02 February 2008

இந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா? - பெரியார்

இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது. "இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்' என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில் தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவது தான் இந்தியின் தத்துவம். எனவே தான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு பேர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால், இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். என்ன விலை கொடுத்தேனும், நாம் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். இது கடைசிப் போராட்டம் வெற்றி அல்லது தோல்வி, இரண்டிலொன்று பார்த்துவிடத்தான் வேண்டும்.

இந்தியில் மெச்சத் தகுந்த கலைகளே கிடையாது. அதிலுள்ள கலைகள்யாவும் துளசிதாஸ் ராமாயணமும், கபீர்தாஸ் சரித்திரமுந்தாம்; மநுதர்மமும், பாகவதமும்தான். இவற்றின் தன்மைதான் தெரியுமே உங்களுக்கு. இந்தி மொழி தலைசிறந்த அறிஞர்களைப் பெற்றெடுக்கவில்லை என்று திரு.வி.க. அவர்கள் குறிப்பிட்டார். இந்தி உற்பத்தி செய்த அறிவாளிகள் யார் என்றால், நோகாமல் பதவிக்கு வந்த நேருவையும், அவருடைய அய்யாவையுந்தான் குறிப்பிட வேண்டும். அவர்களது தியாகம் இன்று அந்தக் கூட்டம் குடும்பத்தோடு கொள்ளையடிப்பது (உங்களுக்குத் தெரிந்ததுதான்); வேறு ஆட்களைக் குறிப்பிட முடியாது. தமிழ் மொழியோ எண்ணற்ற கலைகளையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சித்தர்களையும், முத்தர்களையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியில் கலை இல்லை; காவியம் இல்லை; நீதி நூல் இல்லை. அம்மொழி மூலம் அறியக் கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை. ஆகவே, 100க்கு 97 போர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? இங்குள்ள பார்ப்பன கோஷ்டியார், இத்திராவிட நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து, இந்நாட்டை வடநாட்டுக்கு வால் நாடாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் மர்மமே ஒழிய ‘இந்தி தேசிய மொழி; ஆகவே, எல்லோரும் படிக்க வேண்டும்' என்று கூறுவதெல்லாம் பித்தலாட்ட வார்த்தைகள். இந்தி தேசிய மொழியாயின், எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகக் கண்டிப்பாகக் கூறிவிடட்டுமே! இந்தி அல்லது சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே, அது ஏன்? இந்தி தேசிய மொழியா? அல்லது சமஸ்கிருதம் தேசிய மொழியா? நீங்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது. ‘கன்னிகாதானம்' என்பதை வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று மாற்ற எவ்வளவு சிரமப்பட இருந்தது? ‘மாங்கல்ய தாரணம்' என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருந்தது? மற்றும், தேவை இல்லாத சடங்குகளை, புராண இதிகாசக் குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக் கடவுள் இவற்றின் மீதும் இருந்த மூடநம்பிக்கையையும், மூட பக்தியையும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது? இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களா?

சூத்திரன் என்ற வார்த்தையைக் கைவிட்டு ‘திராவிடன்' என்று பெருமிதத்தோடு கூறிக்கொள்ளும் நீங்கள், மறுபடி சூத்திரனாக மாற விருப்பம் கொள்வீர்களா? இந்த முற்போக்கைக் கண்டு அஞ்சும் பார்ப்பனக் கூட்டம் வட நாட்டாரின் கூலிகளாகி, அவர்களுக்கு வால்பிடித்து நம்மவர் சிலரை விபீஷணர்களாக்கிக் கொண்டு, தேசிய மொழி என்ற போரால் நம்மீது வடமொழியைச் சுமத்துகிறது என்றால் நம்மை, நம் நாட்டை வட நாட்டாருக்குக் காட்டிக் கொடுக்கிறதென்றால் நாம் அதற்கு இடங்கொடுக்கலாமா?

தோழர்களே! தாய்மார்களே! திராவிடர் - ஆரியர் போராட்டம், அதுவும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையறாது இருந்துவரும் இப்போராட்டம், இன்று ஒரு முடிவான கட்டத்திற்கு வந்துவிட்டது. இதை முடித்து வைப்பது நமக்குப் பெருமையுங்கூட. நமது பின் சந்ததியார் போற்றிப் புகழக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பத்தில் நாம் இன்று இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பின் சந்ததியரால் எள்ளி நகையாடப்படுவோம் என்பதோடு, அவர்களின் துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் நாமே காரணபூதர்களாகவும் ஆகிவிடுவோம்.

