்துவிட்டு அதுவும் திருட்டுத்தனமாக வாங்கிக்கொண்டு போக வேண்டியிருக்கிறது.

உழைப்பு
மேலும் நகர வாழ்க்கை, நகரத்தில் இருந்தால் 100க்கு 90க்கு மேற்பட்ட மக்களுக்கு உடலுழைப்பு இல்லாத சுகவாழ்வு வாழ முடிகிறது. கிராம வாழ்வு, கிராமத்தில் இருந்தால் 100க்கு 90பேர் உடலுழைப்பு வேலையேசெய்தாக வேண்டும். அவர்களுக்குள் ஒரு சிறு தகராறு, சண்டை, விவகாரம் ஏற்பட்டாலும் விவகாரப் பெறுமானத்தைவிட அதிகமான செலவு செய்து நகரத்துக்குப் பல தடவை நடந்து நீதி பெற வேண்டும். இதன் பயனாய் போக்கிரிகளுக்கும், செல்வவான்களுக்கும் அடங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது.

கிராமாதிகாரி (கிராம அதிகாரி)
இந்த லட்சணத்தில் கிராமாதிகாரிக்குச் சம்பளம் மாதம் 15 ரூபாய். அவர்களுக்கு சப்ளை, தங்கள் நிலைமையை அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ள செலவு, குடும்பச் செலவு, நகர அதிகாரிகளுக்குக் கப்பம் ஆகியவைகளுக்கு மாதம் குறைந்தது 100 ரூபாயாவது வேண்டியதாகிவிடுகிறது. இப்படி தேவையாயிருக்கிற அதிகாரிகளிடமிருந்து எப்படி நீதி எதிர்பார்க்க முடியும்? அந்தக் கிராம அதிகாரியும், கிராமத்தானுக்கு அதிகாரி; ஆனால் நகரத்தானுக்குச் சிப்பந்தி.. ஒரு தாலுக்கா சேவகன் கிராமாதிகாரியை பிஏ சேடூர்பீ பிஏ அணை நாவிதன் பாளையம்பீ என்று கூப்பிடுவான்! கிராமத்தானுக்கு தொழிலோ நம் விவசாயமும் கால்நடை மேய்ப்புமாகும்.

விவசாயத்தின் தன்மை
விவசாயம் 200 வருடத்திற்கு முன் இருந்த மாதிரி தான் இன்றும் இருக்கிறது. அதில் நீர்ப்பாய்ச்சல் வசதி, நீர் நிலை தேக்கம், ஆகியவை ஏற்பட்டு சில நிலங்களுக்குப் புதியதாய் நீர்பாசன வசதி ஏற்பட்டது. என்பதல்லாமல் விவசாயத்தில் குறிப்பிடத்தக்க மாறுதல் ஒன்றும் ஏற்படவில்லை. சர்க்காரின் விவசாய இலாகாவானது சிலபேருக்கு உத்தியோகத்தைத்தான் கொடுத்தது. அதுவும் விவசாயத்தைத் தொழிலாகக் கொள்ளாத பரம்பரைக்கே பெரிதும் உத்தியோகமாய் முடிந்தது என்பதல்லாமல் மற்றபடி விளைபொருளில் மாறுதல் இல்லை; விளைவு அளவில் கூடுதல் இல்லை; விவசாய முறையில் மாற்றம் இல்லை. விவசாயிகள் விளைபொருளின் சரியான விலையை அனுபவிக்க வழியில்லை. விவசாயி விவசாய ஞானம்பெற வழியில்லை. விவசாயிகள் விஷயத்தில் சர்க்கார் எடுத்துக் கொண்ட மற்ற முயற்சி என்ன என்று பார்ப்போமானால் மேல்நாட்டாரைப்போல் இந் நாட்டு விவசாயிகள் எல்லோரும் படித்த மக்கள் என்று கருதிக்கொண்டு அவர்களுக்கு அறிவுறுத்தத் துண்டுப்பிரசுரம் மூலம் சில முறையைக் கையாண்டார்கள் என்பதைத் தவிர அவர்கள் பெரும்பாலோர் படிப்பும் நாகரிகமும் இல்லாதவர்களாக பட்டணங்களுக்கு வெகு தூரத்தில் இருக்கிறார்கள்; நாகரிகமும் பகுத்தறிவும் அற்ற மக்கள் என்கிற எண்ணமே இல்லாமல் அவர்களுக்கு நலஞ் செய்யும் வழிகளைக் கையாண்டிருக்கிறார்கள்.

திட்டம்
உண்மையில் கிராமங்களை சீர்த்திருத்தவேண்டுமானால் நான் சொல்லப்போகும் முக்கியமான காரியங்களைச் செய்ய வேண்டும். விவசாயம் உடலுழைப்பில் நடைபெறுவதை மாற்றி அதை ஒரு தொழில்முறையாக, அதுவும் இயந்திரத் தொழில் முறையாக (இன்டஸ்ட்ரியல் ஆக) ஆக்கப்பட வேண்டும்.

உழுவதும், விதைப்பதும், அறுப்பதும் இயந்திரத்தால் செய்யப்பட வேண்டும். கிணறு வெட்டுவதும், தண்ணீர் இறைப்பதும்-பாய்ச்சுவதும் இயந்திரத்தால் செய்யப்பட வேண்டும்.

அந்த அளவுக்குப் பூமிகளைத் திருத்தி இணைக்க வேண்டும். அதற்குப் பயன்படாத பூமிகளைத் தனிப்படுத்தி அடிக்கடி பாடுபட வேண்டிய அவசியம் இல்லாத பயிர் செய்ய வேண்டும்.

விளைபொருளால் ஆக்கப்படும் பண்டங்கள் ஆங்காங்கே விவசாயிகள் கூட்டுறவு முறையில் ஆக்கப்பட்டு அந்தப் பயன் விவசாயி களுக்கே கிடைக்க வேண்டும். பல கிராமங்களை ஒன்றாக இணைத்து ஒரு சிறு நகரமாக ஆக்கி அதில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, பார்க்கு, சினிமா, டிராமா, தமாஷ் அறை, வாசகசாலை, புத்தகசாலை, ரேடியோ நிலையம், நல்லரோடு, கால அளவுப்படி போக்குவரத்துள்ள ஒரு பஸ் ஸ்டாண்டு, போலீஸ் ஸ்டேஷன், நன்றாய் படித்த ஒரு நீதிபதி, சகலசாமான்களும் கிடைக்கத்தக்க கடைகள் ஏற்படுத்த வேண்டும்.

