15 June 2010

இயந்திரமும் கை இராட்டினமும்

நூல் நூற்கும் விஷயத்தில் விசை இயந்திரத்திற்கும் கை இராட்டினத் துக்குமுள்ள தார தம்மியத்தை நமது நாட்டாரில் சிலர் நன்கு அறிந்து கொள்ளவில்லையென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. இராட்டை சுற்றுவதினால் நமக்கு வேண்டிய அளவு நூல் உற்பத்தி செய்வது கஷ்ட மென்றும், போதுமான கூலியும் இதில் கிடைக்காதென்றும், இயந்திரத்தினால் அதிக நூல் உற்பத்தி செய்யக்கூடுமென்றும், கூலிக்காரர்களுக்கு அதிகக் கூலி கிடைப்பதுடன், முதலாளிகளுக்கும் நல்ல லாபம் வருகிறதென்றும் இவர்கள் சொல்லுகிறார்கள். நமது நாட்டின் கொடிய வறுமைக்கு முக்கிய காரணம் மேற்சொன்ன இயந்திரங்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இயந்திரப் பெருக்கினால் ஒருசில கூலிகளும் தனிப்பட்ட முதலாளிகள் சிலரும், பிறநாட்டு இயந்திர வியாபாரிகளுந்தான் பிழைக்க முடியுமே தவிர ஜனங்கள் பிழைக்க முடியாது. நமது ஏழை நாட்டில் வேலையில்லாமல் கஷ்டப்படுவோர் எத்தனையோ பேர் குறைந்த அளவு கூலியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இவர்களெல்லோருக்கும் இயந்திர ஆலைகளில் வேலை கொடுக்க முடியாது. ஒவ்வொரு தொழிலிலும் இம்மாதிரியே அநேகம் பேருடைய கூலியை இயந்திரங்கள் விழுங்கி விடுகின்றன. நம் தேசம் உள்ள நிலைமையில் பெருவாரியான ஏழைக் கூலிக்காரர்களுக்கு வேலை கிடைத்தால்தான் வறுமை நீங்கும். ஒரு சில முதலாளிகளும், அந்நிய நாட்டு இயந்திரத் தொழிலாளரும் பிழைப்பதினால் தேசத்தின் தரித்திரம் நீங்காது. உதாரணமாக, நம் நாட்டில் மில்கள் என்று சொல்லப்படும் நூல் ஆலைகள் அதிகமான நூல் உற்பத்தி செய்கின்றன. ஆனால், இவை எவ்வளவு பேருடைய கூலியைக் கெடுத்து விடுகின்றனவென்பது யோசித்துப் பார்த்தால் தெரியும்.

சாதாரணமாக 20 அல்லது 25 லட்சம் ரூபா மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நூல் யந்திர ஆலையை எடுத்துக்கொள்வோம். இவ்வாலையில் ஒவ்வொன்றிலும் 400 - ராத்தல் எடையுள்ள 40 - சிப்பம் நூல் உற்பத்தியாகக்கூடும். அதாவது, மொத்தம் 16,000 - ராத்தல் நூல் உற்பத்தியாகலாம். இவ்வளவு நூல் உற்பத்தி செய்யும் ஓர் ஆலை சுமார் 2000 கூலிகளுக்கும் வேலை கொடுக்க முடியும். தலைக்கு 4 அணா முதல் 1 ரூபாய் வரையில் கூலி கிடைக்கும். முதலாளிகளுக்கு 100 - க்கு 50 சதவீதம் வருஷந்தோறும் லாபம் கிடைக்கலாம். ( இதற்கு மேலாகவும் ஆலை முதலாளிகளுக்குச் சில சமயம் லாபம் கிடைத்திருக்கிறது. ) இதனால் ஏழைகளுக்கு ஏற்படும் நஷ்டத்தைப் பற்றி யோசிப்போம். மேற்சொன்ன 16,000 - ராத்தல் நூலும் கிராமத்தில் வேலையில்லாமல் தவிக்கும் ஏழைக் கூலிக்காரர்களைக் கொண்டு கை இராட்டினத்தில் தயார் செய்து கொள்வதா யிருந்தால் ஒரு நாளில் ஒரு ராத்தல் நூலுக்குக் குறைந்தது மூன்று பேர் வேலை செய்ய வேண்டும்.

