30 August 2006

பெரியார் சிலைக்கு சந்தனம்: 2 சிவசேனா கட்சியினர் கைது

பெரியார் சிலைக்கு சந்தனம்: 2 சிவசேனா கட்சியினர் கைது
ஆகஸ்ட் 30, 2006

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் பெரியார்சிலைக்கு சந்தனம் பூசிஅவமரியாதை செய்த சம்பவம் தொடர்பாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள பெரியார் சிலைக்கு சந்தனம் பூசியும், மாலை அணிவித்தும், சூடம் ஏற்றி, ஊதுவத்தி கொளுத்தியும் அவமரியாதை செய்யப்பட்டது. இதனால் தி.க.வினர் கடும்ö காந்தளிப்படைந்தனர்.

சட்டசபையிலும்இப்பிரசிசனை எதிரொலித்தது. இந்தசெயலில் ஈடுபட்டவர்கள் பன்றிக் குணம் படைததவர்கள் என்று முதல்வர் கருணாநிதி காட்டமாக பதிலளித்தார். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரும் சிவசேனை கட்சியைச் சேர்ந்தவர்கள். திண்டுக்கல்லில் மணிமாறன் என்பவரை முதலில் நேற்று இரவு போலீஸார்பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட சிவசேனா செயலாளரான தர்மராஜாஎன்பவரை பல்லவ நாயக்கன்பட்டி என்றகிராமத்தில் வைத்து போலீஸார்கைதுö சய்தனர்.

தர்மராஜா மீது ஏற்கனவே தி.க. பிரமுகர் ராஜேந்திரன் என்பவரை அரிவாளால் வெட்டியது உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: http://thatstamil.oneindia.in/news/2006/08/30/periyar.html

பெரியார் சிலையும் இராமனுக்கு செருப்பு மாலையும்

தமிழகத்தின் திண்டுக்கல்லில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு ஆளரவமற்ற இரவுப்பொழுதில் நெற்றிப்பட்டை, மாலையிட்டு, திரி கொழுத்தி வைத்து மகிழ்ந்திருக்கிறது வக்கிர செயல் பிடித்த கூட்டமொன்று அவரவரது வக்கிரங்களின் அளவிற்கேற்ப இந்த இழிசெயலை ஆதரித்து தன் மன வக்கிரங்களை பதிவிலேற்றி. சக வலைப்பதிவாளர்களும் மகிழ்கின்றனர். பெரியார் மீது ஏன் இந்த வக்கிரம்?

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கடவுள், வேதம், சாத்திரம், ஆச்சாரம், ஆகமம், பூசணிக்காய் என மக்களை அடிமைப்படுத்திய கூட்டத்தை, அதன் கருத்தியலை துணிந்து எதிர்த்து உடைத்தெறிந்தவர் தந்தை பெரியார். கடவுள் இல்லை, கடவுளை நம்புபவன் முட்டாள், கடவுளை பரப்புபவன் அயோக்கியன் என்று வெளிப்படையாக பேசி தான் தனது உரையையே துவக்கியவர் அந்த அறிவு மேதை. கடவுள் என்ற பெயரில் காட்டுமிராண்டி உலகத்தை விட கேவலமான சாதி அடிமைத்தனத்தை வகுத்து, அதை கட்டிக்காத்து மக்களை அடிமையாக்கிய பார்ப்பனீயத்தையும் அதன் ஆணிவேரையும் அசைத்தன பெரியாரின் வைக்கம் கோவில் நுளைவு போராட்டம்.