இயங்கும் படியான சுற்றுப்பயணக் கண்காட்சி சாலைகள் அடிக்கடி பற்பல விதத்தில் அமைத்து ஊர்கள் தோறும் சுற்றிச்சுற்றி வரும்படியாகவும் ஆன காரியங்கள் செய்ய வேண்டும்.

ஆங்காங்கு அப்பீல் கோர்ட்டுகள், குறைதெரியும் அதிகாரிகள் சுற்றுப்பிராயாணம் செய்து ஆங்காங்கு வாரா வாரம் காம்ப் போடவும் ஆன ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சென்னை 10 லட்சம் ஜனத்தொகை கொண்ட நகரம். கோவை ஒரு லட்சம் ஜனத்தொகை கொண்ட நகரம். இதுபோலவே இப்போது கிராமமாகப் பாவிக்கப்படும் ஈரோட்டிற்குப் பக்கத்தில் உள்ளது கொல்லம்பாளையம், மூலப்பாளையம், சூரம்பட்டி மேட்டுவலசு என்கின்றவை போன்ற பக்கப் பக்க கிராமங்கள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு ஏதோ ஒரு பெயர் கொண்ட பிசர்க்கிள்பீ ஆக்கி 2500 அல்லது 5000 ஜனத்தொகை கொண்ட நகரமாக ஆக்கிவிட்டு அதை நகரத்தார்கள்; தரகர்கள் சுரண்ட முடியாமல் செய்யவேண்டும்.

"நகரத்தார்களுக்குக்காகத்தான் அவர்கள் வாழ்கிறார்கள் வாழவேண்டும்" என்று சொல்லப்படுவதை அடியோடு மாற்ற வேண்டும்.

அதோடு கூடவே, அந்த இடங்களில் அவற்றிற்குத் தக்கப்படி இயந்திரத்தால் செய்யப்படும் சிறுசிறு தொழிற் சாலைகளை நிறுவி அவர்கள் வேறு ஊருக்குப் பிழைப்புக்கு போகாதபடி பிழைப்பு ஏற்படுத்த வேண்டும். கிராமத்தான், பட்டிக்காட்டான், குப்பைக்காட்டான் என்கின்ற பெயர்கள் ஒரு மனிதனுக்கு ஏன் இருக்க வேண்டும்? அதுவும் பாடுபட்டு உழைக்கும் மனிதனுக்கு ஏன் இருக்க வேண்டும்?

ஆதலால் அப்பெயர்கள் இல்லாமல் செய்யப்பட்டு விடவேண்டும்.

மேல் நாடுகளில்
மேல்நாடுகளில் பெரும்பான்மையான கிராமங்கள் நான் விரும்புகிறபடி தான் இருக்கின்றன.

அதாவது, தார்ரோடு, குழாய், தண்ணீர், எலக்டிரிக்பவர், பஸ் சர்வீஸ், பள்ளிக்கூடம், விளையாட்டு மண்டபம், சமநீதி, தொழிற்சாலை ஆகியவை இல்லாத இடங்கள் (கிராமங்கள்) மேல்நாடுகளில் காண்பது மிகமிக அதிசயமாகும; ரஷ்யாவில் மாத்திரம் சில இடங்கள் கிராமங்கள் போல் காணப்படுகின்றன அதுவும் இதற்குள் நகரமாகி இருக்கும். மற்றபடி அய்ரோப்பாவில் கிராமங்கள் என்ற நிலை இல்லவே இல்லை. இருந்தபோதிலும், அது அந்த இடத்திற்கு ஏற்ற வாழ்வாய் இருக்கலாமே தவிர "பிராமணனுக்குத் தொண்டு செய்வதற்கே கடவுள் சூத்திரர்களை - பஞ்சமர்களை படைத்தார்" என்பது போல் "நகரத்தார் நல்வாழ்வு வாழ்வதற்கே கிராமங்கள் ஏற்பட்டன" என்கின்ற முறையில் கிராமங்கள் அங்கு இல்லை. அங்கு ஏதாவது ஒன்றிரண்டு இருந்தபோதிலும் இங்கு இருக்கக் கூடாது என்று சொல்லுவேன்.

அப்படியானால், விவசாயம் யார் செய்வது? யார் பூமியை பயிர் செய்வது என்று கேட்கப்படலாம். இது, கக்கூசு எடுக்கும் சக்கிலி, பறையர், ஒட்டர் என்பவர்களுக்கு படிப்புக் கொடுத்து மேன்மக்களாக ஆக்கிவிட்டால் கக்கூசு எடுப்பவர்கள் யார் என்று கேட்பது போல் கேட்கப்படுவதாகும். அதற்கு என் பதில் "அந்தத் தொழில்களை நாம் எல்லோரும் (எல்லா இடத்தில் உள்ளவர்களும்) விகிதாச்சாரம் பங்குப்போட்டுக் கொள்ள வேண்டும்" என்பது தான்.

கீழான தொழில்
கீழான தொழில், ஈனமான தொழில், கஷ்டமான தொழில், சரீர உழைப்பு அதிகமாகவும், பயன்மிக்க அற்பமாகவும்-குறையாகவும்- வாழ்வில் இழிவாகவும் இருக்கும் படியான தொழில் முறைகளை நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும். அதுதான் நாட்டு முன்னேற்றமாகும்.

கப்பல் கட்டி எவனோ ஒருவன் கோட்டிஸ்வரனாவது முன்னேற்றமாகாது. எங்கேயோ ஒரு இரும்புத் தொழிற் சாலை வைத்து யாரோ கோட்டீஸ்வரன் ஆனால் நாட்டுக்கு முன்னேற்றமாகிவிடாது.

நான் கூறுகிற முன்னேற்றம் செய்யமுடியவில்லையானால், அதற்கு அதாவது அப்படிப்பட்ட இழிவான கீழான, பிரயாசையான வேலை செய்பவர்களுக்கு அதிக லாபமும், சலுகையும் மேன்மையும் இருக்கும்படியான பிரதிபலன் அடையச் செய்யவேண்டும். இரசாயன முறை, விஞ்ஞான முறை, யந்திர முறை, முதலியவைகளைக் கையாண்டு அவைகளை கிராமங்கள் என்பவைகளில் இருந்து தொடங்குவோமானால் இந்தப் பிரச்சினைகள் சுலபத்தில் தீர்ந்துவிடும். கிராமம் என்கின்ற பெயரும் இழிநிலையும் தானாக மாறிவிடும்.

இதைப் பொதுவுடமை என்றோ சமதர்மம் என்றோ முட்டாள்தனமாய் கருதாமல் முற்போக்கு என்ற முறையில் சிந்தித்தால்தான் இதில் உள்ள நியாயமும் உண்மையும் விளங்கும்.