ராத்தலுக்குக் குறைந்த விகிதம் 4 - அணா கூலி கொடுப்பதாயிருந்தாலும் நபர் ஒன்றுக்கு 1 - அணா 4 - பைசா கிடைக்கும். இப்படியாக 16,000 - ராத்தல் நூல் உற்பத்தியில் 48,000 பேருக்கு 1 - அணா 4- பைசா கூலி கிடைக்கிறது. இவ்வளவு நூலையும் ஓர் ஆலை நூற்றுவிடுவதினால் வேலை செய்யக்கூடிய 46,000 பேருக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது. இவ்வளவு பேருக்கும் கிடைக்கவேண்டிய கூலியில் சிறுபகுதி ஒரு சில வேலைக்காரர்களுக்கும் பெரும்பகுதி முதலாளிகள், அந்நிய நாட்டு இயந்திர வியாபாரிகள் ஆகிய இவர்களுக்கும் போய்விடுகின்றது. மகாத்மாவினுடைய சுயராஜ்யத்திற்குப் பொருள் ஏழைகள் பிழைக்க வேண்டுமென்பதே. முதலாளிகளும், அந்நியநாட்டு இயந்திர வியாபாரிகளும் பொருள் சேர்க்க வேண்டுமென்பது மகாத்மாவினுடைய சுயராஜ்யத்தின் கருத்தன்று. சிலருக்கு உத்தியோகமும், அதிகாரமும் கிடைக்க வேண்டுமென்பதும் அன்று. இந்த அம்சத்தை நாம் மனதிலிருத்திக் கொண்டால் இராட்டை இயக்கத்தின் கருத்தைச் சரியாக அறிந்து கொள்ளலாம்.

ஏழைகளிடத்திலும் கூலிக்காரர் களிடத்திலும் அன்பில்லாதவர்களுக்கு மகாத்மா கூறும் சுயராஜ்யத்தின் பொருள் நன்கு விளங்காது. உத்தியோகமும் அதிகாரப் பதவியும் பொருள் தேடலும் தான் சுயராஜ்யமென்று அவர்கள் கருதுவார்கள். இத்தகைய அபிப் பிராயம் தேசத்தில் பரவக் கூடாதென்பதை மனதிற் கொண்டே மகாத்மா காந்தி காங்கிரஸ் அங்கத்தினருக்கு நூல் நூற்பதை முக்கிய கடமையாக ஏற்படுத்தி யிருக்கிறார். இந்த முக்கிய கடமையை தேசத்தார் ஏகமனதாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கருதியே வேறு சில விஷயங்களில் தமது உறுதியான கொள்கைகளையும் ஓரளவு விட்டுக் கொடுத்திருக்கிறார். நூல் சந்தாவின் முக்கியத்தை நமது ஜனங்கள் கொஞ்சங் கொஞ்சமாக உணர்ந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மாதா மாதம் நூல் சந்தா செலுத்து வோரின் தொகை பெருகிக்கொண்டு வருகிறது. ஆனாலும் மற்ற திட்டங்களில் மகாத்மாவின் அபிப்பிராயத்திற்குத் தமிழ்நாடு எவ்வளவு ஆதரவா யிருந்ததோ அவ்வளவு இவ்விஷயத்தில் ஊக்கங்காட்ட வில்லையென்றே சொல்ல வேண்டும். இனியேனும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாய் இருந்து வருவோமானால் நூல் சந்தாவை எடுத்துவிட வேண்டுமென்று இதற்குள்ளாகவே கூற ஆரம்பித்துவிட்ட சிலருக்கு அனுகூலமாகிவிடும். மற்ற விஷயங்களில் தமிழ்நாடு பெற்றிருக்கும் நற்பெயருக்கும் இதனால் தீங்கு ஏற்பட்டுவிடும். நிற்க, நமது தேசத்தின் நிலைமையில் இயந்திரத்தொழில் ஏன் பொருந்தாது என்பதற்கு ஒரு காரணம் மட்டும் கூறி இதை முடிக்கிறேன்.