நம்பூதிரி என்று அழைக்கப்படுகிற கேரள பிராமணர்களால் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதியாது தடுத்து, வீதிகளில் கூட மனிதனாக நிமிர்ந்து நடக்க விடாமல் அடக்குமுறை நடத்திய அவல நிலையை அகற்ற ஈரோட்டு சிங்கம் தந்தை பெரியார் கிழர்ந்தெழுந்தார். போராட்டம் வலுபெற்றதும் அதன் முடிவில் பார்ப்பனீயம் ஆட்டம் கண்டது. அதனால் தான் வைக்கம் வீரர் பெரியார் என அழைக்கப்பட்டார். இன்றும் அந்த கேரள வாழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரியார் தலைவர் என்பது வரலாறு.
அதன் தொடர்ச்சியாக அவர் கண்ட களங்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மகக்ளின் விடுதலையை, விடியலை, சமூக சமநிலையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு சுழன்றது. இறப்பிற்கு முந்தைய நாள் வரை தான் கொண்ட கருத்தை, கொள்கையை உறுதியாக உரக்க உரைத்து தமிழர்களின் வாழ்வில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். தனது தொன்னூற்றி ஐந்தாம் வயதில் கூட மூத்திரப்பையை ஒரு கையில் சுமந்த படி நோயிலும் சுழன்று சூரியனாய் மூடக்கருத்துக்களை எதிர்த்து அடக்குமுறையாளர்களுக்கு சவாலாக இருந்து பார்ப்பனரல்லாத மக்களின் காப்பரணாக விளங்கிய மாமனிதர் அவர். தனது சொந்த பணம் சொத்து அனைத்தையும் அறிவுக்கருத்துக்களை பரப்ப செலவிட்டவர். தனது பயணங்களை மிக மிக சிக்கன செலவில் நடத்தி அடித்தட்டு மக்களின் பள்ளிக்கூடங்களாக அறிவு மிகுந்த சொற்பொழிவுகளால் மாலை நேர பொதுக்கூட்டங்கள், பாசறைகள், பத்திரிக்கைகள் என பன்முக பிரச்சாரத்தை சொந்த பணத்தில் நடத்திய உன்னத மனிதர்.

ஒரு வலைப்பபதிவில் பின்னூட்ட நாயகர் ஒருவர் உமிழ்ந்தது //ராமசாமி நாய்க்கருக்கு சிலை வச்சதே அந்த ஆளாட கொள்கைக்கு விரோதம், அப்புறம் அதுக்கு என்ன செஞ்சா இவனுகளுக்கு என்ன?ஊருக்கு ஒரு பத்து பேரு இருந்துகிட்டு இவனுக சவுண்டு தாங்கல.எல்லாம் ரிடயர் ஆகி மண்டைய போடுற வரைக்கும் இப்படியே தான் கம்பத்துல கட்டி வச்ச நாய் மாதிரி - ஒரே சவுண்டா இருக்கும்.//

பார்ப்பனீய திமிர் பிடித்து இன்றும் சாதி அடைமொழியிட்டு தான் மனிதனை அழைப்போம் என்பவர்களை என்னவென்பது? என்ன படித்து என்ன பயன்? பார்ப்பனீயம் இரத்த நாளமெங்கும் சுரக்கும் வரை இவர்களது சாதி வெறி அடங்கப்போவதில்லை. பெரியாருக்கு சிலை வைப்பது அவரது கருத்துக்களுக்கு எதிரானது என இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து புதையல் கிடைத்ததோ? இது விடயத்தில் பெரியார் கருத்துக்களுக்கு காவல்காரர்கள் போல முகமூடியணிவது இவர்களது பார்ப்பனீய சாயம் வெளுக்கிறது என்பதன் அடையாளமே. கலைஞர் கருணாநிதிக்கு அண்ணாசாலையில் சிலை வைக்க காரணமாக இருந்தது தந்தை பெரியார் என்பதும், அறிவு மேதை சாக்கிரட்டீஸ் சிலை அருகில் நின்று தன்னை படம் பிடித்து, தானும் சாக்கிரட்டீஸ் போல அறிவுக்கருத்துக்களை பரப்புபவர் எனபதை அறிவித்ததும் இவர்களுக்கு புரியுமா? ஊர்வன, பறப்பன என பல வடிவங்களில் சிலை வடித்து கட்டுக்கதைகளை உருவாக்கி மக்களை விலங்குகளை விட கேவலமாக்கிய மூடத்தனத்தை எதிர்த்தவர் பெரியார். ஒட்டு மொத்தமான சிலைகளின் எதிர்ப்பாளரல்ல என்பதை பெரியாருக்கு சிலை சரியானதா என வினவுபவர்கள் சரிவர புரிந்து கொள்ளட்டும்.