தொழிலாளிகளும், கிராமவாசிகளும் முன்னைவிட இப்போது சிறிது பணம் அதிகம் சம்பாதிப்பதைக் கொண்டு திருப்தி அடையக் கூடாது.

தொழிலாளிகளுக்கும்-முதலாளிகளுக்கும் முன் இருந்த வித்தியாசமும், கிராமத்தானுக்கும்-பட்டணத்தானுக்கும் முன் இருந்த வித்தியாசமும் பணப்பெருக்கினால் முன்னை விட அதிகமாகி விட்டதே தவிர குறையவில்லை.

அந்த வித்தியாசமானது முன்னைவிட அதிகமான பேதத்தையும், இழிவையும் மனக்குறையையும் உண்டாக்கி மிக்க கீழ்மகனாக ஆக்கிவிட்டது.


(31-10-44ல் ஈரோட்டில் தோழர் ப.சண்முகவேலாயுதம் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராம அதிகாரிகள் பயிற்சிப்பள்ளி ஆண்டு விழாவில் மாவட்ட கல்வி அதிகாரி திரு.வி.கே. ராமன்மேனன், எம்.ஏ.,(பாரிஸ்டர்) அவர்கள் தலைமையில், "கிராமச் சீர்த்திருத்தமும் அவற்றின் எதிர்காலத் திட்டமும்" என்ற தலைப்பில் பெரியார்.ஈ.வெ.ரா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

08 February 2008

திருமணங்களை சட்டவிரோதமாக்க வேண்டும்-பெரியார்

மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்தி விட்டன. குறிப்பாக, பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப் போலத்தான் மக்களில் சரிபகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிப்போடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள்.

பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான் தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!

தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப' என்று இருக்கிறதே. "மேலோர் இவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காதிய கரணமும் உண்டே' என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்ததெல்லாம், சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.

பெரும் பகுதி மக்களைச் சூத்திரனாக்க உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க ‘கலியாணம்' என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள். இதைத்தான், நமது இதிகாசங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.

வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர, ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?

முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.

பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?

"நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "Proposed Husband and Wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?

பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 'விடுதலை' நாளேட்டில் 28.6.1973 அன்று எழுதிய கட்டுரை

07 February 2008

சூத்திரனும், பஞ்சமரும் மந்திரியாகி விட்டால் பரம்பரை இழிவு நீங்கி விடுமா?-பெரியார்

நாங்கள் இவ்விதக் காரியத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் எல்லாம் முதலாவதாக, எங்களுக்குள்ள இழிநிலையும் சூத்திர, பஞ்சமன் என்ற இழிவுப் பட்டம் நீங்க வேண்டும் என்பதற்கேயாகும். ஆனால், இவ்வித இழிவையும் கீழ்சாதிப் பட்டத்தையும் எண்ணி இதை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் நாங்கள்தான். வேறு யாரும் இதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ஆனால், இவ்வித இழி நிலைமை நீங்க வேண்டுமென்பது, தனிப்பட்ட என்னுடைய சுயநலத்திற்கு மட்டுமல்ல; இதனால் எனக்கு மட்டும் இழிவு கிடையாது. சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் அழைக்கப்படுகிற திராவிட மக்கள் அத்தனை பேருக்கும் உள்ள இழிவைப் போக்கவேயாகும்.

இன்று மந்திரியாக இருக்கும் சூத்திரன், மந்திரி என்பதால் சூத்திரன் என்ற இழிநிலை போகாது. இன்று மந்திரியாக இருக்கிற பறையர், மந்திரியாக இருப்பதால் அவருடைய பறையர் என்ற பட்டம் போகாது. வேலை முடிந்ததும் ஊருக்குப் போகிற அவர்கள், தங்கள் தங்கள் பறைச்சேரிக்குத்தான் போவார்கள். இன்று சூத்திரர்களும், பஞ்சமர்களும், மந்திரியாகவும், சட்டசபை மெம்பராகவும் (உறுப்பினராகவும்) வந்தார்கள் என்றால், நாங்கள் கூப்பாடு போட்டதால்தான் முடிந்தது. இன்றைக்குப் பறையரும், பள்ளரும் ஓரளவு கல்வி கற்க போதிய வசதியும் சலுகையும் அளிக்கப்பட்டு, அதனால் படிக்கவும் முடிந்தது என்றால், அதுவும் எங்களது முயற்சியினால்தான். எனவே, இவர்கள் யாரைக் கொண்டு முன்னுக்கு வர முடிந்ததோ, அவர்களையே எதிரிகளாக நினைக்கின்றனர். ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினால், எங்களை வகுப்புவாதி என்கின்றனர்.

"உலக உத்தமர்' என்ற காந்தியாரே சூத்திரன்தான். அவரும் தன்னை அடிக்கடி "நான் சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வார். அப்படிப்பட்ட "மகாத்மாவே' ஜாதியைப் பற்றிச் சிந்தித்தாரா? அதை ஒழிக்க வேண்டும் என்று ஒரு வார்த்தையாவது பேசினாரா? அவர் பச்சையாகவே “நான் வர்ணாசிரமத்தைக் காப்பாற்றவே வந்தேன்; ராமராஜ்யத்தை நிலைநாட்டுவதே என் நோக்கம்'' என்று கூறினார். அதற்கென்று மக்களை எல்லாம் ராமபஜனை செய்யச் சொன்னார். அதனால்தான் பார்ப்பனர் எல்லாரும் கூடி, அவருக்கு "மகாத்மா' பட்டம் கொடுத்தனர். இல்லையேல், அவர் இதுவரையாவது உயிர் வாழ்ந்திருக்க முடியாது.

நானும் "மகாத்மா' ஆக முடியும். இன்றைக்கே “பார்ப்பனர் எல்லாரும் சாட்ஷாத் பூதேவர்கள்; மதம் அவசியம் வேண்டும், கடவுள் இல்லாமல் ஒன்றும் நடக்காது. அவசியம் பார்ப்பனர்கள் எல்லாக் கோயிலுக்கும் மணியாட்டத்தான் வேண்டும். இல்லையேல் உலகமே நாசமாய்ப் போய்விடும்'' என்று, இன்றைக்கு இக்கூட்டத்திலேயே பேசினால் போதுமே! உடனே தந்திமேல் தந்தி பறக்கும்; இங்குள்ள பார்ப்பனர் எல்லாரும் உடனே திரு. காமராசருக்குத் தந்தி கொடுப்பார்கள்; உடனே அவர் மத்திய அரசாங்கத்துக்கு "இங்கு இருக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ. ராமசாமி பக்தராகிவிட்டார். அதுவும் என்னுடைய ஆட்சியில் அவர் கொள்கைகள் மாற்றப்பட்டன'' என்று ஒரு வரி அதிகம் கொடுத்தால், உடனே எனக்கு மறுகணமே "மகாத்மா ராமசாமி' என்று கூப்பிட உத்தரவிடுவார்கள்! அங்கிருந்து “ராமசாமிக்கு ஒரு மந்திரி வேலை வேண்டுமா? இரண்டு மந்திரி வேலை வேண்டுமா? என்று கேள்!'' என்று பதில் வரும்.