(பெரியார் ஈ.வே.ரா அவர்கள் சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவு)

10 comments:

சுந்தரவடிவேல் said...

நன்றி திரு. வார்த்தைகளை அவர் நேர்த்தியாகச் செதுக்கியிருக்கிறார்.

thiru said...

சுந்தரவடிவேல்,

மொழி மக்களை அடிமைப்படுத்தும் கருவி, விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் மொழி விடுதலை அடிப்படை என்பதை எளிதாக புரிய வைக்கிறது இந்த சொற்பொழிவு.

பெரியார் இவற்றை பேசி 60 ஆண்டுகளாகின்றன. இன்றும் இவை மிக பொருத்தமான கருத்துக்கள். சொற்களின் பின்னால் இருக்கிற அரசியலையும்/ஆதிக்கத்தையும் ஆராய்ந்து கவனமாக அதற்கு எதிரான அரசியலையும் மாற்றையும் முன்னெடுத்து நிறுவியதில் பெரியார் வெற்றியடைந்திருக்கிறார்.

Anonymous said...

1965ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது அவர் எழுதியதையும் சேர்த்து எடுத்துப் போடுவீர்களா. பெரியார் ஒரு காலத்தில் இந்தி திணிப்பினை எதிர்த்தார், 1965ல் ஆதரித்தார். ஏன்
இந்த முரண்பாடு என்பதையும்
விளக்குவீர்களா.2008ல் இந்தி திணிப்பு இருக்கிறதா. இல்லையெனில் அன்று சொன்ன கருத்து எப்படி இன்றும் பொருந்தும்.ஆம் இந்தி திணிக்கப்படுகிறது என்றால் பெரியாரின்
அரசியல் வாரிசுகள் என்ன செய்கிறார்கள்.

சம்பூகன் said...

ஆதிக்க விலங்கொடிக்கும் பெரியாரின் பேச்சினை இங்கு பதிந்தமைக்கு நன்றி திரு.

கால‌த்திற்கேற்ற ப‌திவு.

ச‌ம்பூக‌ன்

thiru said...

// Anonymous said...
1965ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது அவர் எழுதியதையும் சேர்த்து எடுத்துப் போடுவீர்களா. பெரியார் ஒரு காலத்தில் இந்தி திணிப்பினை எதிர்த்தார், 1965ல் ஆதரித்தார். ஏன்
இந்த முரண்பாடு என்பதையும்
விளக்குவீர்களா.//

அன்பு அனானி,

இரு வேறு காலங்களில் பெரியார் இரு நிலைபாடு கொண்டதாக குறிப்பிடுகிறீர்கள். அது சம்பந்தமான பெரியாரின் முழு பேச்சு/கட்டுரையை நீங்கள் தாராளமாக இங்கேயே அதன் மூலத்தையும் குறிப்பிட்டு பதியுங்கள். உங்களுடன் இதுபற்றி உரையாட தயாராகவே இருக்கிறேன். இல்லையென்றால் வெறும் வசவு பாடும் முயற்சியாக மட்டுமே கருத வாய்ப்புண்டு.

//2008ல் இந்தி திணிப்பு இருக்கிறதா. இல்லையெனில் அன்று சொன்ன கருத்து எப்படி இன்றும் பொருந்தும்.ஆம் இந்தி திணிக்கப்படுகிறது என்றால் பெரியாரின்
அரசியல் வாரிசுகள் என்ன செய்கிறார்கள்.//

இன்றும் இந்தி திணிப்பு இருக்கிறதா? அல்லது இந்து ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்னும் கேள்விகளுக்கு முழு செய்தியை இணைப்பில் படியுங்கள்
http://thatstamil.oneindia.mobi/news/2007/11/29/3588.html

செய்தியின் சாரம்: "உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் தீர்ப்புகளை இந்தியில் வழங்க நாடாளுமன்றக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இதை கடுமையாக எதிர்த்து திமுக கூட்டணி எம்.பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மனு கொடுத்துள்ளன."