இராமன் சிலைக்கு செருப்பு மாலையிட்டார் பெரியார் இது ஒன்றும் இரகசியமல்ல. நீதிமன்ற வழக்காகி, பெரியாரே அந்த வழக்கில் வாதாடினார் எதற்காக இராமனுக்கு செருப்பு மாலையிட்டார் என நீதிமன்றத்திலேயே தெளிவுபடுத்தினார். தான் செய்த செயலை ஒப்புக்கொண்ட வல்லமை படைத்தவர் பெரியார். எதற்காக இராமனுக்கு செருப்புமாலை? தமிழ் மக்களை அடிமைப்படுத்திய பார்ப்பனர்களது ஆரிய் அடையாளமான இராமனுக்கு செருப்பு மாலையிட்டார் பெரியார். தமிழ் மன்னர் இராவணனை கொடியவனாக சித்தரித்த கட்டுக்கதையான ஆரிய படைப்பான இராமாயணத்தையும் அதனுள் இருக்கும் ஆரிய சூழ்ச்சியையும் எதிர்த்தவர் பெரியார். இராவணனை பொம்மை உருவாக செய்து இழிவுபடுத்தி கொழுத்தி மகிழ்ந்த ஆரிய லீலா கூத்தை எதிர்க்கும் விதமாக இராமனுக்கு செருப்பு மாலையணிந்தார் பெரியார். இது ஒன்றும் இரகசியமல்ல. நாட்டார் வழக்கியல் தெய்வங்களுக்கு பெரியார் செருப்பு மாலையிட்டாரா? இல்லையே ஏன்? பார்ப்பனீய எதிர்ப்பின் ஒரு அம்சமாகவே பெரியாரின் செருப்பு மாலை போராட்டம் அமைந்திருந்தது.

பெரியார் இந்துக்களை அவமதித்தார் என கூக்குரலிடுபவர்கள் பதில் சொல்லுங்கள், ஆதிக்க சாதியினரும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களும் சமமா? அப்படியெனில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசு ஆணை வந்ததும் ஏன் இவ்வளவு ஆர்ப்பட்டம்? கோயிலில் நீ உயர்சாதியா, மற்றவர்கள் இழிந்த சாதியினரா? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகி வழிபாடு நடத்தினால் சாமிக்கு கோபம் வந்து கைலாயத்துக்கு போய் விடுமா? இறைவன் முன் அனைவரும் சமம் என்கிற தத்துவங்கள் பிறந்த உலகில் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதி மட்டுமே கோயிலில் வழிபாடு நடத்தலாம் என்கிற வெங்காயங்களை என்ன என்று சொல்வது? இப்படி இருக்கையில் நீயும் நானும் அவனும் இந்து என்பது மோசடி இல்லாமல் வேறு என்ன?

பெரியார் சிலைக்கு வணக்கம் தானே செய்திருக்கிறார்கள் மகிழுங்கள் என்கிற அடக்கமான நடுநிலைவாதிகளுக்கு; சரித்திரத்தில் பார்ப்பனீயம் இப்படி சீர்திருத்தத்திற்காக போராடியவர்களை கடவுளின் அவதாரம் என பார்ப்பனீய தத்துவத்தில் உள்ளடக்கி நீர்த்து போக வைத்த வரலாறு மறந்திருக்கலாம். புத்தர், நந்தனார், நாராயணகுரு, முத்து குட்டி சாமி என அந்த மாமனிதர்களின் பட்டியல் நீளமானது. தனக்கு எதிராக புரட்சி செய்பவர்களை அவதாரமாக்கிவிட்டால் அவர்களது கொள்கை, போராட்டம் மறைக்கப்படும் என்பது பார்ப்பனீய தந்திரம். அந்த தந்திரத்தை பெரியார் விடயத்தில் சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்த முயல்கிறார்களா? அது பெரியார் விடயத்தில் வெற்றியடைவது அவ்வளவு எளிதானதல்ல என்பதை காலம் உணர்த்தும்.