ஆனால், நான் மற்றவர்களைப் போல் எண்ணமில்லாதவனாகையால், என்னுடைய வாழ்நாளில் ஏதும் பொதுத் தொண்டினைச் செய்தாக வேண்டும் என்று, நம் திராவிட மக்களுக்கென்று இக்காரியத்தில் ஈடுபட்டு, கடந்த 30 ண்டுகளாகப் பற்பல எதிர்ப்புகளுக்கிடையிலும் கஷ்டங்களுக்கிடையிலும் துணிந்து செய்து வருகிறேன்.

ஒரு பிள்ளை பெற்றவள் 10 பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம் பார்ப்பதைப் போல், எனக்கு யோசனை கூறுகிறது கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிசத்தின் கொள்கையே தெரியாதவர்கள், கம்யூனிசத்தின் கொள்கையைப் பாழ்படுத்துகின்றனர். "பணக்காரன் ஒழிந்தால் ஜாதி ஒழியும்'' என்கின்றனர். ஆனால், ஜாதி இருப்பதால்தானே அவனிடம் பணம் போய்ச் சேருகிறது என்பதை உணருவதில்லை. தனக்குத் தெரியுமானாலும், அக்கட்சியின் தலைவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர்கள் ஆனதால், அதுபற்றிக் கூறுவதே கிடையாது. ஏதாவது உதாரணம் சொல்ல லெனின் சொல்லவில்லையே, மார்க்ஸ் சொல்லவில்லையே? என்றால், லெனின் இருந்த நாட்டில் பார்ப்பான் பறையன் இருந்தானா? இவர்கள் இருக்கவுமில்லை; அதைப்பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், இங்கு நேரிலேயே பார்க்கிறோமே பார்ப்பானையும் பறையனையும்! அதுமட்டுமா? சாஸ்திரத்தில் பார்க்கிறோம், சட்டத்தில் பார்க்கிறோம். ஆகவேதான் இங்கு இவைகளை ஒழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

எனவேதான், நாங்கள் கோருவது எல்லாம் மக்களுக்குச் சோற்றுக்கும், உத்தியோகத்திற்கும் மாத்திரமின்றி, பரம்பரை இழிவு நீங்க வேண்டும் என்பதேதான். அந்நியன் இந்நாட்டைச் சுரண்டாது, வேறு இங்குள்ள எவராவது ஆட்சி செய்தாலும் போதும். பார்ப்பனர்களின் அட்டூழியம், ஜாதி முறையும் ஒழிந்து, ராமாயணத்தில் ஒரு ஜதை செருப்பு ஆண்டதாகக் கூறப்படுகிறதைப் போல் எங்களை ஒரு ஜதை செருப்பு ஆட்சிபுரிந்தாலும் சரியே. மக்கள் சுயமரியாதை கொண்டவர்களாக, மனிதத் தன்மையுடன் வாழ வேண்டும். மனித ஜாதி என்ற ஒரு ஜாதிதான் இருக்க வேண்டும்.

பெரியார் ஈ.வெ.ரா 13.4.1955 அன்று, திருச்செங்கோட்டில் ஆற்றிய உரை. "விடுதலை' 20.4.1955

06 February 2008

தமிழைப் புதுமொழியாக்க முயல வேண்டும் - பெரியார்

எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம்மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துகளைப் பொறுத்துத்தான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துகளைக் கொண்டுதான் பெரும்பாலும் அந்தந்த மொழி பேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட, அறிவைக்கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு மொழியின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் மற்றொரு காரணம் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கு எவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாகக் கற்றுக் கொள்ளப்படுவதற்கு, எழுத்துகள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி ‘தமிழ்'தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. இத்தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது, ‘தமிழ் மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது' என்று கிளர்ச்சி செய்தேன்.

அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனிவரால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது; எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல; பின் எதற்காக?

தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப் பிற எம்மொழியையும் விடத் தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் - மற்ற வேற்று மொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் நன்மையடைவோம் எ‎ன்பதோடு, நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்பு கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள் கேடுபயக்கும் கருத்துகள் நம்மிடையே புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான்.

வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்றமொழி தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல.

நம்மிடையேயுள்ள சாதிப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுவோம். "ஜாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஒன்று கூறுங்களேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தை இல்லையே! ஆதலால், நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும், இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதிபேத உணர்ச்சி அற்றுப்போகுமா, இல்லையா? கூறுங்களேன்.

இதேபோல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம்; சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள் வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள்.
தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பால் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. ‏இந்நிலைக்கு முக்கிய காரணம், மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழ், சைவமொழி ஆக்கப்பட்டதால்தான் சைவத்திற்காக வேண்டி வடமொழியும், வடமொழிக் கலைகளும் அதிகமாக தமிழ் நாட்டில் புகத் தொடங்கின.

தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடத்திய தமிழர் மரபில் இன்று, ஒரு நியூட்டன் தோன்றமுடியவில்லை; ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்க, சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமது மேன்மைக்கும், அந்தஸ்துக்கும் ஏற்றதும் நம் சுதந்திர உணர்ச்சியைத் தூண்டக்கூடியதும், நம் இழிவைப் போக்கக் கூடியதுமான எம்மொழியிலிருந்தும் நம் மொழிக்கு ஆக்கம் தரக்கூடியதும், அவசியமானதும் ஆகிய சொற்களை எடுத்துக் கொள்ளலாம். எம்மொழித் தொடர்பிருந்தாலும் பரவாயில்லை. நமக்கு வடமொழித் தொடர்பு மட்டும் கூடவே கூடாது. தமிழ் ஒன்றுதான் இன்றுவரைக்கும் வடமொழிக் கலப்பை ஓரளவுக்காவது எதிர்த்து வந்திருக்கிறது. வேற்றுமொழிக் கலப்பின்றித் தனித்துச் சிறப்புடன் வாழக்கூடிய தன்மையைத் தமிழ் பெற்றிருக்கிறதென்று மேனாட்டு மொழி வல்லுனர்களே எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

'மொழி - எழுத்து' நூலிலிருந்து

05 February 2008

கலையும் இலக்கியமும் யாருடைய நன்மைக்காக? - பெரியார்

சுயமரியாதை இயக்கத்தார் மத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்துகின்ற காலத்தில் அதற்குச் சரியான சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாத நமது பண்டிதர்கள், தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காகப் பழைய கலைகள் என்னும் சாக்கின் பேரில் அதன் நிழலில் போய் மறைந்து கொண்டு, "சுயமரியாதை இயக்கத்தார் பழைய கலைகளை நாசம் செய்கின்றார்கள்' என்று பழி சுமத்துவதன் மூலமே அவைகளைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்.