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியில் தீர்ப்பு வழங்க நீதிமன்றங்களுக்கு பரிந்திரைப்பது ஏன்? வழக்குகளின் தீர்ப்புகளை அறியவேண்டியவர்களில் தமிழகத்தில் எத்தனை பேர் இந்தி பேசும் மக்கள்? தமிழில் தீர்ப்பு வழங்க உத்தரவு வாழங்கினால் அதனால் மக்களுக்கு பெரும்பயனிருக்கும். அந்தந்த மாநில மொழிகளில் தீர்ப்புகளை உத்தரவு வழங்காமல் இந்தியை திணிப்பது கண்டிக்கப்பட வேண்டியது.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பெரியாரின் குரலை முதன்முதலாக இந்த வலைப்பதிவு மூலம் தான் கேட்டேன். நன்றி.

முழுக்க முழுக்க பெரியார் கருத்துக்களே இடம்பெறும் வண்ணம் இவ்வலைப்பதிவு அமைந்தால் நலம். குறைந்தபட்சம் இதில் பங்களிப்பவர்களின் தனி வாழ்க்கை இடுகைகள் கலக்காமல் இருக்க வேண்டுகிறேன். சொந்த இடுகைகளையும் பெரியார் கருத்துக்களையும் கலந்து தரும் வலைப்பதிவுகளைப் படிக்கையில் சில வேளை குழப்பமாக இருக்கிறது.

thiru said...

அன்பு அனானி,

பெரியார் 1965ல் இந்தி திணிப்பினை ஆதரித்தார் என்பது தவறானது. எந்த காலத்திலும் இந்தி திணிப்பினை ஆதரிக்கவில்லை. 1937ல் பெரியார் தான் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தார். பின்னர் அதுவே வளர்ச்சிபெற்று தேசிய இனப்போராட்டமாக மாறியது. ஆனால், 1965ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பெரியார் ஆதரிக்கவில்லை.

இதுபற்றி சுப.வீ அவர்களது கருத்து கீற்று.காம்ல் வெளிவந்தது அடைப்புகளுக்குள்...

//இந்தி எதிர்ப்பு போராட்டத்தை 1937ல் பெரியார்தான் முன்னெடுத்தார். அதுதான் முதன் முதலாக இங்கு தேசிய இனப் போராட்டமாக உருக்கொண்டது. தமிழ்நாடு தமிழருக்கே என்ற போராட்டமும் அங்கு இருந்துதான் பிறந்தது. ஆனால் 1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பெரியார் அங்கீகரிக்கவில்லை. மிக கடுமையான சொற்களால் அந்தப் போராட்டத்தை எதிர்த்தார். இதையும் நாம் வரலாற்றில் இருந்து மறைக்க வேண்டியதில்லை. காமராசரைச் சார்ந்து, காமராசர் இருந்தால்தான் தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையில் சொன்ன வார்த்தைகள் அவை. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அரசியல் குரல் கொஞ்சம் மேலோங்கி ஒலித்துவிட்டதாகவே கருத வேண்டியிருக்கிறது. ஆனால் பிறகு பல நிலைகளில் பெரியார் தமிழுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார்.//

1940களில் தமிழ் ஆட்சிமொழியாக வேண்டுமென பெரியார் கருத்து தெரிவித்து குடியரசு பத்திரிக்கையில் வந்திருக்கிறது.

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்காத பெரியார் 1970 டிசம்பர் முதல் தேதி விடுதலை பத்திரிகையில் தமிழே பயிற்று மொழியாக வேண்டும். பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு அதுவே உதவுமென்று எழுதியிருக்கிறார். மொழிக் கொள்கையில் பெரியார் கொண்டிருந்த இறுதி நிலைபாடு இது தான்.

thiru said...

//ரவிசங்கர் said...
பெரியாரின் குரலை முதன்முதலாக இந்த வலைப்பதிவு மூலம் தான் கேட்டேன். நன்றி.

முழுக்க முழுக்க பெரியார் கருத்துக்களே இடம்பெறும் வண்ணம் இவ்வலைப்பதிவு அமைந்தால் நலம். குறைந்தபட்சம் இதில் பங்களிப்பவர்களின் தனி வாழ்க்கை இடுகைகள் கலக்காமல் இருக்க வேண்டுகிறேன். சொந்த இடுகைகளையும் பெரியார் கருத்துக்களையும் கலந்து தரும் வலைப்பதிவுகளைப் படிக்கையில் சில வேளை குழப்பமாக இருக்கிறது.//

ரவிசங்கர்,

வருகைக்கு நன்றி!

சொந்த இடுகைகளோ, தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களோ இந்த வலைப்பதிவில் வராத வண்ணமிருக்க உங்களது ஆலோசனையை ஏற்கிறேன்.