எந்த கருத்தியலை பெரியார் எதிர்த்தாரோ அந்த கருத்தியல் கொண்ட அடக்குமுறையாளர்களின் பாசிச் வக்கிரங்கள் தான் இன்று திண்டுக்கல்லில், வலைப்பூக்களில் என எதிரொலிக்கின்றன என்பதில் வியப்பில்லை. பகுத்தறிவு இயக்கம இப்படிப்பட்ட 'வேடமிட்டு அலைகிற அதிமேதாவிகளை' சந்தித்து தான் வளர்ந்தது. இந்த இழிசெயல் புரிபவர்களையும் அவர்களுக்கான இடத்தில் அனுப்பி வைக்குமென தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த வக்கிரத்தையும் பகுத்தறிவு இயக்கங்கள் சந்திக்கும். சிலையாகியும் பார்ப்பனீயத்தை பதற வைக்க பெரியாரால் முடிகிறது. அந்த விதத்திலும் அய்யா பெரியார் தான்!

திரு

29 August 2006

பெண் உரிமை பற்றி பெரியார்- இறுதி பகுதி

பெண்களை வீட்டுவேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள். (கு.8.3.36;14:3)

இன்று நம்முடைய சமுதாயத்திற்கு இருக்கும் குறைகளுக்கும் அவமானத்திற்கும் நம் மூடநம்பிக்கைகளே காரணமாகும். அதுவும் நம் தாய்மார்களிடம் இவ்வளவு இருக்குமானால் பிறகு அவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளின் நிலை என்னாவாகும்?எந்தச் சீர்திருத்தமும் பெண் மக்களிடம் இருந்து வந்தால் அதற்கு வலிவு அதிகம். (கு.27.10.40;3:3)

இன்றையப் பெண்கள், வெறும் அலங்காரத்தோடு திருப்தியடைந்து விடுகிறார்கள், அல்லது திருப்தி செய்யப்பட்டு விடுகிறார்கள். எனவே இவர்களுக்கு விடுதலை வேட்கை பிறப்பது அரிதாயிருக்கிறது. (வி.26.5.58;1:பெ,செ.)

குழந்தை மணம் ஒழிந்து, திருமண ரத்து, விதவைமணம்,கலப்புமணம், திருமண உரிமை ஆகியவைகள் இருக்குமேயானால் இன்றுள்ள விபசாரத்தில் 100-க்கு 90 பகுதி மறைந்து போகும். (வி.21.3.50;பெ.செ.)

பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம், ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கின்றாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதனால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருசுபடுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின்றார்கள். அன்றியும், அப்பிள்ளை பெறும் தொல்லையால் அவர்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம்ஏற்பட இடமுண்டாகி விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும். (கு.12.8.23;10:3)

16 August 2006

பெண் உரிமை பற்றி பெரியார்-பாகம்4

தாலி கட்டுவதென்பது அன்று முதல் அப்பெண்ணைத் தனக்கு அடிமைப் பொருளாக ஏற்கிறான் என்பதும், அப்பெண் அன்று முதல் ஆணுக்கு அடிமையாகி விட்டாள் என்பது மான கருத்தைக் குறிப்பதற்குத்தான். இதன் காரணமாக் கணவன் மனைவியை என்ன செய்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை, கணவன் தவறான முறையில் நடந்தால் அவனுக்குத்தண்டனையும் கிடையாது. (வி.15.4.61;1:பெ.செ)