கோயில்களைக் குற்றம் சொல்லி, அவற்றில் உள்ள விக்ரகங்களின் பாசங்களை எடுத்துக் காட்டி, இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும், இந்த பாசத்திற்காக இவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்யலாமா என்றும் கேட்டால் ஓவியம் என்னும் நிழலில் புகுந்து கொண்டு "அவைகள் அவசியம் இருக்க வேண்டும்' என்றும் "அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக் கலை அழிந்துவிடும்' என்றும், "சாமி பக்திக்காகத் தாங்கள் கோயில்களைக் காப்பாற்றுவதில்லை' என்றும் "ஓவியக் கலை அறிவுக்காகக் கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும்' என்றும் சொல்லுகின்றார்கள்.

நமது பண்டிதர்களின் ஓவியக் கலையும், காவியக் கலையும் போகின்ற போக்கைப் பார்த்தால், அவர்களுக்கு உள்ள பகுத்தறிவுக் கலை எவ்வளவில் இருக்கின்றது என்பது ஒருவாறு தானாகவே விளங்கும். மக்களுக்கு ஓவியம் வேண்டுமானால், இந்தியக் கோயில் ஓவியமும் இந்துக் கடவுள்கள் ஓவியமும் கடுகளவு அறிவுள்ள மனிதனும் ஒப்ப முடியாத, மதிக்க முடியாத ஓவியங்கள் என்பதோடு, அவை மனிதத் தன்மையும் பகுத்தறிவும் உள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஓவியம் என்று சொல்ல முடியாததான நிலையில் இருப்பதையும் காணலாம்.

எப்படியெனில், இந்திய ஓவியம் என்பது இந்து மத சம்பந்தமான கடவுள், புராணம் ஆகியவைகளைப் பற்றியதைத் தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அரிது என்றே சொல்ல வேண்டும். அது மாத்திரமல்லாமல், அவைகளில் இயற்கைக்கு முரண்பட்டவையே 100க்கு 99 ஓவியங்கள் என்றும் சொல்ல வேண்டும்.

சாதாரணமாக மனிதனும் மிருகமும் புணர்வதும், மிருக முகத்துடன் மனிதன் இருப்பதும், மிருகங்கள் பறப்பதும், மிருகங்களின் மீது அளவுக்கு மீறின மக்கள் இருப்பதும், பட்சிகளின் மீது மக்கள் இருப்பதும், மக்கள் பறப்பதும்; 4 கைகளும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து, ஆறு முகங்களும்; சிறிய உருவத்தின் மீது பெரிய உருவங்கள் இருப்பதும், தாமரைப் பூவின் மீது ஒரு பெண் நிற்பதும், இன்னமும் இதைவிட எத்தனையோ பொருத்தமற்ற, சாத்தியமற்றதான உருவங்களே இன்று ஓவியமாகக் கருதப்படுகின்றன.

சாதாரணமாக, மேல் நாட்டு ஓவியங்களைப் பார்த்தால் இது ஓவியமா, உண்மைத் தோற்றமா என்று மருளும்படியாகவும், அவைகளுடைய சாயல் முதலியவைகளிலிருந்தே குணம், காலம், இடம், நடவடிக்கை முதலியவைகள் தெரிந்து கொள்ளும்படியாகவும், அவைகள் பிரத்தியட்சமாக இயங்கிக் கொண்டிருப்பது போலவும், எவ்வளவோ அருமையான காரியங்கள் வெகு எளிதில் மிகச் சாதாரண தன்மையில் அறியும்படியாகவும், நாமே பார்த்த மாத்திரத்தில் சுலபத்தில் பழகிக் கொள்ளும்படியாகவும் இருப்பதைக் காணலாம்.

ஆகவே, அப்படிப்பட்ட அருமையான ஓவியங்களையும், சித்திரங்களையும், புதுமைகளையும் விட்டு விட்டு அநாகரிகமும், காட்டுமிராண்டித்தனமுமான, மிருகப் பிராயமும் கொண்டதான உருவங்களை வைத்துக் கொண்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவைகளுக்குப் பணம், காசு, நேரம் ஆகியவை செலவு செய்து, கீழே விழுந்து அவைகளிடம் பக்தியையும் காட்டிக் கொண்டு, "ஓவியக் கலைக்காக அக்கலையைக் காப்பாற்றுவதற்காக அவைகளிடம் இப்படிச் செய்கின்றோம்' என்றால், இது பகுத்தறிவும் யோக்கியக் குணமும் அடைந்த மனிதர் என்பவர்களின் செய்கையாகுமா பேச்சாகுமா என்று கேட்கின்றோம்.

இந்த இடத்தில் நாம் முக்கியமாய்க் குறிப்பிடுவது என்னவென்றால், நமது பண்டிதர்கள் என்பவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும், புத்தக வியாபாரத்திற்கும், வாழ்க்கை நிலைமைக்கும் இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான அநாகரிகமான காவியங்களும் ஓவியங்களுமல்லாமல் வேறுவகை ஒன்றில்லாமல் போனதால், அவர்கள் இத்தனை மோசமான பொய்யையும், புரட்டையும் வஞ்சகத்தையும் சொல்லிக் கொண்டு, இவைகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

ஆகவே, இம்மாதிரி பாசமும் அநாகரிகமுமான காவியமும், ஓவியமும் அழிக்கப்பட வேண்டுமானால், முதலாவதாக நமது பண்டிதர்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு வாழ்க்கை நலத்திற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டியது, பகுத்தறிவையும் நாகரிகத்தையும் விரும்பும் பொதுமக்கள் கடமையேயாகும்.