இயந்திர மோகமுள்ளவர்கள் தேச முழுவதையும் இயந்திரமயமாக்கிவிட்டால் எல்லா ஏழைகளுக்கும் நல்ல கூலி கிடைக்குமென்று எண்ணலாம். 48,000 பேர் செய்யக்கூடிய வேலையை 2,000 பேரின் உதவி கொண்டு ஓர் இயந்திரம் செய்து விடுவதால் பாக்கி 46,000 பேருக்கும் வேலையில்லாமல் போய்விடுகிறது என்று மேலே கூறினேன். ஆனால், இவர்கள் எல்லோருமே வேலை செய்யும்படி நாட்டில் ஆலைகளைப் பெருக்கி விட்டால் எல்லோருக்குமே நல்ல கூலி கிடைக்குமே என்று நினைக்கலாம். ஆனால் சிறிது யோசித்துப் பார்த்தால் இந்தியாவில் இது அசாத்தியம் என்பது விளங்கும். இங்கிலாந்து போன்ற தேசத்தில் இது சாத்தியமாகக்கூடும். இதற்கும்கூட ஒரு சிறு தேசத்தின் ஆலையில் தயாராகும் துணிகளை வாங்க பெரிய தேசம் ஒன்று இருந்தால்தான் முடியும். இங்கிலாந்தில் ஜனத்தொகை சுமார் மூன்று கோடி. ஆனால், 33 கோடி ஜனத்தொகையுள்ள இந்தியா, இங்கிலாந்தின் சாமான்களுக்கு சந்தையாக இருக்கிறபடியால் இங்கிலாந்து ஜனங்களில் பெரும் பகுதியினர் ஆலைத்தொழிலில் பிழைப்பது சாத்தியமாயிருக்கிறது.

இந்தியா இன்றைய தினம் துணி வாங்க மறுத்துவிட்டால் ஆலைத்தொழில் நிலைமை ஆபத்தாகிவிடும். இங்ஙனமிருக்க 33 கோடி ஜனத்தொகையுள்ள இந்தியாவில் வேலை வேண்டி நிற்கும் கோடிக்கணக்கான ஜனங்கள் ஆலைத் தொழிலில் ஈடுபட்டால் எவ்வளவு துணி உற்பத்தியாகும்? அவ்வளவு துணியையும் விற்பனை செய்யக்கூடிய பெரிய சந்தை நமக்குக் கிடைக்குமா ? என்று யோசிக்க வேண்டும். இந்த அம்சத்தைக் கவனித்தால் நமது நாட்டின் நிலைமையில் கோடிக்கணக்கான ஏழைகளுக்குத் தொழிலளித்துக் காக்கக்கூடிய சாதனம் இராட்டை ஒன்றே என்பது நன்கு விளங்கும்.

குறிப்பு : குடிநூலில் எழுதிய கட்டுரை குடி அரசு - கட்டுரை - 02.05.1925

13 June 2010

குடி அரசு - தலையங்கம் - 02.05.1925

தாய்த்திரு நாட்டிற்கு யாம் இதுகாறும் இயற்றிவரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும் எம்மால் இயன்றளவு ஆற்றி வரல் வேண்டுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறும் பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம். ஒரு சிறு பத்திரிகையையேனும் செவ்வனே நடாத்தும் ஆற்றல் ஒரு சிறிதும் எமக்கில்லை என்பதை நன்குணர்வோம். பேரறிவும், பேராற்றலும், விரிந்த கல்வியும், பரந்த அனுபவமும் உடையவர்களே இத்தொண்டினை நடத்தற்குரியார். இவ்வருங் குணங்கள் எம்பால் இல்லாமல் இருந்தும் ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற பெரியார் வாக்கை கடை பிடித்தே வலிமையால் இப்பத்திரிகை நீண்டகாலம் இத்தமிழுலகில் நிலவித் தேசத்தொண்டு ஆற்றி வரும் என்னும் நம்பிக்கையும், உறுதியும் பெரிதுமுடையோம்.