இன்றையப் பெண் எவ்வளவோ கல்வியும் செல்வமும் நாகரிக அறிவும் கவுரவம் உள்ள சுற்றத்தாருக்குள்ளும் சகவாசத்துக்குள்ளும் இருந்துவந்தும், மிகப் பழங்காலப் பட்டிக்காட்டுக் கிராமவாசிப் பெண்களைவிட இளப்பமாய் நடந்து கொள்வதைப் பார்த்தால், நமக்கு எவ்வளவு சங்கடமாய் இருக்கிறது? இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர்களால் வளர்க்கப்பட்டால், அவற்றிற்கு மனிதத்தன்மை எப்படி ஏற்படும்? (பெ.சி.மி.187)

நமக்கு பெண்கள் தங்களைப் பிறவி அடிமை என்று நினைத்துக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும். (வி.22.3.43;3:4)

பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிகமிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள், எதிர்காலத்தில் “இவள் இன்னாருடைய மனைவி” என்று அழைக்கப்படாமல், “இவன் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்பட வேண்டும்.(கு.5.6.48;14:2-3)

கணவனின் அளவுக்கு மீறிய அன்பையும், ஏராளமான நகையிலும் புடவையிலும் ஆசையையும், அழகில் பிரக்கியாதி பெறவேண்டுமென்ற விளம்பர ஆசையையும் பெற்ற பெண்களும், செல்வத்தில் புரளும் அகம்பாவப் பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்துவிடுவார்களே ஒழிய, சீர்திருத்தத்திற்குப் பயன்படமாட்டார்கள். (கு.29.9.40;15:3)

தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்துகொள்வதையும், நைசான நகைகள் போட்டுக்கொள்வதையும் சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும் தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர-ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை. (வி.11.10.48;3:2)

சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரை யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால் முதலில் நமது பெண்மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களே. அக் குழந்தைகளுக்கு 6,7 வயது வரையில் தாய்மார்களேதான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். (கு.1.5.27;5:3)

இந்து மதத்தின் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களாயிருந்தும் இந்துமதக் கொள்கையின்படி பெண்களுக்கு கல்வியும் சொத்துக்களும் இருக்க இடமில்லையே ஏன்?(கு.3.11.29;8)

(தொடரும்)

13 August 2006

பெண் உரிமை பற்றி பெரியார்-பாகம்5

ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம்: எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம் என்கின்ற முறையே, விபச்சாரம் (பாலியல் தொழில்) என்னும் பிள்ளையைப் பெற்றெடுக்கின்றது. (கு.16.6.35;8:2)

மற்றவர்கள், பெண்களின் உடல் நலத்தை உத்தேசித்தும் குடும்பச் சொத்து குறையாமல் இருக்கவேண்டுமென்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியம் என்று கூறுகின்றார்கள். பெண்கள் விடுதலையடையவும் சுயேச்சைபெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். (கு.6.4.30;10:9)

பெண்ணைக் கொல்ல ஆணுக்கு உரிமை இருந்தால் ஆணைக் கொல்லப் பெண்ணுக்கும் உரிமை வேண்டும். ஆணைத் தொழுதெழ பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால், பெண்ணைத் தொழுதெழ ஆணுக்கும் நிபந்தனை இருக்க வேண்டும். (கு.12.2.28.13.3)

ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன், என்றும் விடுதலை பெறமுடியாத கட்டுப்பாடுகள், பலப்பட்டுக் கொண்டு வருகின்றன, பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சிகளே ஒழிய வேறல்ல. எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா? (கு.12.8.28;10:1-2)

(தொடரும்)

12 August 2006

பெண் உரிமை பற்றி பெரியார்-பாகம்3

ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான். (வி.24.6.40;3:4)

ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் ஒரு பண்ணை - ஓர் ஆணின் கண் அழகிற்கு ஓர் அழகிய - அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். (கு.21.7.46;2:2)

பெண்மக்கள் அடிமையானது ஆண்மக்களால்தான். ஆண்மையும் பெண் அடிமையும்கடவுளாலேயே ஏற்பட்டதாக எல்லா ஆண்களும் கருதுவதும், பெண்கள் அதை உண்மையென்று பரம்பரையாக நினைத்துக் கொண்டிருப்பதும்தான் பெண் அடிமைத்தனம் வளர்வதற்குக் காரணமாகும். (வி.14.2.61;1:பெ,செ.)

திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே, அதில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் சம தோற்றம், சம அன்பு, ஒத்த அறிவு, கல்வி ஒற்றுமை இருக்குமா என்று கருதுவதில்லை. அதற்கு மாறாக, நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு நல்ல அடிமையாக இருக்குமா என்ற கருத்தில், மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையே தான் பெண்கள் பிரச்சினையிலும் பார்க்கிறார்கள்.(வி.5.4.61;1:பெ.செ.)

பெண் உரிமை பற்றி பெரியார்-பாகம்2

பெண்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியும், உலக நடப்புக் கல்வியும், தாராளமாகக் கொடுத்து, மூட நம்பிக்கை, பயம் ஆகியவற்றை ஊட்டக்கூடிய கதைகளையோ, சாத்திரங்களையோ, இலக்கியங்களையோ காணவும் கேட்கவும் சிறிதும் இடமில்லாமல் செய்ய வேண்டும். (வி.22.3.43;4:2)

பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும் சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும். (பெ.சி.மி:170)

ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது மொழிகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம், ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை. (கு.8.1.28;6:3)

கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும். (கு.8.1.28;15:1)

பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது? (பெ.க.மு.தொ;134)

பெண்களுக்குத்தான் கற்பு: ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால்,பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை. (கு.1.3.36;11:3)

நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா? (வி.1.6.68;3:5)

சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ''ஆண்மை''க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன. ''ஆண்மை''க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.உலகத்தில் இந்த “ஆண்மை” மேலோங்கி நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலன்றி பெண்களுக்கு விடுதலையில்லை என்பது உறுதி. (கு.12.8.28;10:2)

தொடரும்...

பெண் உரிமை பற்றிய பெரியார் மொழிகள்...

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.(கு3.11.79;8)

பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?அவர்களுக்கு அறிவு இல்லை. ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகத்தான். கு.16.11.30;7)

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள், ஆனால் ஆண்களோ, பெண்களைப் பிறவிமுதல் சாவுவரை அடிமையாகவும் கொடுமையாகவுமே நடத்துகிறார்கள். (கு.8.2.31;12:2-1)

இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் வேதனையையும், இழிவையும், அடிமைத்தனத்தையும்விட மிக அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள். (கு.28.4.35;5:1)

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சிபெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது. (கு.16.6.35;7:3)

தொடரும்...

பெரியார் பற்றி யுனெஸ்கோ!

பெரியார், புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை. அறியாமை, மூட நம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் மட்டமான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி...

யுனெஸ்கோ 27-6-1970

பெரியாரின் வார்த்தைகளில் அவரைப் பற்றி...

ஈ.வே.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

அந்த தொண்டு செய்ய எனக்கு "யோக்கியதை" இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதை தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாக கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத் தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகின்றேன்.

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகின்றேன்.


ஈ.வே.இராமசாமி

பெரியார் வலைப்பூவின் நோக்கம்!

வலைப்பதிவு நண்பர்களுக்கு வணக்கம்!

இணையத்தில் வலைப்பூ வழியாக பெரியார் கருத்துக்கள், பெரியார் பற்றிய பதிவுகளை பதிவு செய்து இளைய தலைமுறைக்கு சேர்க்கும் முயற்சியாக இந்த வலைப்பூவை துவங்குகிறேன். இந்த முயற்சியில் இணைய விருப்பமுள்ள நண்பர்கள் இணைந்து கொள்ள வரவேற்கிறேன்.

அன்புடன்,

திரு