தொடர்ந்து பெரியார் பேசிய, எழுதியவை மட்டுமே இந்த வலைப்பதிவில் வரும்.

நன்றி!

Anonymous said...

1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி நுழைவதை,திணிப்பை எதிர்த்து நடந்த ஒன்று. அதை எதிர்ப்பது என்பது இந்திக்கு ஆதரவான நிலைதான். காமராசாருக்கு ஆதரவு தருவது என்ற பெயரில் இந்தி எதிர்ப்பை ஏற்க மறுத்தவர் பெரியார்.
இதை பூசி மொழுகியாவது சுப.வீ
ஒப்புக்கொள்கிறார்.நீங்கள் ஒரேடியாக
பொய்யை உண்மை என்கிறீர்கள்.

டண்டணக்கா said...

/*...அதை எதிர்ப்பது என்பது இந்திக்கு ஆதரவான நிலைதான். காமராசாருக்கு ஆதரவு தருவது என்ற பெயரில் இந்தி எதிர்ப்பை ஏற்க மறுத்தவர் பெரியார்...*/

NOT TRUE.

நான் பெரியாரை பெரிய அளவு வாசித்தது கிடையாது, ஆனால் காமராஜரை ஓரளவு நன்கு வாசித்துள்ளேன். அந்த அளவில் காமராஜ் சார்பு பெரியாரின் பல் நிலைப்பாடுகளை என்னால் புரிந்து கொள்ளவும், விளக்கவும் மற்றும் தரவுகள் கொடுக்கவும் முடியும். இதை புரிந்து கொள்ள காமராஜ் என்ற மையப்புள்ளியில் இருந்து நிகழ்வுகளை உள்வாங்குவது அவசியம். பெரியார் எனும் மையப்புள்ளியை மட்டுமே உள்நொக்கினால், சில நிலைப்பாடுகள் புரிவது கடினம், அல்லது முரன்நகையாக தோன்ற வாய்ப்பு உள்ளது.

1965-ம் ஆண்டு தமிழகத்தில் காமரஜ் ஆட்சி, மைய அரசு தனது கொள்கை மூலம் தமிழகத்தில் கட்டாய கிந்தி கொண்டு வந்தது. சென்னையில் காமராஜ் கவனத்திற்கு வருகிறது. அதிகாரிகள் கூட்டத்தில் காமராஜ் கடுமையாக மறுக்கிறார் மற்றும் மைய அரசுடன் பேசி முடிவை திரும்ப பெற வலியுறுத்த வேண்டுமென்கிறார். அதே சமவம் பெரியாரும் காமராஜை இவ்விசயம் சார்பாக தொடர்பு கொள்கிறார்.

காமரஜ் தனது நிலைப்பாட்டை விளக்கி, தமிழகத்தில் செயல் படுத்தா வண்ணம் மத்திய அரசுடன் பேசப்படும் என உறுதியளிக்கிறார். அதன் படி பிரதமர் சாஷ்திரியுடன் பேசி கட்டாய கிந்தி சூழ்நிலையை தணிக்கிறார்.

இவையனைத்தும் நடக்கும் போதே, அண்ணாவின் போராட்டமும் வெடிக்கிறது.

இதற்கு மேல் நான் விளக்க தேவையில்லை. தரவுகள் உள்ளன, உங்கள் புரிதல் :-).
ஒன்று மட்டும் என்னால் 100% உறுதியாக கூற முடியும் (தரவுகளுடன்)...சமூக போராட்டத்தில் பெரியாரின் அனைத்து நிலைகளையும் விளக்க எனக்கு வாசிப்ப்பு குறைமு, ஆனால் பெரியாரின் அரசியல் நிலைப்பாடு, 100% காமரஜ் ஆதரவு மட்டுமே (கண்மூடித்தனமாக் எனலாம்...:-) ..).

காமராஜ் எனும் மையப்புள்ளியிலிருந்து நோக்கும் பொழுது, பெரியாரின் 1965 அண்ணா போராட்ட எதிர்ப்பை என்னால் புரிந்து கொள்ள இயலுகிறது.

காமராஜ், பெரியார் எனும் இரு பெரும் புள்ளிகள் எவற்றில், எவ்வாறு, எங்கெல்லாம் இணைத்தன எனும் புரிதல்கள் நமக்கு பல உண்மைகளை புரிய உதவும்.