இஃதோர் பத்திரிகை யுகமாகும். நமது தமிழ்நாட்டில் நாளடைவில் பத்திரிகைகளின் தொகை பெருகிக்கொண்டே வருகிறது. இதுகாறும் எத்துணையோ பத்திரிகைகள் தோன்றின ; அவைகளுள் சிறிதுகாலம் நின்று மறைந்தொழிந்தன சில; நின்று நிலவுகின்றன பல. பத்திரிகைகள் பல தோன்றுவதற்குக் காரணம் தமிடிநமக்கள் உலகியலை அறிய உளங் கொண்டமையேயாகும். ‘கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்’ என்ற குறுகிய நோக்கம் அருகி வருகின்றது. ‘இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டா லென்ன’ என்று எண்ணி வாடி நாட்களை வீண் நாட்களாக்கி வந்த காலம் கழிந்துவிட்டது. உறங்கிக் கிடந்த நமது நாட்டார் புத்துயிரும், புத்துணர்ச்சியும் பெற்று நாட்டின் விடுதலையைக் கருதிப் பல துறைகளிலும் உழைக்க முன்வந்து நிற்கிறார்கள். அவ்வுணர்ச்சி நன்றாக வேரூன்றி, மேன்மேலும் தழைத்தோங்க ஒவ்வொருவரும் பாடுபடல் வேண்டும். இக்கடனை ஆற்றப் பல வழிகள் உண்டு. அவைகளுள் பத்திரிகையும் ஒன்றாகும். மேனாட்டார் மேன்மையுற்று விளங்குவதற்குக் காரணம் அந்நாடுகளில் ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் வெளிவந்து உலவுவதேயாகும். அந்நாடுகளில் ஒவ்வொரு பத்திரிகைக்கும் பல்லாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் இருக்கின்றார்களென்றும், பத்திரிகை நுழையாத சிறு குடிசைகளும் இல்லையென்றும் நாம் அந்நாட்டுச் சரித்திரங்களில் காண்கிறோம். தமிடிந மக்களின் தொகையை நினைக்கின், இப்பொழுது உலவி வரும் பத்திரிகைகள் மிகக் குறைவாகவே தோன்றும். இன்னும் பல பத்திரிகைகள் காணப்படல் வேண்டும்.

ஆகையினால் எமது பத்திரிகையை மிகையென்று கருதமாட்டார்களென நம்புகிறோம். எமது பத்திரிகையின் நோக்கத்தையறிய விரும்புவார்க்கு நமது தமிழ்நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்வதேயாகும் எனக் கூறுவோம். நமது நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், சமய வளர்ச்சிக்காகவும் இதன் வாயிலாக இடையறாது உழைத்து வருவோம். ஆயிரக்கணக்காக பொருள் செலவிட்டு கட்டிய அத்திவாரம் பலமில்லாவிடில் இடிந்து விழுந்து அழிந்து போவதேபோல், ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனி மனிதன், குடும்பம், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு வகுப்பு, பல வகுப்புக்களாலாகிய கிராமம் ஆகிய இவைகள் எல்லாத் துறைகளிலும் மேன்மையுறாவிடின் அத்தேசம் ஒருநாளும் முன்னேற்றமடையாது. ஆகையினால், நமது தேசம் சுதந்திரம் பெற்று எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கவேண்டுமாயின் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தனது அறிவையும், ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்; ஒவ்வொரு தனிக் குடும்பமும் நந்நிலையடைய வேண்டும்; ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற்றமடைதல் வேண்டும்; ஒவ்வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங்களினுடையவோ, நாடுகளினுடையவோ உதவியை எந்நாளும் எதிர்பார்த்து நிற்காத வண்ணம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமெய்தி தனித்தியங்கும் பெருமையைஅடைதல் வேண்டும். அடிப்படைகளான இவைகளை அறவேவிடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று. ஆகவே, இவ்வடிப்படைகளின் வளர்ச்சிக்கான முறைகளில் இடையறாது உழைத்து வருவதே எமது கொள்கையாகும்.