'குடி அரசு' இதழில் பெரியார் ஈ.வெ.ரா 26.4.1931ல் எழுதிய கட்டுரை

04 February 2008

பஜனைப் பாட்டுப் பாடவா தமிழ் இசையை வலியுறுத்தினோம்? - பெரியார்

தமிழ் இசையை நாம் ஏன் வேண்டுகிறோம்? எதற்காக நமக்குத் தமிழில் இசை வேண்டுமென்கிறோம்? தமிழ் மொழியை ஏன் வேண்டுகிறோம்? ஸ்காந்தத்தை ‘கந்த புராணம்' என்றும், கிருஷ்ணனை ‘கிருட்டிணன்' என்றும், ‘ஹோம் நமஹா என்பதை ‘ஓம் நமோ' என்றும், நரசிம்ஹமூர்த்தி என்பதை ‘சிங்கமுகக் கடவுள்' என்றும், தசகண்ட ராவணன் என்பதை ‘பத்துத்தலை இருட்டுத் தன்மையன்' என்றும் மொழி பெயர்த்துக் கொண்டு வணங்கி, நம்பி, திருப்தி அடையவா என்று கேட்கிறேன்.

தமிழிசைக்கு நாம் கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள்; பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது. இசை விருந்தளிக்கும் செல்வவான்களும், நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும் வரை, இந்த உணர்ச்சி வலுத்துக் கொண்டே போகும். இசை, நடிப்பு ஆகியவை எதற்குப் பயன்படுகின்றன? ஏதாவது ஒரு கருத்தை ஒரு சேதியைக் காட்டுவதற்கும், அதை மனதில் பதிய வைப்பதற்கும் அது வெறும் வாக்கியத்தில் இருப்பதை இசை இன்பத்தோடும், நடிப்பு இன்பத்தோடும் மனதிற்குள் புகுத்துவதற்கும் ஆகவே முக்கியமாய் இருந்து வருகின்றன.

இரண்டாவதாகத்தான் அவற்றில் இன்ப நுகர்ச்சி வருகின்றது. ஆகவே, இசைக்கும் நடிப்புக்கும் கருத்தும் செய்திகளும் பிரதானமாகும்; அடுத்ததாகவே சுவை பிரதானமாகும். அதன் உண்மையான அனுபவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால், நுகர்வோரும், இசைத்து நடிப்போரும் செய்தியையும், சுவையையும் பற்றிக் கவலையில்லாமல் நுகர்வோர்கள் நேரப் போக்குக்கும், வேறு பல காட்சி இன்பத்திற்கும் அதைச் சாக்காக வைத்து நுகர்வதாலும், இசைத்து நடிப்போர்கள் பொருளுக்கும், வேறு சுயநலத்துக்கும் பயன்படுத்துவதாலும் அதற்கு உண்டான பயன் ஏற்படாமல் போய்விடுகிறது.

சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட, நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது, அறிவுடைய மக்களின் தலையாயப் பண்பாகும். அவற்றில் நமக்குப் போதிய கவலை இல்லாததாலேயே நம் நலத்துக்கு மாறான சேதிகளும், உணர்ச்சிகளும் கொண்ட காரியங்கள் வளர்ந்துவர ஏற்பட்டு விட்டதுடன், அவைகளையே பொருள் கொடுத்தும், காலத்தையும் ஊக்கத்தையும் செலவழித்தும் நுகர்ந்து, அறிவும் மானமும் கெட்டு, முற்போக்கும் தடையுற்றுக் கீழ் நிலைக்கு வர வேண்டியவர்களானோம்.

சென்ற மாதம் சென்னையில் நடந்த தமிழ் இசை மாநாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 10 நாட்கள் ஒரு பெரிய திருநாள்போல் நடந்தது; பல பதினாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுப் பல ஆயிரக்கணக்கான மக்கள் தினம் 4, 5 மணி நேரம் செலவழித்து வந்து அமர்ந்து இருந்துவிட்டுப் போனார்கள். வள்ளல் அண்ணாமலையார் உணர்ச்சியும் ஊக்கமும் ஆழ்ந்த சிந்தனையும், அவர்களது பந்துமித்திரக் குழாங்களும், அறிஞர் சண்முகம் அவர்களது அறிவுரைகளும் ஆற்றல்களும் எல்லையின்றிப் பயன்படுத்தப்பட்டன. எதிரிகளுக்கு ஆணித்தரமான விடை அளித்து அவர்களது வாய்க்கு ஆவிகூட வெளிப்படமுடியாதவாறு ஆப்புகள் சம்மட்டியால் அறையப்பட்டன. வெற்றிக் கொடி ஆகாயத்தை அளாவிப் பறந்தது.

ஆனால், விளைந்த பயன் என்ன? ஏற்பட்ட படிப்பினை என்ன? இம்மாநாடு, பண்டிதர்களைத் தமிழில் பஜனைப் பாட்டுகளைத் தொடுக்க வைத்தது; இசைவாணர்களை (பாட்டுத் தொழில்காரர்களை) வீட்டில் தனிமையில் உட்கார்ந்து பாட்டுகளைப் பாடிப்பாடிப் பழக்கம் செய்து கொள்ளச் செய்தது; இந்தப்படியான தமிழ் பஜனைப் பாட்டுப் பாடத் தெரிந்தவனையே இசை விருந்துக்கு அழைக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சியை நமது செல்வவான்கள் பலருக்கு ஊட்டியது; இசை நுகரச் செல்லும் மக்கள் பலருக்கும் (இந்த இசைவாணர்) தமிழில் இசை இசைக்கிறாரா அல்லது வேறு மொழியில் இசைக்கிறாரா - வேறு மொழியில் இசைத்தால் கலவரம் செய்யலாமா என்கின்ற சிந்தனையைச் சிலருக்கு ஊட்டிற்று என்பனவாகிய இவை ஏற்பட்டன என்றே வைத்துக் கொள்ளலாம்.

இவற்றால் சகல உயர்வும், தகுதியும் இருந்து ஒரு சிறு கீழ் மக்கள் குழுவால் இழி மக்களாய்க் கருதப்பட்டு, சுரண்டப்பட்டு, மானமற்று நடைப்பிணங்களாய்க் கிடக்கும் தமிழ் மக்களுக்கு, இந்த நிலை மாற, ஏதாவது ஒரு ஊசி முனை அளவு பயன் ஏற்பட்டதா என்று வணக்கத்தோடு கேட்கிறேன். நலம் பெறுவதற்கு வழி சிறிதும் இல்லாவிட்டாலும், கேட்டிற்காவது சரிவு வழி ஏற்படாமல் போயிற்றா என்று கேட்கிறேன்.

இவ்வளவு பொருளும், ஆற்றலும், மதியும், மற்றதும் செலவழித்ததற்கு நாம் கண்ட பயன் என்ன? நாட்டில் உள்ள நல்ல, உயர்தர இசைவாணர்களுக்குப் பொருள் தந்து வரவழைத்து ஒரு காலைத் தூக்கி ஆடிக்கொண்டிருக்கும் நடராஜ உருவத்தின் முன் தீப தூப நைவேத்தியத்துடன் உட்கார வைத்து, பல ஆயிரக்கணக்கான மக்களை வரவழைத்துப் பஜனைப் பாட்டுகள் பாடச் செய்வதும், அதன் மூலம் மக்களுக்குப் பக்தி புகட்டுவதுந்தானா? இது யார் செய்யவேண்டிய காரியம்? எதற்கு ஆகச் செய்ய வேண்டிய காரியம்? இதனால் ஏற்படும் பலன் யாருக்கு நலனைத் தரும்?

(பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 7.2.1944 அன்று ஆற்றிய சொற்பொழிவு.)

03 February 2008

சமஸ்கிருதம் தேவையா? - பெரியார்

இந்த நாட்டில் பல காலமாக ‘சமஸ்கிருதம்’ என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந்நாட்டில் புகுத்தி, அதற்குத் ‘தேவ பாஷை’ எனப் பெயரிட்டுக் கடவுள்கள் - தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தால் புரியும் - பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100-க்கு 97 பேர் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் - நமது மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத - நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள - இந்நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய்மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்து வரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருந்திருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், வாலிபர்கள் பலருக்கு ஒரு முப்பது, நாற்பது வருடங்களுக்கு முந்திய நிலைமை எப்படி? தமிழுக்கு அப்பொழுது இருந்த மரியாதை, அந்தஸ்து என்ன? பார்ப்பன ‘மேலோர்’ மொழியாக - சமஸ்கிருதத்திற்கு இருந்த அந்தஸ்து என்ன? என்பது பற்றிய பல விஷயங்கள் தெரியுமா? தெரியாது என்றே நினைக்கின்றேன். சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு வேளை தெரியக்கூடும்.

முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ்கிருத புரொஃபசர் வாங்கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரோஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ்கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ்கிருத புரோஃபசருக்கு 350 ரூபாய் சம்பளம்! தமிழ்ப் பண்டிதருக்கு (புரோஃபசருக்கு) 75 ரூபாய்தான் சம்பளம். சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர் ‘புரோஃபசர்’; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.

காலஞ்சென்ற பேராசிரியர் திரு.கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் பிரசிடென்ஸி காலேஜில் புரோஃபசராக இருந்தபோது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத்தான் ஞாபகம். அதே நேரத்தில் அங்கு சமஸ்கிருத புரோஃபசராக இருந்த திரு.குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்) என்பவர் வாங்கின சம்பளம் சுமார் ரூ. 300க்கு மேல்! ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு.பனகல் இராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, ‘நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்’ என்றும் சொன்னார். அவர் சமஸ்கிருதம் படித்தவர்; புலமை வாய்ந்தவர் என்றபோதிலும் கூட அந்தமாதிரி அந்தஸ்திலும், சம்பளத்திலும் வேறுபடுத்திய கொடுமையைக் கண்டித்தார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன்மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார். அன்று நாங்கள் போட்ட கூப்பாடும், ஜஸ்டிஸ் மந்திரி சபையின் உத்தரவும் இல்லாதிருந்தால் இன்றும் தமிழ்ப் பண்டிதர்கள் இதே நிலைமையில்தான் இருக்கக் கூடும்.

பிறகு, திரு. இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் 1937-ல் இந்தியைக் கொண்டு வந்ததன் உள்நோக்கமே சமஸ்கிருதத்துக்குச் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து வருவதைத் தடுத்து அதை உயர்த்தவும், அந்த சமஸ்கிருத எதிர்ப்பு உணர்ச்சியை அழிக்கவுமேயாகும். இதை அவர் வெளிப்படையாகவே பல கூட்டங்களில் பல சொற்பொழிவுகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இதை நாம் இப்பொழுது விட்டால் நமது இனத்திற்கும், தன்மானத்திற்கும், உரிமைக்கும் பேராபத்து என்று கருதித்தான், ஆச்சாரியாரின் கட்டாய இந்தித் திணிப்பைப் பலமாக எதிர்த்துப் போராட்டம் துவக்கி சுமார் 2000 பேர்களைச் சிறைக்கு அனுப்பியதோடு, நானும் மூன்று ஆண்டு கடின காவல் தண்டனை பெற்றேன்.

இன்று தமிழ்நாட்டில் ‘சமஸ்கிருதம்’ என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் கடுகத்தனையாவது, ஒற்றுமை - பொருத்தம் எவ்வகையிலாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் - தமிழர்கள் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும், ஏதாவது ஒரு காரியத்திற்கும் இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா? மற்றும், தமிழ் மக்கள் தமிழில் எவ்வளவுதான் மேதாவிகளாய் இருந்தாலும், அவர்களால் சமஸ்கிருதத்தைச் சரியானபடி உச்சரிக்க முடிகிறதா? தமிழர் யாராய் இருந்தாலும் சமஸ்கிருதம் உச்சரிப்பது என்றால் அது சிறிதாவது கஷ்டமானதும் சரிவர உச்சரிக்க முடியாததுமானதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலைக்குப் பொருந்தாது உச்சரிப்பதனால் சரியானபடி உச்சரிக்க முடிவதில்லை; மனிதனின் சக்தியை அதிகம் பயன்படுத்தி ஆக வேண்டும். குளிர்நாட்டு மொழி, சமஸ்கிருதம்; ஆகவே, அது நமக்குப் பேச்சு வழக்குக்கு உதவாததாகும்.

ஒரு மொழியின் தேவை முக்கியத்துவமெல்லாம் அது பயன்படுகின்ற தன்மையைப் பொறுத்ததே ஆகும். அது எவ்வளவு பெரிய ‘இலக்கிய காவியங்களையும்’, ‘தெய்வீகத் தன்மையும்’ தன்னிடத்தே கொண்டது என்று சொல்லிக் கொள்ளப்படுவதனாலும் - அது மக்களது அன்றாட வாழ்க்கையில், அவர்களது அறிவை வளப்படுத்தும் தன்மையில் எந்த வகையில் உபயோகப்படும்படி இருக்கிறது என்பதையே அளவுகோலாகக் கொண்டு அளக்க வேண்டும்.