மக்களுக்குள் தன்மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும் ; மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும். உயர்வு, தாடிநவு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்துவரும் சாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும். சமயச்சண்டைகள் ஒழியவேண்டும்; கடவுளர்களை நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்லும் இழிதகைமை தொலையவேண்டும். இன்னோரன்ன பிற நறுங்குணங்கள் நம்மக்கள் அடையப் பாடுபடுவதும் எமது நோக்கமாகும்.

இதுகாறும் விதந்தோதிய நோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றியே ஒழுகுவோம். அன்பு நெறியே எமக்கு ஆதாரம். பொய்ம்மை நெறியையும், புலையொழுக்கத்தையும் எமது அன்பு நெறியால் தகர்த்தெறிவோம். இவர் எமக்கு இனியர், இவர் எமக்கு இன்னார் என்ற விருப்பு வெறுப்புக்கள் இன்றிச் செம்மை நெறி பற்றி ஒழுகி எம்மாலியன்ற தேசத் தொண்டாற்றி வருவோம். “நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற் சென்றிடித்தற் பொருட்டு” எனும் தெய்வப் புலமை திருவள்ளுவரின் வாக்கைக் கடைபிடித்து, நண்பரேயாயினுமாகுக ! அவர்தம் சொல்லும், செயலும் தேச விடுதலைக்குக் கேடு சூடிநவதாயின் அஞ்சாது கண்டித் தொதுக்கப்படும். மேற்கூறிய உயரிய நோக்கங்களைத் தாங்கித் தாய்த்திருநாட்டிற்குத் தொண்டியற்ற வெளிவந்துள்ள எமதருங்குழவியைத் தமிழ் மக்கள் அனைவரும் முழு மனதுடன் ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடையோம்.

இப் பத்திரிகையின் வருடச் சந்தா ரூபா மூன்றே தான். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று வெளிவரும். இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்குப் போதிய அறிவையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள் பாலிப்பானாக.

குடி அரசு - தலையங்கம் - 02.05.1925,

நன்றி: பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி – 1, பெரியார் திராவிடர் கழகம் வெளியீடு.

குடி அரசு 28 நூல் தொகுதிகள்

பெரியார் எழுதிய, பேசிய கருத்துக்கள் பெரும் பகுதி கிடைக்காமலிருந்தது. குடி அரசு இதழில் பெரியார் 1925 முதல் 1938 வரையில் எழுதிய கட்டுரைகள் மற்றும் பேச்சுக்களை 2000 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் உழைத்து, சட்டப் போராட்டம் நடத்தி பெரியார் திராவிடர் கழகம் 28 தொகுதிகளாக நூல் வெளியிட்டுள்ளது. இந்த சிறந்த முயற்சியில் பல இலட்சம் ருபாய்களை அவர்கள் இழந்திருக்கிறார்கள். பெரியார் கருத்துக்கள் அடுத்த தலைமுறையினர் அனைவருக்கும் செல்ல வேண்டும் என்ற அவர்களது நோக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்க குடி அரசு தொகுதிகளை வாங்கி படியுங்கள்.

பெரியாரது சிந்தனை எல்லா காலகட்டத்திலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. காலத்திற்கும், சூழலுக்கும் அவரது போரட்ட பயணத்தின் தேவைக்கும் ஏற்ப மாற்றம் பெற்று பெரும் சமூக மாற்ற இயக்கமாக உருமாறிருக்கிறது. அவற்றை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள குடி அரசு தொகுப்பை படிப்பவர்கள் உணர முடியும். இந்நூல்களை சிறப்பாக கடும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு வெளியிட்டுள்ள பெரியார் திராவிடர் கழகத்தினருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

குடி அரசு தொகுதியிலுள்ள கட்டுரைகள் மற்றும் உரைகள் அனைவருக்கும் சென்று சேரும் விதமாக இவ்வலைப்பதிவில் வெளிவரும்.