உதாரணமாக, இன்று இங்கிலீஷ் மொழி சிறந்த மொழி என்று பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றதென்றால், அது ‘புராதன மொழி’ என்பதோ அல்லது ‘தெய்வாம்சம் உள்ள மொழி’ என்பதோ அதற்குக் காரணம் அல்ல. அதனுடைய உலக உபயோகமும், அது உலக மக்களது அறிவை, வாழ்வை வளப்படுத்த உதவிய, உதவுகின்ற தன்மையையும் பொறுத்ததேயாகும்.

1. ஒருவன் ஆங்கில மொழியைச் சுலபமாகக் கற்றுக் கொள்ள முடியும்.
2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பி வர இயலும்.
3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்திரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒரு போதும் கிடையாது.

இம்மாதிரிக் காரணங்களால் அது சிறந்த மொழி என்று கருதப்படுகிறது. வெறும் அழகை மாத்திரம் வைத்துக் கொண்டு இப்படிச் சொல்லாமல், அதன் பயனைக் கணக்கிட்டுத்தான் அதனைப் பாராட்டித் தீரவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.

இதற்குரிய யோக்கியதாம்சங்களில் ஏதாவது ஒன்றாவது நம் நாட்டில் உள்ள மொழிகளுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக - ‘தேவ பாஷை’யான சமஸ்கிருதத்துக்கு உண்டா? என்ற கேள்விக்கு இன்றல்ல - பல ஆண்டுகளுக்கு முன்பே, ‘இல்லை’ என்ற பதில் கிடைத்துவிட்டது. அது, ‘பேச்சு வழக்கு இல்லாத’ ஒரு பாஷை ஆகும். இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள சுமார் 40 கோடி மக்களில் எத்தனை பேர்களுக்கு சமஸ்கிருதம், ‘தாய்பாஷை’? எத்தனை பேர்கள் பேசுகிறார்கள்?

02 February 2008

இந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா? - பெரியார்

இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது. "இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்' என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில் தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவது தான் இந்தியின் தத்துவம். எனவே தான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு பேர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால், இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். என்ன விலை கொடுத்தேனும், நாம் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். இது கடைசிப் போராட்டம் வெற்றி அல்லது தோல்வி, இரண்டிலொன்று பார்த்துவிடத்தான் வேண்டும்.

இந்தியில் மெச்சத் தகுந்த கலைகளே கிடையாது. அதிலுள்ள கலைகள்யாவும் துளசிதாஸ் ராமாயணமும், கபீர்தாஸ் சரித்திரமுந்தாம்; மநுதர்மமும், பாகவதமும்தான். இவற்றின் தன்மைதான் தெரியுமே உங்களுக்கு. இந்தி மொழி தலைசிறந்த அறிஞர்களைப் பெற்றெடுக்கவில்லை என்று திரு.வி.க. அவர்கள் குறிப்பிட்டார். இந்தி உற்பத்தி செய்த அறிவாளிகள் யார் என்றால், நோகாமல் பதவிக்கு வந்த நேருவையும், அவருடைய அய்யாவையுந்தான் குறிப்பிட வேண்டும். அவர்களது தியாகம் இன்று அந்தக் கூட்டம் குடும்பத்தோடு கொள்ளையடிப்பது (உங்களுக்குத் தெரிந்ததுதான்); வேறு ஆட்களைக் குறிப்பிட முடியாது. தமிழ் மொழியோ எண்ணற்ற கலைகளையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சித்தர்களையும், முத்தர்களையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியில் கலை இல்லை; காவியம் இல்லை; நீதி நூல் இல்லை. அம்மொழி மூலம் அறியக் கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை. ஆகவே, 100க்கு 97 போர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? இங்குள்ள பார்ப்பன கோஷ்டியார், இத்திராவிட நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து, இந்நாட்டை வடநாட்டுக்கு வால் நாடாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் மர்மமே ஒழிய ‘இந்தி தேசிய மொழி; ஆகவே, எல்லோரும் படிக்க வேண்டும்' என்று கூறுவதெல்லாம் பித்தலாட்ட வார்த்தைகள். இந்தி தேசிய மொழியாயின், எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகக் கண்டிப்பாகக் கூறிவிடட்டுமே! இந்தி அல்லது சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே, அது ஏன்? இந்தி தேசிய மொழியா? அல்லது சமஸ்கிருதம் தேசிய மொழியா? நீங்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது. ‘கன்னிகாதானம்' என்பதை வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று மாற்ற எவ்வளவு சிரமப்பட இருந்தது? ‘மாங்கல்ய தாரணம்' என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருந்தது? மற்றும், தேவை இல்லாத சடங்குகளை, புராண இதிகாசக் குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக் கடவுள் இவற்றின் மீதும் இருந்த மூடநம்பிக்கையையும், மூட பக்தியையும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது? இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களா?

சூத்திரன் என்ற வார்த்தையைக் கைவிட்டு ‘திராவிடன்' என்று பெருமிதத்தோடு கூறிக்கொள்ளும் நீங்கள், மறுபடி சூத்திரனாக மாற விருப்பம் கொள்வீர்களா? இந்த முற்போக்கைக் கண்டு அஞ்சும் பார்ப்பனக் கூட்டம் வட நாட்டாரின் கூலிகளாகி, அவர்களுக்கு வால்பிடித்து நம்மவர் சிலரை விபீஷணர்களாக்கிக் கொண்டு, தேசிய மொழி என்ற போரால் நம்மீது வடமொழியைச் சுமத்துகிறது என்றால் நம்மை, நம் நாட்டை வட நாட்டாருக்குக் காட்டிக் கொடுக்கிறதென்றால் நாம் அதற்கு இடங்கொடுக்கலாமா?

தோழர்களே! தாய்மார்களே! திராவிடர் - ஆரியர் போராட்டம், அதுவும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையறாது இருந்துவரும் இப்போராட்டம், இன்று ஒரு முடிவான கட்டத்திற்கு வந்துவிட்டது. இதை முடித்து வைப்பது நமக்குப் பெருமையுங்கூட. நமது பின் சந்ததியார் போற்றிப் புகழக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பத்தில் நாம் இன்று இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பின் சந்ததியரால் எள்ளி நகையாடப்படுவோம் என்பதோடு, அவர்களின் துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் நாமே காரணபூதர்களாகவும் ஆகிவிடுவோம்.

(பெரியார் ஈ.வே.ரா அவர்கள் சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவு)